இந்திய சினிமாவின் எந்த மொழி ஹீரோயினுக்கும் இப்படி ஒரு வரலாறும் வாழ்க்கையும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை. "நடிகையர் திலகம்' படத்தைப் பார்த்து முடித்ததும் நமக்கு மட்டுமல்ல; சராசரி ரசிகனுக்கும் இப்படித்தான் எண்ணத் தோன்றும். வாழ்க்கையின் கடைசிவரை வள்ளல் திலகமாக வாழ்ந்த நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் "மகாநதி'-யாகவும் தமிழில் "நடிகையர் திலக'மாகவும் ரிலீசாகி மனசை உலுக்கி எடுத்து விட்டது.
டைரக்டர் நாக் அஸ்வினின் நேர்மையான உழைப்பு, பல உண்மைகளை நேர்மையாக பதிவுசெய்துள்ளது. சாவித்திரியின் புகழுக்கும் பெருமைக்கும் களங்கம் கற்பிக்கக்கூடாது என்ற தீர்க்கமான முடிவால், சாவித்திரியின் சாம்ராஜ்ஜியம் சரியக் காரணமாக இருந்த ஒரு சிரிப்பு நடிகரைப் பற்றி, படத்தில் காட்சியோ, வசனமோ வைக்காமல் விட்டிருப்பதன்மூலம் நாக் அஸ்வின் பக்கா ஜென்டில்மேன் என்பதை நிரூபித்திருக்கிறார். படத்தில் பணியாற்றிய அத்தனை நடிகர்களும் டெக்னீஷியன்களும் டைரக்டருக்கு தோள் கொடுத்துப் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். ""பொம்பளப் புள்ளய பெத்துட்டா, அவ பொணமா போறவரைக்கும் கண்ணீர் விடவேண்டியதுதான். தான் தோற்பதை சாவித்திரி விரும்பமாட்டார், ஆனா ஜெமினிகணேசன் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக தோற்றுக்கொண்டே இருந்தார்.'' இப்படி தனது வசனத்தால் வசீகரித்த மதன்கார்க்கி, பாடலிலும் பட்டொளி வீசிப் பறக்கிறார்.
தனது நடிப்பால் சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷை, ஜூனியர் நடிகையர் திலகம் என்று சொன்னாலும் தப்பே இல்லை. இனிமேல் கீர்த்தி சுரேஷ் எத்தனை படங்களில் நடித்தாலும், அவரின் சினிமா கேரியரில் என்றும் அழிக்கமுடியாத திலகம்தான் "நடிகையர் திலகம்.' கீர்த்தி சுரேஷுக்கு இதைவிட சிறப்பான கீர்த்தி கிடைக்கப் போவதில்லை.