தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "கனா காணும் காலங்கள்' தொடர்மூலம் தன்னுடைய தனித்திறமையால் பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் யுதன் பாலாஜி. இதைத் தொடர்ந்து "பட்டாளம்' படத்தில் நடித்திருந்தார். பின்னர் பூபதி பாண்டியன் இயக்கிய "காதல் சொல்ல வந்தேன்' படத்தின்மூலம் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து "மெய்யழகி', "நகர்வலம்' ஆகிய படங்களில் நடித்த பாலாஜி தற்போது, இணைய தொடரில் (வெப் சீரிஸ்) களமிறங்கியுள்ளார்.
பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி எனத் திரையுலகில் பிசியாக வலம்வரும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெள்ள ராஜா என்ற புதிய இணைய தொடரில் நடித்துள்ளனர். இதில் யுதன் பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இணைய தொடரில் போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார்.
அவருடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யுதன் பாலாஜி நடித்துள்ளார்.
இணைய தொடரில் நடிப்பது குறித்தும், தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் யுதன் பாலாஜி கூறும்போது, ""வெள்ள ராஜா கிடைத்தது மிகவும் சந்தோஷமான விஷயம். அதுவும் அமேசான் பிரைம் என்ற பெரிய நிறுவனம் தயாரிப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
பாபி சிம்ஹாவிற்கு வலது கையாக இதில் நடித்திருக்கிறேன்.
என்னுடைய திறமையை உணர்ந்து இயக்குநரும் சிறப்பாக என்னிடம் வேலை வாங்கினார்'' என்கிறார்.