""நடிச்சா இனிமே ஹீரோவாத் தான் நடிப்பேன். அதனால இனிமே எந்த டைரக்டரும் காமெடி ரோல் பண்ணுங்கன்னு கேட்டு வராதீங்க'' என ஓப்பனாகவே சொல்லிவிட்டார் சந்தானம். ஆனால், பல தயாரிப்பாளர்களுக்கு இனிமா கொடுத்து நொந்து நொம்பலமாக்கி விட்டார் சந்தானம்.
ராம்பாலா டைரக்ஷனில் சந்தானம் ஹீரோவாக நடித்த "தில்லுக்கு துட்டு' ஹிட்டடித்ததும், பல தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்று, சந்தானத் தின் கால்ஷீட்டுக்காக தவம் இருந்தனர். சம்பளத்தையும் தாறு மாறாக உயர்த்தினார் கள். இதில், பாலா டைரக்ஷனில் "நான் கடவுள்' படத்தைத் தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் பேனரின் கே.எஸ். சிவராமனும், கே.எஸ். சீனிவாசனும் "ஓடி ஓடி உழைக்கணும்' படத்தை 2016-ல் தயாரிக்க ஆரம்பித்தனர். சந்தானத்திற்கு ஜோடி அமைரா தஸ்தூர், டைரக்ஷன் கே.எஸ். மணிகண்டன். படம் முக்கால்வாசி முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்த நிலையில், கிடப்பில் போடப்பட்டது.
சந்தானத்திற்கு மார்க்கெட் வேல்யூ அதிகம் இருப்பதாக நம்பி, பிரபுதேவா- லட்சுமி மேனன் காம்பினேஷனில், எம்.எஸ். அர்ஜுன் டைரக்ஷனில் "யங் மங் சங்' படத்தை அதே 2017-ல் தயாரிக்க ஆரம்பித்தனர் சீனிவாசனும் சிவராமனும். இதற்கடுத்ததாக மம்முட்டி மகன் துல்கர் சல்மானை வைத்து "ஒரு பக்க கதை' என்ற படத்தையும் தயாரிக்க ஆரம்பித்தனர். இப்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரித்து அகலக்கால் வைத்ததாலும், சந்தானம் பண்ணிய குளறுபடிகளாலும் இப்போது மூன்று படங்களும் டிராப் ஆகிவிட்டன. சென்னை அசோக்நகரில் இருந்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் அலுவலகமும் காலி செய்யப்பட்டுவிட்டது.
சீனீவாசன், சிவராமன் கதையைப் போலத்தான் விடிவி கணேஷ் கதையும்.
சந்தானம்- வைபவி சாண்டில்யா காம்பினேஷனில் அக்டோபர் 2016-ல் "சக்கப் போடு போடு ராஜா' என்ற படத்தை ஆரம்பித்தார் தயாரிப்பாளர் விடிவி. கணேஷ். பாதிக்கும்மேல் ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்தப் படத்தின் கதி என்னவென்றே தெரியவில்லை.
இது எதுவுமே தெரியாமலோ, இல்லை தெரிந்தோ ஜெ. செல்வக்குமார் என்ற புதிய தயாரிப்பாளர் ஆனந்த் பால்கி டைரக்ஷனில், சந்தானம்- வைபவி சாண்டில்யா ஜோடியில் "சர்வர் சுந்தரம்' என்ற படத்தை எடுத்து முடித்தும் ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கிறார்.
2017-ல் செல்வராகவன் டைரக்ஷனில், சந்தானம்- அதிதி போன்கர் ஜோடியில் "மன்னவன் வந்தானடி' என்ற படம் ஆரம்பிக்கப்பட்டது. சுஷாந்த் பிரசாந்த் என்ற தயாரிப்பாளருடன் செல்வராகவனும் அவரது மனைவி கீதாஞ்சலியும் இணைந்து படத்தைத் தயாரித்தனர்.
சந்தானம் பண்ணிய குளறுபடிகளால் படத் தயாரிப்பு பங்களிப்பிலிருந்து விலகிவிட்டார் செல்வராகவன். பிரபல வாரப் பத்திரிகை ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி கொடுத்த செல்வராகவன், "மன்னவன் வந்தானடி' படத்தின் நிலைமை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என ஓப்பனாகவே சொல்லிவிட்டார்.
இந்த நிலையில்தான், சமீபத்தில் "தில்லுக்கு துட்டு-2' ரிலீஸ் ஆனது. இதில் சந்தானத்திற்கு ஜோடி ஸ்ரிதா சிவதாஸ். இந்தப் படம் ஹிட் என வெளியில் நியூஸ் பரவினாலும், உண்மை நிலவரம் கலவரம்தானாம். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ராஜ் நாராயணன் என்ற தயாரிப்பாளர் "ஏ-1' என்ற படத்தை 2018 அக்டோபரில் ஆரம்பித்து, படத்தையும் முடித்திருக்கிறார்.
ஹிந்தி, தெலுங்கில் பிரபலமான தாரா அலிசா பெரி என்னும் இளம் ஹீரோயின்தான் சந்தானத்திற்கு ஜோடி.
சந்தானத்தை வைத்து படங்களை எடுத்து, அவற்றை ரிலீஸ் பண்ண முடியாமல் நொந்து தவிக்கும் தயாரிப்பாளர்கள், விரைவில் பஞ்சாயத்தைக் கூட்டும் முடிவில் இருக்கிறார்களாம்.
-ஈ.பா. பரமேஷ்வரன்