முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் "சந்தோஷத்தில் கலவரம்.' இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீகுரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது-
""இங்கே உள்ள படக்குழுவைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு தமிழில் பேச முயற்சிசெய்து தமிழில் பேசினார்கள். கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்துத் தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அதுவும் ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார்.
இங்கே பேசும்போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார்- பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றிவரும். அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும். "பதினாறு வயதினிலே' படத்தின்போது நாங்களும் பிரச்சினையைச் சந்தித்தோம். அதேமாதிரி என் முதல் படம் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' பூஜையுடன் தொடங்கியபோது என்கூட இருந்த நண்பர் பிரியாணி சாப்பிட்டபோது ஏதோ ஒத்துக்கொள்ளாமல் போய் வலிலிப்பு வந்து பெரிய பிரச்சினையாகிவிட்டது. எனவே பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும். பிரச்சினைக்குப் பிறகு வரும் வெற்றியையே அனுபவிக்க முடியும்'' என்றார்.