பிரம்மாண்ட அழகுப் பேய்!
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ. உலகேசு குமார், மேடூர் பா. விஜயராகவன், சா.பா. கார்த்திராம் இணைந்து தயாரிக்கும் படம் "குந்தி.'இதில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். "ஆடுகளம்' கிஷோர், "தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு- கர்ணா, இசை- யஜமன்யா, எடிட்டிங்- காளிராஜ், சந்திரபிரகாஷ், பாடல்கள்- வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன், இணைத் தயாரிப்பு- மேடூர் பா. விஜயராகவன், சா.பா. கார்த்திராம், இயக்கம்- பண்ணா ராயல், வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு- ஏ.ஆர்.கே. ராஜராஜா, தயாரிப்பு- மே.கோ.உலகேசு குமார்.
ஏ.ஆர்.கே. ராஜராஜா என்ன சொல்றாருன்னா ""தெலுங்கில் "ராட்ஷஷி' என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியைக் கண்ட படமே தமிழில் "குந்தி' என்ற பெயரில் தயாராகிறது.
தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. ஒரு பேய் தனது குழந்தைகளை கொல்லத் துடித்துக்கொண்டிருக்க அந்த பேயிடமிருந்து எப்படி குழந்தைகளைக் காப்பாற்றினார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
"அருந்ததி', சந்திரமுகி, "முனி', "காஞ்சனா' போன்ற படங்களை மிஞ்சும், தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமான பேய்ப் படமாக இந்தக் "குந்தி' இருப்பாள்.
முப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும். இதுவரை பேய்ப் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தில் பூர்ணா தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படம் அவரது திரையுலக வாழ்கையில் ஒரு மைல்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை.''
சிங்கப்பூரில் வசூல் மழை!
"வீரசேகரன்', "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை', "தொட்டால் தொடரும்', "இருவர் உள்ளம்' ஆகிய படங்களைத் தயாரித்த துவார் ஜி. சந்திரசேகர், தனது எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ்மூலம் தயாரித்த 5-ஆவது படம் "பாக்கணும்போல இருக்கு.' பரதன் ஹீரோவாக வும், அன்சிபா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியிருந்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் காமெடிக் காட்சிகள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, முழுமையான பொழுது போக்கு படமாகவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், விமர்சனரீதியாகவும் சிறந்த கமர்ஷியல் படமாக பாராட்டுப் பெற்றது.
தற்போது கடந்த 40 நாட்களுக்கு மேலாக புதிய திரைப்படங்கள் வெளியாகாத காரணத்தினால் ஏற்கெனவே வெளியான படங்களை இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்துவந்தார்கள். அந்த வகையில் "பாக்கணும்போல இருக்கு' படமும் சிங்கப்பூரில் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டு தொடர்ந்து நான்காவது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, வசூலில் சாதனையும் படைத்துவருகிறது.
இந்த சந்தோஷத்தல் தனது 6-ஆவது திரைப்படத்தை பெரிய பொருட்செலவில் தயாரிக்க முடிவு செய்துள்ள துவார் ஜி. சந்திரசேகர், ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கை ஆரம்பிக்க ஆயத்தமாகிவிட்டார்.
தொரட்டி
மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான்.
அப்படிப்பட்ட உண்மைக் கதைகள் திரைப்படம் ஆகும்போது வெற்றிகள் இலகுவாகும்.
அப்படிப்பட்ட ஒரு உண்மைச் சம்பவம் "தொரட்டி' எனும் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் "தொரட்டி.' கிடை போட்டு வெட்டவெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண்முன் நிறுத்தும் திரைப்படம்தான் "தொரட்டி.' ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஒரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாராயம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்யத் துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடிதுடிக்கும் நிகழ்வுகள்தான் "தொரட்டி.' இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ... இவருக்கு இணையாக செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு, மேலும் சோத்துமுட்டி, ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் மெட்டமைக்க பின்னணி இசை ஜித்தின் ரோஷன். படத்தொகுப்பை பு. ராஜா முகமது, குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு. ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கிருக்கிறார் பி. மாரிமுத்து.