கார்த்தியின் "கைதி' படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாகக் கலக்கியிருப்பார் ஜார்ஜ் மரியான். அவரிடம் பேசியபோது...
""நான் எதிர்பார்த்தைவிட மிகப்பெரிய வெற்றி பெற்றிருச்சு "கைதி.' மக்கள் எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.
லோகேஷ் கனகராஜ் சார் கதை சொல்லும்போதே "இந்தப்படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல் சார். நல்லாவரும் பாருங்க'ன்னு சொன்னார். எல்லாப் படத்திலும் இப்படித்தான் சொல்வாங்க. எல்லாப் படம்போலதான் இந்தப் படத்திலும் வேலை பார்த்தேன். ஆனா பெரிய வெற்றிப்படமா அமைஞ்சிடுச்சு. இந்த டீமே பிரம்மாதமான டீம். நல்ல திரைக்கதை, கார்த்தி சார் மிரட்டிட்டாரு.''
காமெடில இருந்து மாஸ் போலீஸா மாறியிருக்கீங்க. எப்படி இருக்கு?
ஆமா ஆமா. இதுவரைக்கும் காமெடியாதான் நடிச்சிருக்கேன். சுந்தர்.சி சார் படங்கள்ல காமெடி போலீஸா நடிச்சிருக்கேன். எல்லாரும் கொண்டாடு வாங்க. நம்மளப் பார்த்து சிரிப்பாங்க. "தடம்' படத்திலதான் முதன் முறையா மகிழ் திருமேனி சார் கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தாரு. ஆனா "கைதி'-ல ரொம்பவும் கனமான கதாபாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.
ஆனா லோகேஷ் சார்தான் தைரியம் தந்தார். "பண்ணுங்க சார். மக்கள் ஏத்துப்பாங்க'னு சொன்னார். அவருக்கு கதைமேல பயங்கர நம்பிக்கை. அவர் கொடுத்த தைரியத்தால்தான் பண்ணினேன். காமெடில இருந்து நம்மள இப்படிப்பட்ட பாத்திரத்தில மக்கள் ஏத்துக்கிட்டதே பெரிய சந்தோஷம்தான்.
படம் பார்த்துட்டு கார்த்தி சார் கூப்பிட்டு பாராட்டுனாரு.
அவருக்கு பெரிய மனசு.
சுந்தர். சி படங்களிலும் உங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறதே?
அவருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும். "இப்படி பண்ணுடா' என உரிமையோடு சொல்வார். "கலகலப்பு', "கலகலப்பு-2' ரெண்டிலுமே மக்கள் ரசிக்கும் படியான கேரக்டர். "கலகலப்பு-2'-வில் அந்தப் படகு காட்சியில் நானேதான் படகு ஓட்டினேன்.
தீபாவளிக்கு ரீலீசான விஜய்யின் "பிகில்' படத்திலும் நடித்திருந்தீர்களே, அந்த அனுபவம் பற்றி...
விஜய் அருமை யான நடிகர்.
அவரை திட்டுவதுபோல் ஃபாதர் கேரக்டர் எனக்கு. கொஞ்சம் பயமாகிவிட்டது.
அவரிடம் முன்னமே "சார் தப்பா எடுத்துக்காதீங்க' என்றேன்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. இது காட்சிதான். நீங்கள் நன்றாகச் செய்யுங்கள்' என்றார்.
எனக்கு கூச்சம் போக, காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனேதான் இருப்பார். எங்களுடன்தான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமை. "பிகிலி'-ல் நடித்தது பெரும் சந்தோஷம்.
அஜீத்துடன் "விஸ்வாசம்' படத்தில் நடித்த அனுபவம்...
அவரும் பெரும் அன்பானவர். தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்துக்கொள்வார். என்ன படமெல்லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்தபோது யூனிட்டுக்கே அவர் கையால் சமைத்து பிரியாணி செய்துதந்தார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியே.
இதுவரைக்கும் எல்லாப் படத்திலும் சின்னச்சின்ன கதாபாத்திரங்கள்தான் செய்திருக்கிறேன். பெரிய கதாபாத்திரங்கள் செய்யும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் இன்னும் நிறைய செய்ய ஆசை.
அடுத்து நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்...
சமுத்திரகனியின் "அடுத்த சாட்டை' படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன். தம்பி ராமையாவும் நானும் சேர்ந்து பண்ணிருக்கோம். "பிழை' படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன். இப்போ பெரிய வாய்ப்பு ஒன்னு- ஷங்கர் சாரோட "இந்தியன் 2'-ல ஒரு கதாபாத்திரம் பண்றேன்.
"கைதி' ஒரு பிள்ளையார் சுழி மாதிரி; நமக்கு இனி எல்லாம் நல்லா நடக்கணும்.