"மக்கள் அன்பன்' பட்டத்தை டைரக்டர் சீனு ராமசாமி கொடுத்தாலும் கொடுத்தார், மக்களுக்கான போராட்டத்தில் முழுவீச்சில் இறங்கிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின்போது அனைத்துக் கட்சித் தலைவர்களின் உணர்ச்சிப்பூர்வமான பேரணியால், சென்னை மெரினா கடற்கரையே ஸ்தம்பித்தது. அந்த உச்சிவெயில் போராட்டத்தின்போது கருப்புச்சட்டை அணிந்து கையில் தி.மு.க. கொடியைப் பிடித்தபடி களமிறங்கினார் உதயநிதி.
அடுத்ததாக காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருச்சி முக்கொம்பிலிருந்து ஆரம்பித்தார் மு.க. ஸ்டாலின். காவிரியை நம்பியிருக்கும் டெல்டா மாவட்டங்களின் வயல்வெளிகள், கிராமப்புறங்கள், ஆற்றுப்பாதைகளில் பயணித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார் ஸ்டாலின். திருவாரூரிலிருந்து பயணம் ஆரம்பமானபோது தனது தந்தை ஸ்டாலினுடன் இணைந்து கொண்டார் உதயநிதி. இது பொறுக்காத சில கோஷ்டிகள், சென்னையில் நடந்த ஐ.பி.எல்.மேட்சைப் பார்த்த உதயநிதி எப்படி ஸ்டாலினுடன் நடந்துபோக முடியும் எனக்கேட்டு ஒரு ஃபோட்டைவையும் வாட்ஸ்-அப்பில் பரவவிட்டது.
உடனே உஷாரான உதயநிதி ஆதரவாளர்கள் "அடப்பாவிகளா அது ரெண்டு வருஷத்துக்கு முன்னால நடந்த மேட்சைப் பார்த்தப்ப எடுத்த ஃபோட்டோய்யா. அதப்போயி இப்ப பார்த்தது மாதிரி போட்ருக்காய்ங்களே' என கோட்டூர் பொதுக்கூட்டத்தில் உதயநிதி அமர்ந்திருக்கும் ஆதார ஃபோட்டோவுடன் அப்டேட் பண்ணினார்கள்.
இதப்பத்தி உதயநிதியின் நட்பு வட்டத்தில் நாம் பேசியபோது, ""சீனு ராமசாமி டைரக்ஷன்ல "கண்ணே கலைமானே' படத்தில் நடிச்சிக்கிட்டிருக்காரு உதயநிதி. உதயநிதியின் நல்ல மனசையும் குணத்தையும் பார்த்துத்தான் "மக்கள் அன்பன்' பட்டம் கொடுத்தாரு சீனு ராமசாமி. விஜய் சேதுபதிக்கு "மக்கள் செல்வன்' பட்டம் கொடுத்ததும் இதே சீனு ராமசாமிதான். இந்தப் படத்துக்கு அடுத்து புது டைரக்டர் ஈனாக் படத்துல உதயநிதிக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கிறார். சினிமா ஒருபக்கம் இருந்தாலும் அரசியலும் அவருக்கு முக்கியம்தான். ஏங்க யார் யாரோ லெட்டர்பேடு கட்சியை வச்சுக்கிட்டு, காலத்தை ஓட்டும்போது, பாரம்பரியம் மிக்க தி.மு.க.வுல இருந்து உதயநிதி உதயமாவது பலபேருக்கு வயித்தெரிச்சலைக் கௌப்பியிருக்கு. சில மோசடிப் பேர்வழிகளின் சதிதான் உதயநிதிக்கு எதிராக அப்பப்ப கிளம்பும் புகைச்சல்.
எதையுமே மனப்பக்குவத்துடன் எதிர்கொள்ளும் ஆற்றல் இருப்பதால், வெட்டி ஆசாமிகளின் வெத்துக்கூச்சலுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கமாட்டார் உதயநிதி'' என ரொம்பவே கொந்தளித்தார்கள்.