"தேவ்' ரிலீசாகப் போகும் உற்சாகத்தில் இருந்த ரகுல் ப்ரீத்சிங்கிடம் பேசினோம்.
இந்த ஆண்டு தமிழில்தான் எனது முதல்படம் வெளியாகிறது. "தீரன் அதிகாரம்' ஒன்று படத்தில் கார்த்தியுடன் நடிக்கும்போதே, "தேவ்' படம் குறித்து என்னிடம் சொன்னார்.
அதில் வரும் கதாநாயகி கேரக்டருக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்றார்.
அதன்பிறகு அவர் நடித்த படம் முடிந்தப் பிறகு "தேவ்' படம் எனது கால்ஷீட்டுக்கு ஏற்ப தொடங்கப்பட்டது. தீரன் படத்தில் நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக நடித்தேன். இந்தப் படத்தில் மெகன்னா என்ற கேரக்டராக வருகிறேன். அந்தப் பெண்ணாக மாறி நடித்தேன். அது ஒரு பன்முகத்தன்மை கொண்ட கேரக்டர்.
அதுதான் எனக்கு உற்சாகம் அளித்தது.
ஒருபக்கம் கார்த்தி யுடனும், இன்னொரு பக்கம் சூர்யாவுடனும் நடிக்கிறேன் என்றால் அது எனக்கு கிடைத்த வாய்ப்பு. ஆனால், வித்தியாசமான கேரக்டர்கள் செய்யா விட்டால் ரசிகர்களே ஒதுக்கிவிடுவார்கள். கார்த்தியோடு நடிப்பதை ரொம்ப வசதியாக உணர்கிறேன். கடுமையான உழைப்பாளி. இனிமையானவர்.
செட்டில் நான் நடிக்கும் போது சவுகரியமாக இருக்கிறேனா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வார். இது ஒரு ரொமாண்டிக் படம் என்பதால் இருவருக்கும் இடையே புரிதல் இருக்கிறது'' என உற்சாகமாகப் பேசினார் ரகுல் ப்ரீத்சிங்.