காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு, ஊரைவிட்டு ஓட்டம், வெட்டு, குத்து, காதலர்கள் கொலை, தற்கொலை இப்படிப்பட்ட சினிமாக்களைப் பார்த்து சலித்து புளித்துப் போனோம். ஆனால் ’இந்த "பியார் பிரேமா காதல்' மனசுக்குள் புது வெள்ளத்தைப் பாய்ச்சுகிறது. பக்கத்து கம்பெனி ஜன்னல் வழியாக ரெய்சாவைப் பார்த்துப் பார்த்து உருகுகிறார் ஹரீஷ் கல்யாண். அந்த ரெய்சாவோ தான் வேலை பாக்கும் கம்பெனிக்கே வந்ததும் உள்ளுக்குள் உற்சாகம் பீறிடுகிறது ஹரீஷுக்கு.

ppl

ஹரீஷை பஃப்புக்கு கூட்டிப் போகிறார் ரெய்சா. அங்கே ஃபுல் மப்பை ஏற்றிக் கொண்டு, ஹரீஷிடம் குறும்பு செய்கிறார். எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகும்போது, எனக்கு தொண்டை ஒருமாதிரியா இருக்கு. எனக்கு ஹால்ஸ் வாங்கிட்டு, ஒனக்கு "ஏதாவது' வாங்கிட்டு வா என்கிறார். அந்த ஏதாவது என்பது காண்டம் என்பதை லேட்டாகப் புரிந்து கொண்டு உற்சாகமாகி, வீட்டுக்குச் சென்றதும் கட்டிலில் ஒன்றாகிறார்கள். "ஜஸ்ட் ரிலாக்ஸ் நோ பிராப்ளம்' என ரெய்சா சொன்னதும்தான், தனது காதலைச் சொல்கிறார் ஹரீஷ். ஆனால் ரெய்சாவோ இதெல்லாம் சகஜம் என காதலை ரிஜெக்ட் பண்ணுகிறார்.

அவர்கள் காதல் ஜெயித்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அடேங்கப்பா செமையா எடுத்துருக்காண்டா. இப்படி ஒரு ஃபீல் லவ் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என பேசும் அளவுக்கு புதுவித ட்ரீட் கொடுத்திருக்கிறார் டைரக்டர் இளன். ஹரீஷும் செம பெர்ஃபாமன்ஸ் காட்டியிருக்கிறார். "பிக்பாஸ்' வீட்டில் இருந்த புள்ளையா இப்படி நடிச்சிருக்கு எனக் கேட்கும் அளவுக்கு தூள் கிளப்பியிருக்கிறார் ரெய்சா. அதிலும் ஹரீஷுக்கும் அவருக்கும் நடந்த சண்டைக்குப் பிறகு, சமாதானம் பேச வரும் ஹரீஷின் நண்பன் தீப்ஸை, போடா தே .பையா எனக் கேட்கிறாரே ஒரு கேள்வி, தியேட்டரில் செம அப்ளாஸ்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சீட்டைவிட்டு எழுந்து போகவிடாமல் கட்டிப் போட்டிருப்பவர் இசைஞானியின் புதல்வர் யுவன்சங்கர் ராஜாதான். பாடல் காட்சிகளில் இளமைத் துள்ளல், சோகம், உற்சாகம், கோபம் என வித்தை காட்டிய யுவன், சீனுக்கு சீன் பின்னணி இசையில் ராஜாங்கமே நடத்தியிருக்கிறார், இது யுவனின் சொந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமராமேன் ராஜா பட்டாச்சார்யா, எடிட்டர் மணிக்குமரன் சங்கரா மற்றும் படத்தின் அனைத்து கேரக்டர்களும் டைரக்டர் இளனுக்கு தோள் கொடுத்து, பியார் பிரேமா காதலை வாழ வைத்திருக்கிறார்கள்.