"இது யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும், அவரின் ஒருசில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும். உங்க மேடைப் பேச்சைக் கேட்ருக்கேன், ரசிச்சுருக்கேன். இரண்டு மூன்றுமுறை உங்களிடம் ஃபோனில் பேசியிருக்கேன். நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்னு நீங்க உங்க மேடையில என்னைப் பற்றியும் எனது சேவைகளைப் பற்றியும் தாறுமாறா பேச ஆரம்பிச்சீங்க. தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தினீர்கள்.
நீங்கள் பேச ஆரம்பித்ததும் உங்களுடைய ஒருசில தொண்டர்களும் என்னைப் பற்றியும் எனது படங்களைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் நாலாந்தர நடையில் பதிவுசெய்கிறார்கள். எனக்கு ஏற்பட்டதுபோலவே பல அரசியல் தலைவர் களுக்கும் சினிமா நண்பர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நான் பாட்ல சிவனேன்னு என்னோட பொழப்ப பார்த்துக்கிட்டிருக்கேன். இனிமேலும் என்னைச் சீண்ட நினைத்தால் களத்தில் இறங்க நானும் தயார்'' இப்படி ஒரு காரசார அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டார் "காஞ்சனா-3' படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ்.
அந்த அறிக்கையில் ராகவா குறிப்பிட்டிருந்த அந்தத் தலைவர் யார் என்பது அரசல் புரசலாக அல்ல, ஓரளவு தெரிந்த நிலையில் வாண்டடாக வந்து வண்டியில் ஏறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
""எங்க அண்ணன் சீமானைத்தான் நீ குறிவச்சிருக்கேன்னு எங்களுக்குத் தெரியும். யாரைப் பார்த்து சவால் விடுற? சவால் விடணும், மோதிப் பார்க்கணும்னா நடிகை ஸ்ரீரெட்டி கிட்டதான் நீ மோதணும்! பயந்துபோன மாதிரி நடிக்கிற பேய்ப்படத்துலகூட நடிகைகளின் இடுப்புல ஏறி உட்காரும் நீ, எங்க அண்ணனுக்கு சவால் விடுறயா? "காஞ்சனா-3' படத்தின் பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி சீப்பான வேலையெல்லாம் பார்க்காதே. தேன் கூட்டில் கை வைக்காதே'' என சீமானுக்காக வரிந்து கட்டி பொளந்து கட்டியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
ஏன் இந்த நிஜ ஃபைட் என கோலிவுட் ஏரியாவில் நாம் விசாரித்தபோது, ""அந்தத் தரப்பு, இந்த தரப்புகிட்ட பெரிய அளவுல எதிர்பார்த்துச்சு. அது நடக்காததால இப்படி யெல்லாம் நடக்குது. சீமானே சும்மா இருக்கும்போது சுரேஷ் காமாட்சி ஏன் ஆவேசப்பட்டார்னு தெரியல'' என்கிறார்கள்.
-ஈ.பா. பரமேஷ்வரன்