ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் படம் "நோட்டா'. "அர்ஜுன் ரெட்டி', "கீதா கோவிந்தம்' புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ், நாசர், எம்.எஸ். பாஸ்கர், "பிக்பாஸ் புகழ்' யாஷிகா நடித்துள்ள இந்தப்படத்தை "அரிமாநம்பி', "இருமுகன்' படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கிஉள்ளார்.
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஹீரோயின் சஞ்சனா பேசும்போது, ""குறும்படத்தில் நடித்துவிட்டு, அடுத்ததாக வெப் சீரிஸில் நடித்திருந்த என்னை எப்படியோ கண்டுபிடித்து இந்த கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் ஆனந்த் சங்கர். அதேபோல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் என்னை நம்பியதற்கு நன்றி'' என்றார்.
நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது, ""இந்தப்படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி "மரண வெயிட்டிங்' என கமெண்ட் போடப்பட்டிருந்தது.. அதேபோல நானும் இந்தப் படத்திற்காக மரண வெயிட்டிங்.. இந்தப் படத்தின்மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை'' என்றார். திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
அக்-5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது "நோட்டா.'