நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன்- மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்புதான் "கண்மணி பாப்பா' திரைப்படம்.

kanmani

கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப்போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்துபோவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவிதான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்துவருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வரவேண்டிய தொகை முழுவதும் கிடைத்துவிட, தனது நீண்டநாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார்.

அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார்.

Advertisment

எதிர்பாராதவிதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. இதெல்லாம் ஏன் நடக்கிறது என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன். தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரியாமல் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நாயகன் அந்த முயற்சியில் இருக்கும்போதே, அவரது குழந்தை ஒரு மர்ம நபரால் கடத்தப்படுகிறாள்.

எதற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன? அந்த வீட்டிற்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? குழந்தையைக் கடத்திய மர்ம நபர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? இவற்றையெல்லாம் அந்த நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி.

kanmani

Advertisment

இப்படத்தில் "தொட்டால் தொடரும்', "சட்டம் ஒரு இருட்டறை', "6 அத்தியாயங்கள்' போன்ற படங்களில் நடித்த தமன் குமார் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி, கண்மணி பாப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, சிவம், நாகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வனஜாக்சி கிரியேஷன்ஸ் பேனரில் ராஜேந்திர பிரசாத் தயாரித்துள்ளார்.