ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் "சூப்பர் டூப்பர்.'
வளர்ந்துவரும் நடிகர் துருவா இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
"சூப்பர் டூப்பர்' படம் பற்றிய அனுபவங்களை துருவாவிடம் கேட்டோம்.
"""சூப்பர் டூப்பர்' ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ், காமெடி அனைத்தும் இணைந்த ஒரு படமாக இருக்கும்.
இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் சத்யா. ஆனால் நான் வாய் திறந்தால் பொய்தான் சொல்வேன். பொய் சொல்வேனே தவிர கெட்டவன் கிடையாது. இப்படிப் பொய் சொல்லி கதாநாயகியிடம் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வேன். நெருங்கிப் பார்த்தால் நாயகியும் ஒரு சிக்கலில் இருப்பார்.
அந்த சிக்கல்களிலிருந்து இரண்டுபேரும் எப்படி மீண்டு வெளியே வருகிறோம் என்பதுதான் கதை.
இரண்டு மணிநேரம் ஓடும் இந்தப்படத்தில் இரண்டு வினாடிகள்கூட உங்கள் கவனம் சிதறாது. அப்படி விறுவிறுப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது.
இது எனக்கு இரண்டாவது படம். ஒரு புதுமுக நாயகன் முழுநீள படத்தில் நடிப்பது பற்றி சிலர் விமர்சனம் செய்யலாம். ஆனால் அதையும் நியாயப்படுத்துகிறமாதிரி காட்சிகளும் என் பாத்திர சித்தரிப்பும் இதில் இருக்கும். அதனால் படம் பார்த்தால் என் பாத்திரம் புரியவைக்கும். என் உயரம் எனக்குத் தெரியும். நான் நீந்த வேண்டிய நீர்நிலையின் ஆழமும் எனக்குத் தெரியும். எனவே ஆழம் தெரியாமல் காலை விடவில்லை. எல்லாம் சரியாகப் பொருத்தமாக இருக்கிறது. இதைப் படம் பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
என்னுடன் நடித்திருக்கிறார் நாயகி இந்துஜா. இப்போதெல்லாம் கதாநாயகியாக நடித்துவருகிறவர்கள் சினிமாவை ஒரு முறையான தொழிலாக எண்ணித்தான் வருகிறார்கள். எனவே தொழில் ரீதியாக சரியாக இருக்கிறார் கள், அப்படித்தான் இந்துஜா வும். சினிமாவையும் தன் பாத்திரத்தையும் புரிந்துகொண்டு இதில் நடித்திருக்கிறார் .
ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்துகொண்டு "சூப்பர் டூப்பர்' பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
படித்த, தைரியமான, நகர்ப்புறத்தில் இருக்கும் நவீனப் பெண்ணாக இந்துஜா வருகிறார். தன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இப்படப் பிடிப்பின் 55 நாட்களும் நல்ல நட்புச் சூழலில் கழிந்ததை எங்களால் மறக்கமுடியாது.
நான் சினிமாவை நேசித்து நல்ல வாய்ப்புக்காகப் போராடிவரும் வளரும் நடிகர். எனக்கு இப்படம் நல்லதொரு வாய்ப்பாகும். இப்படம் வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என நம்பிக்கையுடன் பேசினார் துருவா.
-பரமு