"கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் எனது விருப்பப் படமில்லை. ஆனால், அதுதான் எனக்கு நிரந்தரமான வீட்டைக் கொடுத்தது. அதற்குமுன் நான் சென்னையில் 13 அபார்ட்மென்ட்டுகளுக்கு மாறியிருக்கிறேன். அந்தப் படத்திற்கு பிறகுதான் எனது மனைவியை நிம்மதியாக வைத்திருப்பேன் என்று எனது மாமனார் வீட்டில் நம்பிக்கை ஏற்பட்டது'' என்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
"கடைக்குட்டி சிங்கம்' படத்தைப்பற்றிப் பேசிய அவர் படத்தைப் பற்றி மட்டுமின்றி தன்னைப் பற்றியும் மனம் திறந்தார்.
"" "பசங்க', "பசங்க-2', "மெரினா' போன்ற படங்களை எடுத்தபோது, 2 கோடி ரூபாய் டைரக்டர் என்று என்னை அழைத்தார்கள். இப்போ அதிலிருந்து முன்னேறி இருக்கேன். ஆனால், மீண்டும் அதுபோன்ற படங்களை எனது ஆசைக்காக எடுப்பேன். ஒன்னேகால் மணி நேரம் பாடல்கள், சண்டைகள் இல்லாமல் ஓடும் படத்தையும், ஆன்லைனில் மட்டுமே ரிலீஸ் செய்யும் வகையில் ஒரு படமும் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
"கடைக்குட்டி சிங்கம்' படத்தை எனது கிராமத்தில் நான் வளர்ந்த சூழலில் வாழ்ந்த கதாபாத்திரங்களை வைத்து எடுத்திருக்கிறேன்.
மற்றவர்கள் வெளிநாட்டு சினிமாவிலிருந்து திருடுகிறார்கள். நான் எனது கிராமத்திலிருந்து திருடுகிறேன். இந்தப் படத்தில் கார்த்தியை வளமான விவசாயியாகக் காட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள். திறமையான விவசாயி வளமாக இருப்பார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டிக்கடை வைத்திருப்பவர் லட்சாதிபதியாக முன்னேறுவதில் லையா?'' என்கிறார் பாண்டிராஜ்.
நியாயமான வார்த்தை சொன்னீக பாண்டி.