மீண்டும் தமிழ்த் திரையுலகுக்குத் திரும்பவிருக்கிறார் இஷா கோபிகர். அரவிந்த் சாமியுடன் "என் சுவாசக் காற்றே', விஜயகாந்துடன் "நரசிம்மா', அகத்தியனின் "காதல் கவிதை', விஜய்யுடன் "நெஞ்சினிலே' படங்களின் நாயகியான அவர், இப்போது சிவகார்த்திகேயேனின் "அயலான்' படம்மூலம் தமிழுக்கு மீண்டும் வந்திருக்கிறார்! அவருடன் ஒரு ஜாலி உரையாடல்.
தமிழில் நான்கைந்து படங்கள் நடித்து கவனம் பெற்றீர்கள். பின் காணாமல் போய்விட்டீர்களே...
உண்மையிலே அதுகுறித்து நான் வருத்தப்படுகிறேன். மும்பையைச் சேர்ந்தவளான எனக்கு இங்கேவந்து செட்டிலாவதில் சிரமங்கள் இருந்தன. தவிரவும், அப் போது எனக்கு ஹிந்தியில் படவாய்ப்புகள் வந்தன; அதனால்தான்.
"அயலான்' படத்தில் உங்களது கதாபாத்திரம் என்ன?
நான் இதுவரை காத்துக் கொண்டிருந்த மாதிரியான கதாபாத்திரம். எதிர்மறை கதாபாத்திரம் வலுவாக இருக்கும்போதுதான் நாயக பாத்திரத்துக்கு கவனம் கிடைக்கும். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சார் நாயகன் பாத்திரம் என்றால், எனது பாத்திரம் எதிர்மறையானது. எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
திரும்பவும் தமிழ்ப் பட சூழலுக்குள் வந்திருக்கிறீர் கள். வரவேற்பு எப்படி யிருக்கிறது?
ரசிகர்களிடமிருந்தும் திரைத்துறையினரிடமிருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது. "என் சுவாசக் காற்றே', "காதல் கவிதை' பண்ணும்போது படப்பிடிப்பில் என்னைச் சுற்றியிருந்தவர்கள் தமிழில் பேசுவார்கள். நான் மொழிகளை விரைவாகக் கற்றுக்கொள்பவள். தமிழை முழுமையாகக் கற்றுமுடிக்கும் முன்பே இந்திப் படங்களுக்குச் சென்றுவிட்டேன். இம்முறை பெரும்பாலும் யாருமே என்னிடம் தமிழில் பேசவில்லை. அதனால் படப்பிடிப்பில் சுற்றியிருப்பவர்களிடம் என்னிடம் தமிழில் பேசும்படியே சொல்லியிருக்கிறேன். படத்தில் என் பெயர் எலிஸா. படத்தில் எனக்கு மிகக் குறைவான வசனங்கள்தான். எனக்குப் பதில் எனது ஆக்ஷன்கள்தான் படத்தில் பேசும்.
உங்களது தற்காப்புக் கலை பயிற்சி காரணமாகத் தான் இந்தப் படம் கிடைத்ததா?
18 வருடங்களாக தற்காப்புக் கலையில் நான் பயிற்சி பெறுபவள். டேக்வாண்டோ, ஹாப்கிடோ பயின்றிருக்கிறேன். நான் திரைப் பின்புலமில்லாத குடும்பத்திலிருந்து வந்தவள். எனது தற்காப்புக் கலை பயிற்சி காரணமாகத்தான் கடந்த வருடங்களில் ஆறுக்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் கதாபாத்திரம் அமைந்ததென நினைக்கிறேன். கொலையாளியாக, முழுக்க எதிர்மறையானவளாக, சண்டைப் பின்புலமுள்ளதாக என் ரோல் அமையுமென யூகிக்கிறேன்
திரைத்துறையில் இருப்பதுபோலவே அரசியலிலும் ஆர்வமுடையவர். அது உங்கள் திரைவாழ்க்கையில் தாக்கம் செலுத்துவதாக நினைக்கிறீர்களா?
இல்லை. அரசியலை வைத்து எனது திரைவாழ்வை உருவாக்குபவள் அல்ல; அதில் எனக்கு ஆர்வமுமில்லை.
நீங்கள் இப்போது அம்மாவும்கூட. ஜாலியான அம்மாவா...கண்டிப்பான அம்மாவா... எப்படி நடந்துகொள்கிறீர்கள்?
இரண்டும்தான். எதுவும் எளிதில் கிடைத்துவிடாது என்பதை, குழந்தையின் ஒவ்வொரு ஆசைக்கும் ஆமாம் சொன்னால், அவன் உணர்ந்துகொள்ள மாட்டான். அதனால் கேட்பதற்கெல்லாம் பெரும்பாலும் இல்லையென்றே சொல்வேன்.