மிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து கடந்த வாரம் அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கவிஞர் வைரமுத்துவின் உரை:

vairamuthu

""தொல்காப்பியம் கட்டிக்கொடுத்த கட்டுமானத்தின்மீதுதான் மூவாயிரம் ஆண்டு நீண்ட தமிழ் நின்று நிலை கொண்டிருக்கிறது. எத்தனையோ அரசு அதிகாரங்களும் ஆட்சி அதிகாரங்களும் தோன்றித் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களும் இன்றுவரை அழியாமல் தமிழை ஆண்டுகொண்டிருக்கின்றன. இந்திய அரசமைப்புகூட 101 முறை திருத்தப் பட்டிருக்கிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கணிக்கப்படுகிற தொல்காப்பியம் திருத்தம் தேவையில்லாத திறம்கொண்டிருக்கிறது. வடமொழியும் வடநாட்டார் பண்பாடும் தமிழர்மீது வல்லாதிக்கம் செலுத்தத் தலைப்பட்ட காலத்தில் தமிழின் மொழி மரபையும் தமிழர்களின் பண்பாட்டு மரபையும் நீர்த்துப்போகாமல் காத்துவைத்த பெருமை தொல்காப்பியத்துக்குண்டு.

இன்றைய காவிரிப் பிரச்சினைக்கும் தொல்காப்பியத்துக்கும்கூடத் தொடர்பிருக்கிறது. இந்த மண்ணுக்கென்று காலங்காலமாக உரிமைப்பட்ட காவிரி ஆறு இன்று மறுக்கப்படுகிறது. கடந்த நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது.

தமிழ்நாட்டில் பாலைவனம் என்று தனிநிலம் கிடையாது. முல்லையும் குறிஞ்சியும் நீர்வளம் இழக்கும்போது பாலை நிலமாய்த் திரிகின்றன. இப்போது காவிரி மறுக்கப்பட்டால் தஞ்சை மண்டலமாகிய மருதநிலமும் தன்னிலை திரிந்து பாலைவனமாகிவிடும். இதைத்தான் மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும் என்கிறார் தொல்காப்பியர். இந்திய இறையாண்மை இதை ஏற்றுக்கொள்கிறதா?

தண்ணீர்தான் கேட்டோம்; எங்கள் நிலத்தைப் பாலைவனமாக்கி எங்கள் வாயில் பாலை ஊற்றுவதா?

பட்டினப்பாலையும் சிலப் பதிகாரமும் தமிழ்நாட்டுக்கு எழுதிவைத்த உயில்தான் காவிரி. அது மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம். எங்கள் இலக்கியங்கள் எல்லாம் புலமையின் பொழுது போக்குகள் அல்ல. அறுந்துபோகாத வரலாற்றுச் சங்கிலிலிகள்; உடைக்க முடியாத உரிமைச் சாசனங்கள்'' என கொந்தளித்தார் கவிஞர் வைரமுத்து.