"தண்டகன்' பட ஆடியோ வெளியிட்டு விழாவில் டைரக்டர் ஆர்.வி. உதயகுமார் பேசிய உண்மைகள்.
""சினிமா ஒரு நல்ல, அருமை யான தொழில். இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது. இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது. அது பலருக்கும் தெரிவதில்லை.
இதுவரை நான் சொல்லாத விஷயம் இது. "பொன்னுமணி' படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன்.
சௌந்தர்யா முதலில் என்னை "அண்ணா' என்றார். பிறகு அழைக்கும்போதெல்லாம் "அண்ணன்' என்றழைத்தார்.
எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. "இன்னொருவர் மத்தியில் பேசும் போது சார் என்று கூப்பிடு' என்றேன்.
ஆனால், அவர் "அண்ணா' என்று அழைத்ததுமுதல் கடைசிவரை சௌந்தர்யாவுக்கு நான் அண்ணனாகவே இருந்தேன். என்மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அன்பும் அதிகதுள்ள நடிகை சௌந்தர்யா.
அவர் வளர்ந்து, நடிகையாகி ஆயிரம் பிரச்சினைகளிலும், காதல் பிரச்சினைகளிலும் சிக்கிய போதெல் லாம் நான்தான் சென்னை, ஹைதராபாத் என்று போய் பஞ்சாயத்து செய்துவிட்டு வருவேன்.
அவர் சொந்த வீடு கட்டியபோது என்னை அழைத்திருந்தார்- "நீங்கள் வந்தால் தான் வீட்டுக்குள் செல்வேன்' என்றெல்லாம் கூறியபோதும், என்னால் செல்ல முடியவில்லை. மாமன் மகனைத் திருமணம் செய்ய முடிவானபோதும் அழைத்தார். போகமுடியவில்லை. தமிழில் 'சந்திரமுகி'-யாக வெற்றிபெற்ற படத்தை கன்னடத்தில் "ஆப்தமித்ரா' என்ற பெயரில் வாசு எடுத்திருந்தார். அதில் சௌந்தர்யாதான் நடித்திருந்தார். எனக்கு ஒருநாள் போன் செய்து. ""அண்ணா என் சினிமா வாழ்வு இத்துடன் முடிந்துவிட்டது. நடிப்பு வாழ்க்கை முடிந்துவிட்டது. இனிமேல் நான் படங்களில் நடிக்கமாட்டேன்.
"ஆப் த மித்ரா'-தான் என் கடைசிப் படம். நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன்'' என்று என்னிடமும், என் மனைவி யிடமும் இரவு ஏழரை மணிமுதல் எட்டரை மணிவரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டி ருந்தார். தன் அண்ணனின் வற்புறுத்தலால் பிஜேபி கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார். மறுநாள் காலை ஏழு முப்பதுக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார். அவர் வீட்டுக் கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை. திருமணத்திற்குச் செல்ல முடியவில்லை. இறப்புக்கு செல்லலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். மிகப் பிரம்மாண்டமான வீடு கட்டியிருந்தார். உள்ளே சென்றபோது எனது படத்தை பெரிதாகப்போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.
அப்படிப்பட்ட நடிகை சௌந்தர்யா. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், சினிமா அருமையான ஒரே குடும்பம் போன்ற உணர்வுள்ள தொழில். இங்கே இயக்குநரை நடிகை தீபா "அப்பா' என்று அழைத்தார்.
அதற்காக இயக்குநர் வருத்தப்படத் தேவையில்லை. அது பெருமையான விஷயம்.'' என கண்ணீருடனும் உருக்கமுடனும் பேசினார் உதயகுமார்.