தனது 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 2-ஆம் தேதி சென்னை நசரபேத்பேட்டை ஈ.வி.பி. ஸ்டுடியோவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தினார் இசைஞானி இளையராஜா.
ராயல்டி பிரச்சினையால் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கும் இளையராஜாவுக்கும் காரசார வாக்குவாதம், மோதல் நடந்தது. சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் இப்போது இருவரும் சமாதானமாகி ஆரத்தழுவிக் கொண்டதால், "இசை கொண்டாடும் இசை' என்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடினார் எஸ்.பி.பி.
அதேபோல், பொது மேடைகளில் பாடுவதை பல வருடங்களாகத் தவிர்த்து வந்த ஜேசுதாசும் இந்த நிகழ்ச்சியில் பாடியது குறிப்பிடத்தக்கது. பின்னணிப் பாடகிகளான பாம்பே ஜெயஸ்ரீ, உஷா உதூப்பும் பாடினார்கள்.
பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சிமூலம் கிடைத்த வருமானத்தில் ஒன்றரை கோடி ரூபாயை இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு வழங்கியிருக் கிறார் இசைஞானி. ""நிதி வாங்குறதோட நிப்பாட்டிக்கங்க. அப்புறம் புரோக்கிராமிற்கு டிக்கெட் கொடுங்க, பாஸ் கொடுங்கன்னு கேட்டு யாரும் வந்துராதீங்க'' என கறாராகக் கூறிவிட்டாரம் இளையராஜா.
இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பல மாதங்களுக்குமுன்பு இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தார். அதேபோல் கஷ்டப்படும் இசைக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதி உதவியும் வழங்கி வந்தார். இசைக்கலைஞர்கள் சங்கத்தில் தப்புத்தாளங்கள் இசைத்ததால் அந்த நிதி உதவியை நிறுத்திவிட்டாராம் இசைப் புயல். ""இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் அந்தக் கட்டடத்திற்கு எனது அப்பாவின் பெயரை வைக்க வேண்டும்'' என ரஹ்மான் சொன்னதால், சங்கத்தில் கொஞ்சம் சங்கட்டமாக இருக்கிறதாம்.
-பரமு