மராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில், சுகந்தி ஆறுமுகம் தயாரித்திருக்கும் படம் "குற்றம் புரிந்தால்.' அறிமுக இயக்குநர் டிஸ்னி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆதிக்பாபு ஹீரோவாக அறிமுகமாகிறார்.

அர்ச்சனா, "நாடோடிகள்'அபிநயா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, எம்.எஸ். பாஸ்கர், ராம்ஸ், அருள் டி. சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

கே.எஸ். மனோஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளனர்.

கே. கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Advertisment

எஸ்.பி. அஹமது படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஹீரோ ஆதிக்பாபு, படம் மற்றும் தனது நடிப்புப் பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

""எனது சொந்த ஊர் கோயமுத்தூர். சிவில் இன்ஜினீய ரிங் பட்டதாரியான நான், அது தொடர்பான வேலையில் இருந்தாலும், சிறுவயதுமுதலே நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன். இந்த நடிகர், அந்த நடிகர் என்றெல்லாம் இல்லாமல், வாரம் வாரம் வெளியாகும் புதுப்படங்களை உடனே பார்த்துவிடுவேன். இப்படி படம் பார்த்துப் பார்த்து எனக்குள்ளும் சினிமா ஆசை வளர்ந்துவிட்டது. சுமார் எட்டு வருடங்களாக வாய்ப்புக்காக பல நிறுவனங்களையும், பல சினிமா பிரபலங்களையும் சந்தித்திருக்கிறேன். பல நிறுவனங்களுக்கு என் புகைப் படங்களையும் அனுப்புவேன்.

Advertisment

dd

அப்படி என் புகைப்படங்களைப் பார்த்த அமராவதி பிலிம் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட வேடத்திற்காக என்னைத் தேர்வு செய்தது. ஆனால், என்னை நேரில் பார்த்த இயக்குநர் டிஸ்னி, அவர் "கதையின் ஹீரோ இவர்தான். இவரைப் போலதான் இருக்க வேண்டும்' என்றுகூறி என்னையே ஹீரோவாக்கிவிட்டார்.

ஹீரோ, வில்லன் அப்படி எல்லாம் கிடையாது. நல்ல வேடத்தில் நடிக்கவேண்டும் அதுதான் என் விருப்பம். எம். ஆர். ராதாபோல வித்தியாச மான, குறிப்பாக அவரது "இரத்த கண்ணீர்' போன்ற படங்களில் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

கோவையில் இருந்து ரகுவரன் சார், சத்யராஜ் சார், பாக்யராஜ் சார் என பல நடிகர்கள் வந்து பிரபலமாகியிருக்கிறார்கள்.

அவர்கள்வழியில் நானும் ரசிகர்கள் மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம்பிடிக்க வேண்டும் என்பது எனது ஆசை'' என்று நம்பிக்கையோடு ஆதிக்பாபு பேசினார்.