ரஜினியின் "பேட்ட' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. இதற்கிடையில், அந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கும் மாளவிகா மோகனன்,
ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் ""அவரது ரசிகையாக இருந்த நான், இன்று அவரோடு நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டேன். வாழ்க்கை சில சமயங்களில் நாம் எதிர்பார்க்காத சில விஷயங்களையும் நமக்காக செய்து கொடுக்கிறது'' என பதிவிட்டிருந்தார்.
மாளவிகா மோகனன் மலையாளப் பெண்.
அவரது அறிமுகமும் "பட்டம் போலே' என்ற மலையாளப் படத்தின் மூலமாகவே இருந்தது. தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என சில படங்களில் நடித்துவந்தவர், உலகப்புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் "பியாண்டு தி க்ளவுட்ஸ்' என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில்தான், சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது.
படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா, ""என் சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்திலேயே ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டேன். மிகவும் அற்புதமான அனுபவமாக அது இருந்தது. மிகவும் சவாலானது எனது கதாபாத்திரம். அதுவும் தமிழ் தெரியாத எனக்கு கூடுதல் சவாலாகவே இருந்தது. என் கதாபாத்திரத்திற்கு துரோகம் செய்யாமல் இருப்பதற்காகவே தமிழ் டீச்சர் ஒருவரைக் கூட்டிவந்து பாடம் படித்துத் தமிழில் பேசியிருக்கிறேன்'' என உற்சாகம் பொங்கப் பேசியிருக்கிறார்.
ஆடியோ ரிலீஸ், டீசர் ரிலீஸ் என ரசிகர்கள் மனதில் கோட்டை கட்டிவிட்டார் "பேட்ட' ரஜினி. விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், த்ரிஷா, பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியிருக்கும் "பேட்ட' படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் பொங்கல் ஜரூராக நடந்து வருகின்றன.