ஃபினிஷிங் ஸ்டேஜ்
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ். பார்த்தி, எஸ். சீனா இணைந்து தயாரிக்கும் படம் "கள்ள பார்ட்.' அரவிந்த்சாமி, ரெஜினா ஜோடி. மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், "ராட்சசன்' புகழ் பேபி மோனிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- அரவிந்த் கிருஷ்ணா, இசை- நிவாஸ் கே. பிரசன்னா, எடிட்டிங்- எஸ். இளையராஜா, கலை- மாயபாண்டி, சண்டைப் பயிற்சி- மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை- ராமச்சந்திரன், வசனம்- ஆர்.கே., திரைக்கதை, டைரக்ஷன்- பி. ராஜபாண்டி.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட "கள்ள பார்ட்' ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான மூன்றுவிதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறஉள்ளது.
"பயங்கரமானஆளு'
பரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் "பயங்கரமான ஆளு,' அறிமுக இயக்குநர் அரசர் ராஜா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். ஹீரோயின்களாக ரிஷா, சாரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகிவரும் இப்படம் குறித்து இயக்குநரும், ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்டபோது, ""நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர்.
அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைக்கொள்ளும்போது, அவன் சந்திக்கக்கூடிய மாபெரும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.'' என்றார். "பயங்கரமான ஆளு' வரும் டிசம்பர் 14-ஆம் தேதி வெளியாகிறது.
"அனுநாகி"
மோகன்லால் நடித்த "புலி முருகன்' படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி. பாலா "அகோரி' என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில் இப்போது "அனுநாகி' படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.
"அனுநாகி' தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல். இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும், இதில் நட்பு, காதல், அன்பு, காமெடி, பக்தி, கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என அனைவரையும் கவரும்வகையில் படமாக்கவுள்ளனர்.
ஐஸ்வர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் மூன்று வில்லன்கள். மைம்கோபி, ரியாஸ்கான், தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமான "காலா' படப்புகழ் ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.
"இதுதான் காதலா'
குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ். முருகன் தயாரித்துவரும் படம் "இதுதான் காதலா.'
இதில் முற்றிலும் புதுமுகக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது விஞ்ஞானரீதியான கதையை அடிப்படையாகக்கொண்டு உருவாகிவருவதால் ரோபோவாக இந்தப் படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்திருக்கிறார். கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா, இரண்டாவது நாயகியாக ஆயிஷா, "காதல்' சுகுமார், கூல்சுரேஷ், பாலு ஆனந்த், பயில்வான் ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, கணேஷ்ராஜா- இசை- தேசியவிருதுபெற்ற சங்கர் எஸ்.எம்.பி. சுப்பு, கலை- ராஜரத்தினம், பாடல்களை கவிஞர் வானம், யாமினி, குணசேகரன், மௌலன், ராஜசிம்மா எழுதிருக்கிறார்கள்.