சூப்பர் ஸ்டார் ரஜினி, திரை உலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் ஏ.வி.எம். ஸ்டுடியோவிலுள்ள டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசினார்.
சில வருடங்கள் பிரசாத் ஸ்டுடியோவில் டப்பிங் பேசினார். "தளபதி', "அண்ணாமலை', "வீரா', "பாட்ஷா' படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சென்டிமென்டால், தொடர்ந்து குட்லக் தியேட்டர் (இப்போது ஃபோர் பிரேம்) டப்பிங் தியேட்டரில் பேசினார்.
சமீபத்திய "கபாலி' வரைக்கும் ஃபோர் பிரேம் தியேட்டரில் டப்பிங் பேசிய ரஜினி, இப்போது "காலா'-விற்கான டப்பிங்கை "நாக்' (KNACK) ஸ்டுடியோவில் இருக்கும் அதிநவீன, மிகப் பிரம்மாண்டமான ஸ்டுடியோவில் டப்பிங் பேசி முடித்துள்ளார். நாதெள்ளா சம்பத் செட்டிக்குச் சொந்தமான இந்த ஸ்டுடியோவுக்கு ரஜினி இடம் மாறிய ரகசியம் என்ன?
தமிழ் சினிமா மட்டுமல்ல; தென்னிந்திய சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் மிகமிக நன்றாகத் தெரிந்தவர் "குட்லக்' கல்யாணம். சென்னை அண்ணாசாலையில் இருந்த ஆனந்த் தியேட்டரின் உதவி மேனேஜராக தனது தியேட்டர் வாழ்க்கையைத் துவக்கினார் கல்யாணம். அதன்பின் மினி ஆனந்த் தியேட்டரின் மேனேஜராகி, தியேட்டர் தொழில்நுட்பங்களைத் தெளிவாகக் கற்றார்.
சில பிரிவியூ தியேட்டர்களின் மேனேஜராகப் பணியாற்றியபின், நீண்ட வருடங்கள் குட்லக்கின் மேனேஜராகக் கோலோச்சியவர் கல்யாணம்.
பிரஸ் ஷோவுக்கு வரும் பத்திரிகையாளர்களை, தனது வீட்டு விசேஷங்களுக்கு வருபவர்களை வரவேற்பது போல, எப்போதுமே சிரித்த முகத்துடன் வரவேற்கும் பண்புகொண்ட பாசக்காரர் கல்யாணம். கல்யாணம் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் கலகலப்பு இருக்கும்.
குட்லக்கில் இருந்து விலகி, சில மாதங்கள் பிரசாத் ஸ்டுடியோவில் பணியாற்றிய கல்யாணம், இப்போது "நாக்' ஸ்டுடியோ கல்யாணம் என அழைக்கப் படும் அளவுக்கு தனது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
"காலா'-விற்காக ரஜினி இடம் மாறிய ரகசியத்தைக் கல்யாணத்திடம் கேட்டோம்.
""ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமானது இந்த "நாக்' ஸ்டுடியோ. பெரியவர் அனந்த பத்மனாபனின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்தவர் ஆனந்த ராமானுஜம். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த ஆனந்த ராமானுஜம் அவர்கள், தனது நண்பர்களிடம் சினிமா தொழில்நுட்பம் குறித்து சீரியசாக டிஸ்கஸ் பண்ணும்போது, வந்த ஐடியாதான் இந்த பிரம்மாண்ட ஸ்டுடியோ.
டப்பிங், மிக்ஸிங், சி.ஜி., டி.ஏ., ரிக்கார்டிங் என சினிமாவுக்குத் தேவையான அனைத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் ஒரே இடத்தில் முடித்துக் கொள்ளும் வசதிகளுடன் 90 கோடி ரூபாய் பட்ஜெட் டில் இந்த ஸ்டுடியோவை நிர்மாணித்துள்ளார். மற்ற ஸ்டுடியோக்களில் 8 மணி நேரம் நடக்கும் வேலைகளை இங்கே 80 நிமிஷத்தில் முடித்துக்கொள்ளும் அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பம் இருக்கிறது.
இந்த ஸ்டுடியோ ஆரம்பித்து ஏழு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் அனைத்து இயக்குனர்களிடமும் டபுள் ரீச்சாகிவிட்டது. ""கல்யாணம் அண்ணே, கோடம்பாக்கத்தில் இருந்த சினிமாவை மைலாப்பூருக்கு கொண்டு போயிட்டீங்கன்னு சில டைரக்டர்கள் சொல்லும் அளவுக்கு இதன் தரம் இருக்கிறது.
"காலா' ஷூட்டிங் மும்பையில் நடந்து கொண்டிருந்தபோது, ரஜினி சாரைச் சந்தித்தேன். அப்போது இந்த ஸ்டுடியோவைப் பத்திச் சொல்லிட்டு, உங்க வீட்லயிருந்து முக்கால் நிமிஷத்தில் ஸ்டுடியோவுக்கு வந்திடலாம்னு சொன்னேன், அவ்வளவுதான். "நாக்' ஸ்டுடியோவிலேயே டப்பிங் பேசலாம்னு ரஜினி சார் சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
முதன்முதலாக இந்த ஸ்டுடியோவுக்கு அவர் வந்ததும் எனக்குள் அப்படி ஒரு பரவசம். எல்லா தொழில்நுட்ப அறைகளுக்கும் அழைத்துச்சென்று காண்பித்தேன். "அப்ப இருந்து இப்ப வரைக்கும் எனர்ஜியை அப்படியே மெயின்டெய்ன் பண்றீங்களே கல்யாணம்'னு ரஜினி சார் சொன்னதும் எனக்கு இன்னும் அதிகமாகவே எனர்ஜியைக் கொடுத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிப்பட வேலைகளும் இங்கு நடக்கின்றன. மரியாதை யான வரவேற்பு, பத்திரமான வழியனுப்பு, இதுதான் நாக் ஸ்டுடியோவின் பாணியும் இந்த கல்யாணத்தின் பாணியும்'' என தனது பாணியில் கலந்துகட்டி அடித்தார் கல்யாணம்.
-ஈ.பா. பரமேஷ்வரன்
ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுந்தர்