எம்10 புரொடக்ஷன் பேனரில் சிவா மற்றும் சந்தானம் நடித்த "யாயா' திரைப்படத்தைத் தயாரித்த எம்.எஸ். முருகராஜ், இரண்டாவது படைப்பாக "பக்ரீத்' படத்தைத் தயாரிக்கிறார். "சிகை' மற்றும் "பட்சி' ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்.
நாயகனாக விக்ராந்தும், நாயகியாக வசுந்தராவும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க இருக்கிறார்கள்.
""விவசாயம் செய்வதைப் பெருமையாக நினைத்து, இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயத்தை மேற்கொள்ள முயற்சிக்கிற நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஒரு ஒட்டகம் திடீரென நுழைகிறது.
அந்த ஒட்டகத்தினால் அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள்- அதனால் அவன் மேற்கொள்ளும் நெடுந்தூரப் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும் அதனால் ஏற்படும் திருப்புமுனைகளுமே "பக்ரீத்' படத்தின் கதை'' என்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.
சென்னை, ராஜஸ்தான், கோவா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருப்ப தாகவும் சொல்கிறார் டைரக்டர்.
இசை டி. இமான், எடிட்டிங் ரூபன், ஆர்ட் டைரக்டர் கலை ஆகியோர் மற்ற டெக்னீஷியன்களாக "பக்ரீத்' படத்தில் உள்ளனர்.