* அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆண்டு விழாவுக்குச் சென்றுள்ளார் வித்தக கவிஞர் பா. விஜய். மாணவர்களுக்கு அறிவுரையெல்லாம் வழங்கிவிட்டு, ""நான்கூட இப்படித்தான் என்னோட ஊரான கோயம்புத்தூர்ல படிக்கும்போது...'' என்று பேசியதும், ""ஏம்பா இந்த ஜெயங்கொண்டம்தான் உனக்கு சொந்த ஊர்னு சொல்றதுல அப்படி என்னப்பா கேவலம்?'' என்று அங்கிருந்த மக்கள் கேட்டதும், கப்சிப்பாகிவிட்டாராம் வித்தக கவிஞர். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டைதான் விஜய்யின் சொந்த ஊராம்.
* "அயோக்கியா', "ஆர்.கே. மார்க்கெட் ரவி' சீயான் விக்ரம் படம் என செம பிஸிக்கிடையிலும், தனது சொந்த தயாரிப்பான "ஒத்த செருப்பு' படத்தை பதினாறே நாட்களில் 25 நாள் கால்ஷீட்டில் எடுத்து முடித்து அசத்தியிருக்கி றாராம் ரா. பார்த்திபன். மொத்த படமும் ஒரு பங்களாவில் நடப்பதுபோல் கதையாம். ஒளிப்பதிவுக்கு ராம்ஜி, இசைக்கு சந்தோஷ் நாராயணன், பாடலுக்கு விவேக் என பெரிய டீமுடன் களம் இறங்கியிருக்கிறார் பார்த்திபன்.
* யாஷிகா ஆனந்த், யோகிபாபு, "ஆதித்யா டி.வி.' புகழ் கதிர் ஆகியோர் நடிக்கும் "ஜாம்பி' படத்தின் ஷூட்டிங் முக்கால்வாசி, இரவு நேரங்களில் வி.ஜி.பி. கடற்கரை ரிசார்ட்டில் எடுத்து முடித்திருக்கிறார்கள். பகலிலில் யோகிபாபுவின் கால்ஷீட் டைட் என்பதால்தான் நைட் ஷூட்டிங்காம்.
* விஜய் சேதுபதி நடிக்கும் "சங்கத் தமிழன்' படத்திற்காக பாடல் காட்சி ஒன்றை சென்னை கோட்டூர்புரம் ஹவுசிங் போர்டு, பட்டினப்பாக்கம் ஹவுசிங் போர்டு ஏரியாக்களில் ஷூட் பண்ணியுள்ளார் டைரக்டர் விஜய் சந்தர்.
* "சிதம்பரம் ரயில்வே கேட்' படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டைரக்டர் சிவபாவலனின் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் படத்தின் நட்சத்திரங்களை ஆச்சர்யப்படுத்தியதாம். எல்லாவற்றையும்விட மனதை டச் பண்ணக்கூடிய விஷயம் என்னன்னா... தனது தந்தை இறந்த சோகத்தையும் பொருட்படுத்தாமல், ஷூட்டிங்கிற்காக தாராளமாக செலவு செய்தாராம் படத்தின் தயாரிப்பாளர். காமெடி மயில்சாமியின் மகனும், மாஸ்டர் மகேந்திரனும் "சிதம்பரம் ரயில்வே கேட்'-டை பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.
* ஆக்ஷன் கிங் அர்ஜுன் சில ஆண்டு களுக்குமுன்பு சென்னை கொளப்பாக்கத்தில் 30 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். இப்போது அந்த இடத்தில் பிரபல கட்டுமான நிறுவனம்மூலம் 170 பிளாட்டுகள் கட்டி முடித்து, அதை விற்பனை செய்வதில் மும்முரமாக உள்ளாராம்.
* இப்போதெல்லாம் இயக்குநர் தங்கர்பச்சான், யாரிடம் பேசினாலும் தூய தமிழில் பேசி வியப்பில் ஆழ்த்துகிறாராம்.
* செல்வராகவனின் சோம்பேறித்தனத்தால் இழு இழு என்று இழுத்துக்கொண்டேபோன "என்.ஜி.கே.'யால் ரொம்பவே கடுப்பானார் சூர்யா. ஒருவழியாக படம் முடிந்து, இப்போது மயிலாப்பூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் டப்பிங் வேலைகள் வேகமாக நடக்கிறதாம்.
* "குப்பத்து ராஜா'-வை ரொம்பவே எதிர்பார்த்தார் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படமோ அவரை குப்புறக் கவிழ்த்துவிட்டது. படத்தின் ஹீரோயின் பாலக் லால்வானியைவிட, பூனம் பாஜ்வாவின் க்ளாமரைத்தான் பெரிதும் நம்பினாராம் டைரக்டராக புரோமஷன் ஆன டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர். இப்போது "குப்பத்து ராஜா'-வின் ரிசல்ட்டால், அடுத்தடுத்து ரிலீசாக வேண்டிய ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள "வாட்ச்மேன்', "வெய்யில்' படங்களுக்கு சிக்கலாம்.
* கிருஷ்ணகிரி வட்டார வழக்கில் "அடிச்சுவடு' என்னும் படத்தின் ஷூட்டிங், கிருஷ்ணகிரி, சூளகிரி, காமந்தொட்டி ஆகிய ஏரியாக்களில் நடந்து வருகிறது.
* தமிழ் உணர்வாளரான இயக்குநர் கௌதமன், ஒரு கட்சி ஆரம்பித்தார். ஆனால் அவர் நினைத்தமாதிரி எதுவும் நடக்கவில்லை. கட்சி ஆரம்பித்துவிட்டதால், படம் இயக்கும் வாய்ப்பு ஒன்றும் நழுவிப் போனது. அதனால் இப்போது "சந்தனக்காடு-2'-வை எடுக்கலாமா என்னும் யோசனையில் இருக்கிறாராம் கௌதமன்.
* தமிழ்நாடு திரைப்பட பாடல் ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கவிஞர் இளையகம்பன்.