சிவகார்த்திகேயன் அடுத்ததாக "இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். "இரும்புத்திரை' படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆன்டனி எல். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது.
"இரும்புத்திரை' படத்தில் சமூக கருத்தை முன்வைத்த மித்ரன், இந்தப் படத்தில் அரசியல் கலந்த திரில்லர் கதையை உருவாக்கிவருவதாகக் கூறப்படுகிறது.
"பூ', "மரியான்' படங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்த பார்வதி தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் மலையாளத்தில் நடித்துவருகிறார்.
மும்பையில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி மீடூ பற்றி பேசினார். ""மீடூ விஷயத்தில் இந்தி சினிமா ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இந்தியில் வெற்றிபெற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல்; தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இந்த நிலை இல்லை. அவர்களுடைய குரல் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இது பாராட்டத்தக்க விஷயம். மற்ற இடங்களில் பெரும் அமைதியே நிலவுகிறது.
அதே நேரத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள "விமென்ஸ் சினிமா கலெக்டிவ்' போன்ற அமைப்பு பாலிவுட்டிலும் தொடங்கப்பட வேண்டும்'' என்றார்.
இந்தியில் மீடூவில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் பணிபுரிவதில்லை என்ற முடிவை முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். இதைத்தான் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் "மீசைய முறுக்கு.' ரசிகர்களி டையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் சுந்தர்.சியே தயாரிக்கி றார். இந்தப் படத்தில் ஆதி ஜோடி யாக புதுமுகம் அனகா அறிமுக மாகிறார்.
பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்தப் படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி நட்பு, காதல், குடும்பம் என அனைத்தும் கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில், படத்தை அடுத்த வருட துவக்கத் தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. கரு. பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழிலும் மலையாளத்திலும் நடிப்பிற்காகப் பேசப்படும் நடிகர்கள் தான் விஜய் சேதுபதியும், பஹத் பாசிலும். இந்த இருவருமே தற்போது இணைந்து தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் "சூப்பர் டீலக்ஸ் 'என்ற படத்தில் நடித்துள்ளார்கள். விஜய்சேதுபதி திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார். பஹத் பாசில் கேரக்டர் சஸ்பென்சாகவே வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பஹத் பாசில் நடிப்பைப் பற்றி சிலாகித்துக் கூறியுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான "தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என்கிற மலையாளப் படத்தைப் பார்த்ததிலிருந்து பஹத் பாசிலின் நடிப்புக்கு தான் ரசிகனாகிவிட்டதாகக் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.
மேலும் "சூப்பர் டீலக்ஸ்' படத்தில் தனக்கு படப்பிடிப்பு இல்லை என்றாலும்கூட, தனக்கு நேரம் கிடைத்தால் பஹத் பாசிலின் நடிப்பைப் பார்ப்பதற்காகவே "சூப்பர் டீலக்ஸ்' படப்பிடிப்புக்கு அவ்வப்போது தான் சென்றுவந்ததாகவும், அவர் நடிப்பை நேரில் பாத்து வியந்து போனதாகவும் பாராட்டியுள்ளார் விஜய்சேதுபதி.
"பாகுப'லி படங்களைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் காம்பினேஷனில் "ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தை இயக்குகிறார் ராஜமவுலி.
பொதுவாக ராஜமவுலியின் படங்களில் ஹீரோவுக்கு நிகரான வில்லன் வேடம் இருக்கும். அந்தவகையில் இந்த மல்டி ஹீரோ படத்தில் இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களுக்கு பரிட்சயமான வில்லனாக இருக்கவேண்டுமென்று முடிவு செய்துள்ள ராஜமவுலி, இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் பல முன்னணி நடிகர்களை அழைத்து தனது கதாபாத்திரத் திற்கேற்ற உடல்மொழி கொண்டவர்களை பரிசீலனை செய்து வருகிறாராம்.
"ஜீனியஸ்' படத்தையடுத்து "சாம்பியன்', "ஏஞ்சலீனா'ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார் சுசீந்திரன். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பாரதிராஜாவும், சசிகுமாரும் முக்கிய கேரக்டர்களில் இணைந்து நடிக்க "கென்னடி க்ளப்' என்ற படத்தையும் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்குவதற்கு தான் ஏற்கெனவே வாங்கிய சம்பளத்தைவிட கூடுதலாகப் பெற்றுள்ளார் சுசீந்திரன். "கென்னடி க்ளப்' படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் தயாரிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி இருவரும் "சண்டக்கோழி- 2', "சர்கார்' படங்களில் இணைந்து நடித்தனர். இந்த இரண்டு படங்களிலுமே கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், வரலட்சுமி வில்லியாகவும் நடித்திருந்தனர். ""சண்டக்கோழி-2'-வில் வரலட்சுமியின் மிரட்டலான நடிப்பு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது'' என்று கூறும் கீர்த்தி சுரேஷ், "சர்காரில்' தன்னை துணை நடிகை ரேஞ்சுக்கு டம்மியாக்கிய டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ்மீது செம காட்டமாக இருக்கிறார்.
இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தாலே படப்பிடிப்பு தளங்களில் ஈகோ போர் வெடித்து விடும். ஆனால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி இருவரும் இந்தப் படங்களில் நடித்ததை அடுத்து உயிர்த் தோழிகளாகி விட்டனர்.
அதன் காரணமாக சென்னை யிலுள்ள தியேட்டர் களுக்கு சினிமா பார்க்க விசிட் அடிப்பது தொடங்கி, ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சென்று அரட்டை யரங்கமும் நடத்தி வருகிறார்களாம்.
""நான் அறிமுகமான "வெண்ணிலா கபடிக்குழு' படத்தில்தான் சூரி, அப்புக்குட்டி நடித்து பிரபலமானார்கள். அதன்பிறகு "முண்டாசுப்பட்டி' படத்தில் முனீஸ்காந்த், காளிவெங்கட் பிரபலமானார்கள். தற்போது "ராட்சசன்' படத்தில் சரவணன் என்பவர் வில்லனாக நடித்து பிரபலமாகியிருக்கிறார்.
இப்படி எனது படங்களில் நடித்தவர்கள் பிரபலமாகும்போது சந்தோஷமாக உள்ளது.
அதேபோன்று தொடர்ந்து எனது படங்களில் திறமையான புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். எனக்கு கிடைக்கும் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்'' என்கிறார் விஷ்ணு விஷால்.
"பிரேமம்' புகழ், மடோனா செபாஸ்டின், தன் தாய்மொழியான மலையாள திரையுலகம் கைகொடுக்காததால், விரக்தியில் இருந்தார்.
ஆனால், தமிழில், தொடர்ச்சியாக, கவண், "ப.பாண்டி', "ஜூங்கா' என வாய்ப்புகள் வந்தன. கன்னடத்திலும் நடித்துவருகிறார். தற்போது, சசிகுமார் ஜோடியாக, "கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.