ப் ஆர். கீர்த்தனா, சென்னை.
என் மகளின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவள் திருமணம் பற்றிக் கூறவும்?
5-8-1999-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷ ஜாதகம். நடப்பு செவ்வாய் தசை. அதில் சனி புக்தி. சனி இவருக்கு 8-ல் நீசபங்கம். எனவே சனி புக்தி முடியும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். வீட்டைவிட்டு வேறிடத்தில்- அனேகமாக மருத்துவமனையில் இருக்கும் சூழல் அமையும். இடையில் ஒரு விருப்பத் திருமணம் தட்டிப் போகும். இனி 2024 செப்டம்பரில் செவ்வாய் தசை சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும்.
நடப்பு செவ்வாய் தசை, சனி புக்திக்கு திருவாரூர் அருகில் கரவீரபுரம் சென்று அங்குள்ள சண்டிகேஸ்வரரை வணங்கவும். மேலும் அருகில் சிவன் கோவில்களிலுள்ள சண்டிகேஸ்வரை வழிபடுவது நல்லது. மேலும் சிவன், விஷ்ணு கோவில்களை சுத்தப்படுத்துவதும் நல்லது.
ப் கருணாகரன், புதுச்சேரி.
என் மகள் மகேஸ்வரியின் திருமணம் பற்றிக் கூறவும். தோஷம் உள்ளதா? அரசு வேலை கிடைக்குமா?
மகேஸ்வரி 5-6-2000-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். இவர் ஜாதகத்தில் 6-ஆமிடத்தில் நான்கு கிரகக் கூட்டணி உள்ளது. சனி நீசம். ராசியில் ராகு, 7-ல் கேது. லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. ராசி, லக்னம் இரண்டும் நாக தோஷம் பெறுகிறது. சனி, 7-ஆமிடம், 7-ஆம் அதிபதி, 2-ஆமிடம் இவற்றைப் பார்ப்பதால், திருமணம் சற்று தாமதமாக நடக்கும். நடப்பு புதன் தசை. இதில் 2023 மார்ச் மாதம் சூரிய புக்தி ஆரம்பிக்கும். அதில் இவளது, உயர்கல்வி தேர்வுமூலம் அரசு பதவி கிடைக்கும். இந்தப் பெண்ணின் மாங்கல்ய அதிபதி சந்திரன், நீச சனி சாரம் பெற்றிருப்பதால், தாலி தானத்திற்குப்பிறகு திருமணம் செய்யலாம். உங்கள் ஜாதி, வேறு பிரிவு வரன் அமையும். 25 வயதிற்குமேல் திருமணம் கைகூடும். மாங்கல்ய ஸ்தானத்தில் பாவர் உள்ள ஜாதகம் கொண்டோர், கும்பகோணம் அருகிலுள்ள திருலோக்கி என்ற தலத்திற்குச் சென்று வணங்குவது நல்லது. அருகிலுள்ள துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.
ப் மாரியம்மாள், விருத்தாச்சலம்.
என் மகன் சாய்சரணின் படிப்பு, பற்றிக் கூறவும்.
சாய்சரண் 10-7-2005-ல் பிறந்தவர். துலா லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். இவனது தாயார், மகனைப் பற்றி மிக கவலையோடு எழுதியிருக்கிறார். அவன் என்ன செய்வான்? பையனுக்கு சுக்கிர தசை நடப்பு. சுக்கிரன் இவனின் 8-ஆம் அதிபதி. மேலும் குட்டிச் சுக்கிர தசை வேறு. அது கொட்டிக் கவிழ்க்காமல் என்ன செய்யும்? மேலும் 8, 9-ஆம் அதிபதியான சுக்கிரனும், புதனும் ஒரே நட்சத்திர பாதத்தில் நிற்கின்றனர். எனவே உயர்கல்வி என்பது முடியாத விஷயம். ஆனால் சுக்கிர தசையில் சனி புக்தி நடக்கிறது. இதில் இவனை ஏதாவது தொழிற்கல்வியில் சேர்த்துவிடுங்கள். இவன் எதிர்காலத்தில் வெளியூர், வெளிநாட்டு வேலைக்குச் செல்வான். மேலும் சொந்தத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் உண்டு. எனவே இப்போது படிப்பு வரவில்லையென்று கவலைப்படவேண்டாம். இவ்விதம் கல்வியைத் தொடர தடங்கல் உள்ள மாணவர்கள், புதன்கிழமை கூத்தனூர் சரஸ்வதிக்கு நெய்தீபம் ஏற்றி வணங்கவேண்டும். மேலும் சரஸ்வதி அந்தாதி என்ற பதிகத்தைப் பாடலாம்.
ப் சி. சுபத்ரா, மயிலாடுதுறை.
எனது மகள் சி. தீபிகா திருமணம் தடைப்படுகிறது. எப்போது நடக்கும்?
சி. தீபிகா 27-10-1994-ல் பிறந்தவர். கடக லக்னம், கடக ராசி. லக்ன, ராசியான கடகத்தில் செவ்வாய் நீசபங்கம். 4-ஆமிடத்தில் அதிக கிரகக் கூட்டணி உள்ளது. இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் 5, 7-ஆம் அதிபதிகள் சாரப் பரிவர்த்தனையில் உள்ளனர். நடப்பு கேது தசையில் சனி புக்தி. பின் 2023, பிப்ரவரியில் புதன் புக்தி ஒரு வருடம் நடக்கும். இதில் இந்தப் பெண் உங்கள் உறவுக்காரப் பையன் ஒருவனை திருமணம் செய்ய வலியுறுத்தியிருப்பாள். அந்தப் பையனை நீங்கள் வேண்டாமென நிராகரித்திருப்பீர்கள். ஆனாலும் இந்தப் பெண் அழிச்சாட்டியமாக அவனைத்தான் கட்டிக்கொள்ளும். எனவே நீங்களே திருமணம் செய்துவைத்துவிடுங்கள். இல்லையெனில், ஓடமாட்டாள். நடந்தே போய் அவளே திருமணம் முடித்துவிடுவாள். ஏதோ 2023-ல் திருமணமாகிவிடும். இதற்குப் பரிகாரம் தேவையில்லை என எண்ணுகிறேன்.