விஜய்க்கு அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் போட்டுக்கொடுத்த அரசியல் திட்டம் பல வகைகளிலும் பணால் ஆனது. அதில் ஆகப்பெரிய பணால்தான் ஜெயலலிதாவிடம் மண்டியிட்டது. மண்டியிட்டவர்களை சும்மாவிடும் பழக்கம் ஜெயலலிதாவிற்கு பிறவியிலேயே கிடையாது. அந்தப் பிறவிக்குணத்தின்படி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை, விஜய்யின் படம் ரிலீசாவதற்கு பேப்பாடு பெரும்பாடு பட்டது.
கடந்த தீபாவளிக்குக் கூட அரைவேக்காடு டைரக்டர் ஏ.ஆர்.முருக தாஸின் "சர்கார்' படமும் ஆளும்கட்சியின் கைங்கர்யத்தால் சிக்கிச் சின்னாபின்னமானது.
இப்படி எல்லாமே எஸ்.ஏ.சி. எடுத்த ஏடாகூடமான முடிவு களால் எக்குத்தப்பாக மாறிப்போனது.
பார்த்தார் விஜய்...
"அப்பாவாக இருந்தாலும் இனிமே அளவோடு தான் வச்சுக்கணும்' என்ற முடிவுக்கு வந்து விட்டார். விஜய் நற்பணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்தைக் கூப்பிட்டு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார்.
அந்த ஆலோசனையில், ""பேரூர், நகரம், மாநகரம் இவற்றில் நற்பணி இயக்கம் வலுவாக இருக்கிறது.
அதைவிட பத்து மடங்கு வலிமையாக கிராமங்களிலும் இருக்க வேண்டும். அதை வலுப்படுத்தும் வேலைகளில் தீவிர கவனம் செலுத்துங்கள்.
அதுவும் ஒரு வருடத்திற்குள்'' எனக் கூறியிருக்கிறாராம் விஜய். இதைக்கேட்ட ஆனந்தும் ஆனந்தமாகக் களத்தில் இறங்கிவிட்டாராம்.
அனைத்து வேலைகளும் முடிவடையும் நேரத்தில், தனது மகன் ஜேஸன் சஞ்சய்யை சினிமாவில் இறக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் விஜய். "அது என்ன ஒரு வருட கணக்கு?' என விஜய் வட்டாரத்தில் விசாரித்தோம்.'' சட்டமன்றத் தேர்தல்தான் நமது இலக்குன்னு ரஜினி சொல்லிட்டாரு.
அந்த நேரத்துல தானும் அரசியல் களத்தில் குதிக்கும் முடிவோடுதான் கிராமங்களில் நற்பணி இயக்கத்தை வலுப் படுத்தச் சொல்லிருக்காரு. இப்போது கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் அட்லீ டைரக்ஷனில் நடித்துவரும் படத்திற்கு அடுத்து, ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, முழுநேர அரசியல்வாதியாகி விடும் மாஸ்டர் ப்ளானுடன் விஜய் இருக்கிறார். அது எந்தளவுக்கு ஒர்க்-அவுட் ஆகும்னு தெரியல'' என்கிறார்கள்.
ரஜினியின் "லேட் ப்ளான்', விஜய்யின் "மாஸ்டர் ப்ளான்'னு என்னென்னமோ சொல்றாக... நாம என்னத்தக் கண்டோம்?
-ஈ.பா. பரமேஷ்