ராமாயணத்தின் முக்கிய கருப்பொருள் தர்மம் வெல்லும், பாவம் தோற்கும், தந்தை சொல்லே மந்திரம், சகோதர பாசம், போர் தர்மம், பிறன் மனையை நோக்காமல் இருத்தல், குருபக்தி என குறிப்பிட்டு சொல்லலாம்.

Advertisment

சீதையை கவர்ந்து சென்றதால், சீதையை மீட்க இராமபிரானுக்கும், இராவணனுக்கும் போர் ஏற்படுகிறது. இராவணன் முற்பிறவியில் செய்த பாவத்தினால் மதிகெட்டு மாற்றானின் மனைவியை அடைய விரும்பி, அதனால் அரச பதவியையும், உயிரையும் துறக்க நேரிட்டது.
 
சிவபக்தன், வேதங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்தவன், தானங்களை பல செய்தவன், வீரமும், தீரமும் கொண்டவன் என இராவணனைப் பற்றி பெருமையாக பேசினாலும் ஒரு சிறிய தவற்றினால் நீங்காத பழி சுமைக்கு ஆளானான்.

Advertisment

இராமபிரானுக்கும், இராவணனுக்கும் இடையே கடும் போர் நிலவும் சூழ்நிலையில், போரில் சுக்கிரீவனால் வதைக்கப்பட்ட அரக்கப்படைத் தலைவன் மகோதரனின் (மோதரன்) இறந்த உடலை, இராவணன் போர்க்களத்தில் பார்த்தவுடன் கோபத்துடன் இராமபிரானுடன் போர்புரிய தயாரானதை கம்பன்-

"மோதரன் முடிந்த வண்ண மூவகை யுலகு முற்றும்
மாதிரத் தோடும் வென்ற வன்றொழி லரக்கன் கண்டான்
சேதனை யுண்ணக் கண்டான் செலவிடு செலவி டென்றான்
சூதனு முடுகித் தூண்டச் சென்றது துரகத் திண்டேர்.''

Advertisment

என வருணிக்கிறார்.

கொடிய பாவம்புரிந்த இராவணனும், தருமத்தின் தலைவனான இராமபிரானும் எதிர் எதிரே போர்புரியத் தயாராயினர். போருக்குமுன்பு சங்கொலி முழங்க வில் வித்தையில் திறமைசாலியான இருவரும் வில்லால் முதலில் போரைத் துவக்கினார்கள். அந்த சமயத்தில் ஏற்பட்ட வலிமை மிக்க இருவரின் வில்லின் ஒலியைப் பற்றி கம்பன்-

"ஏழு வேலையு மார்ப்பெடுத் தென்னலாம்
வீழி வெங்க ணிராவணன் வில்லொ-
ஆழி நாதன் சிலையொ- யண்டம்விண்
டூழி பேர்வுழி மாமழை யொத்ததல்.''

வில்லன் ஒலியின் ஓசை அண்ட கோளம் பிளந்து, ஊழிகாலத்தில் பெரிய மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் போது ஏற்படும் ஓசை போன்று மிக பயங்கரமாக இருந்ததை வர்ணி க்கிறார்.

கடும் போரில் இராம பிரானும், இராவணனும் மாறிமாறி முன்னிலைக்கு வந்தனர். வில்லால் போர்புரிந்த இராவணன் பின்பு சூலத்தைக்கொண்டு போர்புரியத் துவங்கினான். 

அதை தடுக்க  இராம பிரான் விடுத்த கணைகள் யாவும் சில சமயங்களில் பயனின்றி போயிற்று. இதனால் ஒரு கட்டத்தில் சற்று மனச்சோர்வும், செய்வதறியாது இராமபிரான் இருந்த சமயத்தில் விண்ணிலிருந்து தேவர்களுடன் போரை பார்த்துக் கொண்டு இருந்த அகத்திய முனிவர் சூரியபகவானை போற்றும்வண்ணம் "ஆதித்யஹ்ருதயம்' எனும் மந்திரத்தை இராம பிரானுக்கு உபதேசிக்கிறார்.

இராமபிரானுக்கு ஏதோவகையில் ஏற்பட்ட மனக்கலக்கத்தையும், மனச்சோர்வையும் நீக்கிய இந்த மந்திரம் வால்மீகி இராமாயணத் தில் 107-ஆம் சர்க்கத்தில் வருகிறது. (இந்த நிகழ்வில் வால்மீகியும், கம்பரும் மாறுப்படுகிறார்கள்.)

"ததோ யுத்தபரிஷ்ராந்தம் சமரே சிந்தயா ஸ்திதம் 
ராவண் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய சமுபஸ்திதம்''    1

எனத் தொடங்கும் சுலோகத்தை அகத்தியர் உபதேசித் தார்.

அகத்திய முனிவர் உபதேசித்த மந்திரத்தை மூன்று முறைஉச்சரித்து, சூரிய பகவானை தியானித்து புத்துணர்ச்சியுடன், புதிய வேகத்துடன் இராமபிரான் போரை தொடர்ந்தார். இதுவரை தனக்கு நிகராக யாரும் போர்புரிய துணியாத நிலையில் இராவணன், வயதில் சிறியவரான இராம பிரானின் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவதைக் கண்டு திகைத்து போனான். வேதங்கள் கூறும் முதற்காரணனா கிய  பரம்பொருள் இவன்தானே என்பதை "வேத முதற் காரணனே?' என இராவணன் எண்ணிய தாக கம்பர் கூறுகிறார்.

மிகுந்த ஆற்றலுடன் திறமையாக போர்புரிந்த இராமபிரானின் தாக்குதலால் நிலைகுலைந்த இராவணன் எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறினான். இராவணன் தளர்ச்சி அடைந்து சோர்வுற்றபோது போர் அறத்தை மதித்து இராமபிரான் அம்பு ஏய்வதை நிறுத்தினார். தன்னுடைய எதிரியான இராவணனை இந்த தருணத்தில் கொல்லுதல் நீதி இல்லை என்பதை உணர்ந்து பெருந்தன்மையுடன் செயல்பட்டார். பின்னர் தெளிவுற்ற இராவணன் மீது பல உத்திகளுடன் வீரத்துடன் போர்புரிந்து கடைசியில் இராவணனை வதைத்து போரில் வென்றார்.

திருமாலின் அவதாரமாக இராமபிரான் மண்ணுலகில் அவதாரம் எடுத்து இருந்தாலும் போர்புரியும் சமயத்தில் அவருக்கு இயற்கை தெய்வமான சூரியபகவானின் அருளாசிதான் தக்க தருணத்தில் வெற்றிக்கு துணைநின்றது.

சூரிய பகவானை போற்றும் இந்த ஆதித்ய ஹ்ருதய சுலோகத்தை பாராயணம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்கி நன்மையைத் தரும். சூரியபகவானை தைத் திங்கள் முதல்நாளன்று வழிபடுவது நம் மரபு. அன்று இந்த சுலோகத்தை பாராயணம் செய்துசகல மங்கலத் தையும் பெறுவோம்.