ஹேமமாலினிக்குப் பிறகு இந்தி சினிமாவின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் ஸ்ரீதேவி. பணத்தையும் புகழையும் குவிப்பதில் காட்டிய அக்கறையை, தனக்குரிய வாழ்க்கையை உரிய வயதில் அமைத்துக் கொள்வதில் காட்டத் தவறிவிட்டார்.
ஒருவருக்கு புகழ்மீதும் பணம்மீதும் நாட்டம் ஏற்பட்டுவிட்டால், அதற்கு ஏற்றபடியான துணை கிடைக்காமலேயே காலம் கடந்துவிடும். திரையுலகில் இது மிகவும் சர்வசாதாரணம்.
தனக்கு ஏற்ற ஜோடி கிடைக்காமல், ஸ்ரீதேவியும் போனிகபூருக்கு இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப்பட நேர்ந்தது. அத்தோடு அவர் செய்திகளில் இருந்து காணாமல் போனார்.
இரண்டு மகள்களைப் பெற்று வளர்த்தபிறகு, சமீப ஆண்டுகளில் "இங்கிலீஷ் விங்கிலீஷ்', "மாம்' ஆகிய படங்களில் நடித்தார் ஸ்ரீதேவி. பின்னர், தனது மகள் ஜான்வியின் திரையுலக அறிமுகத்துக்காக அடிக்கடி திரையுலக விழாக்களில் தலையைக் காட்டினார். ஒருவழியாக மகள் ஜான்வியைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய கையோடு, துபாயில் தனது உறவினர் வீட்டுத் திருமணத்திற்காகக் கணவருடன் சென்றார்.
அங்கு அவர் திடீரென மரணம் அடைந்ததாக வெளியான செய்தி இந்தியா முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. அவருடைய மரணச் செய்தி அறிந்தவுடன் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் மும்பை விரைந்தனர். பாலிவுட் நாயகர்களும், நாயகிகளும் அந்தேரியிலுள்ள ஸ்ரீதேவி இல்லத்தின் முன்குவிந்தனர்.
ஆனால், முதலில் மாரடைப்பால் மரணம் என்று வெளியான செய்தி தவறு என்று துபாய் மருத்துவர்கள் அறிவித்தனர். குடிபோதையில் பாத்ரூம் குளியல் தொட்டியில் தவறிவிழுந்து மூச்சுத்திணறி இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
துபாய் மருத்துவர் களின் இந்த அறிவிப்பு ஸ்ரீதேவிமீதான அனுதாபத்தை உடனடியாக டேமேஜ் செய்தது. அத்துடன், ஸ்ரீதேவியின் மரணம் தற்கொலையா? கொலையா என்றெல்லாம் விவாதப் பொருளாகியது. இருந்தாலும், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பெரும்புள்ளிகள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலை விரைவாகப் பெறுவதில் வெற்றி கிடைத்தது. அதன் பின்னர் அம்பானிக்குச்சொந்தமான தனிவிமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது.
அவருடைய மரணத்தில் குழப்பம் இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கு கொஞ்சம்கூட குறையவில்லை. அவருடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கூட்டமே அதற்கு சாட்சியாக அமைந்தது.
சிவகாசியில் பிறந்து, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 1969-ஆம் ஆண்டு "துணைவன்' என்ற படத்தில் அறிமுகமானார்.
அதன்பிறகு 1976-ஆம் ஆண்டுவரை எம்ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் குழந்தை நட்சத்திர மாக நடித்திருக்கிறார். சிவாஜிக்கு குழந்தையாக நடித்த ஸ்ரீதேவி அவருக்கே ஜோடியாகவும் நடிக்கும் காலம் வந்தது. 13 வயதிலேயே கமல், ரஜினி நடித்த "மூன்று முடிச்சு' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு அவர்கள் இருவரும் நடித்த பல படங்களில் நாயகியாக நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
ஸ்ரீதேவி நடித்த தமிழ்ப் படங்களில் "16 வயதினிலே', "மூன்றாம் பிறை', "வறுமையின் நிறம் சிவப்பு', "மீண்டும் கோகிலா', "குரு', "தனிக்காட்டு ராஜா', "ஜானி', "வாழ்வே மாயம்', "நான் அடிமை இல்லை' உள்ளிட்ட பல தமிழ்த் திரைப் படங்கள் அவரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
இந்தியில் அமோல் பலேகருடன் அறிமுகமான ஸ்ரீதேவி, அதன்பின்னர், அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ராஜேஷ் கண்ணா, மிதுன் சக்கரவர்த்தி, அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் இருந்தது.
மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் மகாராஷ் டிரா அரசு ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளித்துக் கௌரவித்தது. அவருக்கு அரசு மரியாதை அளித்தது பற்றியும் விவாதம் கிளம்பியது. ஆனால், இந்திய அரசின் பத்ம விருதுகளைப் பெற்றவர் என்பதால் அவருக்கு அரசு மரியாதை கொடுத்ததாக அரசு விளக்கம் அளித்தது.
ஸ்ரீதேவிக்கு நேர்ந்ததுபோல இனி எந்த நடிகைக்கும் நேரக்கூடாது என்று ரசிகர்களின் விருப்பத்தோடு, இந்திய சினிமாவையே கலக்கிய புயல் கல்லறைக்குள் அடங்கி விட்டது.
-ஆசோ & ஈஷ்