வலிமையான கதைகளில் நடித்து வருவதைப் பெருமையாகக் கருதும் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் "பற.' வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். "பற' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சில துளிகள்...
தயாரிப்பாளர் ராமச்சந்திரன்
""இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரகனி எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.''
இயக்குநர் பா. ரஞ்சித்
""கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். இந்தப் "பற' படத்தில் பி.சி. ஆக்ட் பற்றி ட்ரைலரில் சொல்லியிருக்கிறார்.
அது இன்றைய சமகாலப் பிரச்சினை. சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசியிருக்கும் என்று நம்புகிறேன்.''
இயக்குநர் கீரா
""இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்துவிட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும்போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும்.
இந்த "பற' படம் ஏற்றத் தாழ்வை யும், சாதி ஒழிப்பையும், ஆணவக் கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரகனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர்மூலமாகச் சொல்லியிருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.''
நடிகர் சமுத்திரக்கனி
""இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா. ரஞ்சித்தான்.
அவர்தான் கீராவை அறிமுகப்படுத்தினார். காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார் கீரா. நான் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன் என்றேன். இந்தப்படம் அற்புதமான படம். அருமையான பதிவு.'' என்றார்.