எப்போதாவது ஒரு சுமாரான ஹிட், அவ்வப்போது தோல்வி என சத்யராஜின் மகன் சிபிராஜின் சினிமா கேரியர் இருக்கிறது. சுமாரான ஹிட் லிஸ்டில் "நாய்கள் ஜாக்கிரதை'-யும், சத்யராஜுடன் நடித்த "ஜாக்சன் துரை'-யும் வருகிறது. தனது மகனின் சினிமா கேரியர் ஏறுமுகமாகவே இருக்கவேண்டும் என்பதற்காக, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாதாம்பாள் பிலிம் ஃபேக்ட்ரிமூலம் சத்யராஜும் படங்களைத் தயாரித்துள் ளார்.
சிபிராஜ் இப்போது ரஜினி பட டைட்டிலான "ரங்கா', (டைரக்ஷன் வினோத்) மற்றும் "மாயோன்' (டைரக்ஷன் கிஷோர்குமார்) படங்களில் நடித்து வருகிறார். இதில் "ரங்கா'- வில் சிபிக்கு ஜோடி நிகிலா விமல். ஆளே காணோமே... எங்கே போயிருந்தார் என நினைத்துக்கொண்டிருந்த தான்யா ரவிச்சந்திரன்தான் "மாயோனி'ல் சிபிக்கு ஜோடி. இதுபோக "தனிக்காட்டு ராஜா' படத்தின் ஷூட்டிங் கமுக்கமாக நடந்துவருகிறது. இந்த கமுக்கத்தின் பின்னணி யில்தான் சிபிராஜின் சீட்டிங் ஆட்டமே இருக்கிறது.
மறைந்த இயக்குநர் ராசு மதுரவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா. சாதிப் பாசத்தின் அடிப்படையில் சந்தானத் திடம் 2014-ஆம் ஆண்டு ஒரு கதை சொல்லி ஓ.கே. வாங்கி, அந்தக் கதைக்கு "தனிக்காட்டு ராஜா' என டைட்டிலும் வைக்கப்பட்டது. படத்தின் பட்ஜெட் 15 கோடி என முடிவாகி, தனி ஆபீஸ் போட்டுக்கொடுத்து, டைரக்டர் ராஜாவுக்காக 30 லட்சம் செலவு செய்தார் சந்தானம். ஆபீஸ் போட்டு, டிஸ்கஷனெல்லாம் முடிந்து, ஒரு வருடம் கழித்து, ""இந்த புராஜெக்டை அப்புறம் பார்த் துக்கலாம்'' என்று கைகழுவி விட்டார் சந்தானம்.
இரண்டு வருடங்கள் அலைந்து திரிந்து, 2017-ல் சிபிராஜிடம் அதே கதையைச் சொன்னார் ராஜா. சிபிராஜுக்கு கதை பிடித்துப்போய், ஆபீஸ் போட்டு நான்கு மாதங்கள் டிஸ்கஷன் நடந்தது. (சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, மொட்டை ராஜேந்திரன் காம்பினேஷனில் "ஜாக்சன் துரை' ரிலீசானது 2016-ல் என்பது குறிப்பிடத்தக்கது.) என்ன நினைத்தாரோ ""அப்புறம் பார்த்துக்கலாம்'' என்று சிபிராஜும் ராஜா வைக் கைகழுவினார்.
சிபிராஜ் கைகழுவிய தோடு விட்டிருந்தால் பரவாயில்லை, கதையைக் கைமாற்றி சீட்டிங் ஆட்டம் ஆடிவிட்டார். ஆமாங்க "ஜாக்சன் துரை' டைரக்டர் தரணிதரனைக் கூப்பிட்டு' "தனிக்காட்டு ராஜா' கதை நல்லாயிருக்கு. ஆனா அந்த ராஜாவால சரியா டைரக்ட் பண்ணிக் கொடுக்க முடியுமான்னு தெரியல. அதனால இந்தக் கதைய கொஞ்சம் முன்னபின்ன மாத்தி ஸ்கிரிப்ட் எழுதுங்க. நாம படம் பண்ணலாம்'' என்று சிபிராஜ் சொன்னதும், தரணிதரனும் ஒத்துக்கொண்டு ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து, இப்போது ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. "தனிக்காட்டு ராஜா'-வில் வனத்துறை அதிகாரியாக நடிக்கிறாராம் சிபிராஜ்.
தனது கதை திருடப்பட்டு படப்பிடிப்பும் நடப்பதையறிந்த ராஜா, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்குப்போய் கே. பாக்யராஜிடம் புகார் பண்ணியிருக்கிறார். ""எல்லாம் சரிதாம்பா. விஜய்யின் "சர்கார்' படத்தப்ப நான் பட்டபாடு பெரும்பாடு.
அதனால இந்த விஷயத்துல நான் ஒண்ணும் செய்யமுடியாது'' என்று கைவிரித்துவிட்டாராம் கே. பாக்யராஜ். இதைக் கேள்விப்பட்டு "படம் முடியட்டும் பார்த்துக்கலாம், சமாளிச்சுக்கலாம்' என தனது மகன் சிபிராஜுக்கு சப்போர்ட் பண்ணுகிறாராம் அப்பா சத்யராஜ். ""எங்க கட்சி வக்கீல் கே. பாலு இருக்காரு.
அதனால சத்யராஜையும் சிபிராஜையும் விட மாட்டேன். பட ரிலீஸ் நேரத்துல வைக்கிறேன் ஆப்பு'' என தனது நட்பு வட்டத்திடம் உறுமிக்கொண்டிருக்காராம் "தனிக்காட்டு ராஜா'-வின் ராஜா.
-ஈ.பா. பரமேஷ்வரன்