பிரபு நடித்த "வேலை கிடைச் சுருச்சு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், "கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்குப்பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்குமேல் நடித்ததுடன் ஏராளமான படங்களைத் தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.
அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு "கடமான்பாறை' என்று பெயரிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக மன்சூர்லிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.
மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக அனுராகவி இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்கள். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுத வாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல் கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- மகேஷ்.ப, இசை- ரவிவர்மா, பாடல்கள்- விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான், கலை- ஜெயகுமார், நடனம்- டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா, ஸ்டன்ட்- ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம்- ஓ. அன்வர், ஒருங்கிணைப்பு- ஜே,ஜெயகுமார். படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்...
""தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கட்டடித்து விட்டு தான்தோன்றித் தனமாக வாழ்வதால் ஏற்படும் பிரச்சினைகள், இன்றைய இளைய சமுதாயத்தின் மனோபாவம், இதை நகைச்சுவையாக பிரதிபலிப்பதுதான் இந்த "கடமான் பாறை.'
படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் சதாசிவ் கோனே நீர்வீழ்ச்சியிலும், பாப்பநாய்டு பேட்டை மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களிலும் நடைபெற்றுள்ளது'' என்றார் மன்சூரலிகான்.