ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம் "நோட்டா.' தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலிலில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், இயக்குநர்கள் பா. இரஞ்சித், ராஜேஷ் எம்., டீகே, சாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில், ""ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால்தான் என் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினேன்.
இந்நிறுவனம் தயாரித்த "மெட்ராஸ்' என்ற படம் தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது. அதேபோல் தமிழ் சினிமாவில் "நோட்டா' படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.