லால்குடி கோபாலகிருஷ்ணன்
""நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.''
-கடுவெளி சித்தர்
பொருள்: கடவுள் எனும் குயவனிடம் சென்று நாலாறு மாதமாய் (பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதால், ஆண்டியாகிய மனிதனிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். தோண்டி (உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடி, தோண்டியைப் போட்டுடைத் தான், தோண்டியாகிய உடல், கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை.
தீயை கடையும்போது, அக்னி குஞ்சு பிறக்கிறது. அது தீக்கடை கோலிலோ, கற் குழிக்குள்ளோ மறைந்திருப்பதில்லை. (நெருப்பு தீ குச்சியிலும் இல்லை, தீ பெட்டியிலும் இல்லை) கடைதல் (உரசுதல்) எனும் செயலால், உருவாகிறது.தன்னிலிருந்தே, தன்னை தோற்றுவித்துக்கொள்ளும் நெருப்பு, பொருட்களால் உருவாகாது. இயக்கத்தால் மட்டுமே உருவாகும். ஆண்- பெண் வேறுபாடே, படைப்பு தொழிலுக்குக் காரணமாகிறது. காலபுருஷன், தன்னை ஆண்- பெண் என இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறான் என்றும், இரண்டு பகுதிகளும் ஒன்றிணைந்து, எல்லா உயிர்களையும் உருவாக்குகின்றன என்றும் பிரகதாரண்யக உபநிடதம் கூறுகிறது.
ஒவ்வொரு ஆணுக்குள், ஒரு பெண்ணும், ஒவ்வொறு பெண்ணுக்குள், ஒரு ஆணும் இருப்பதை உளவியலும் ஒப்புக்கொள்கிறது. ஆணும் பெண்ணும் கலந்தநிலைதான் எல்லா உயிர்களுக்கும் உள்ளது. சொல்லும், பொருளும் போல், இரண்டும் பிரிக்கமுடியாதவை. சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்வதே அர்த்தநாரீஸ்வரர்.
எந்த உயிரில் ஆண் தன்மை மிகுந்துள்ளதோ அது ஆண் என்றும், பெண் தன்மை மிகுந்த உயிர் பெண் என்றும் அறியப்படுகிறது. ஆனால், இரு தன்மைகளும் கலந்தநிலைதான் எல்லா உயிர்களுக்கும் உள்ளது. இயற்கையின் படைப்பு தத்துவத்தை அறிந்தால்தான், உடல், உயிர், மனம் ஆகியவற்றின் இயல்பையும், சார்பையும் புரிந்துக்கொள்ளமுடியும். ஜோதிடத்தில் சூரியன், செவ்வாய், குரு, ஆண் கிரகங்களாகவும்; சனி, சுக்கிரன், சந்திரன் பெண் கிரகங்களாகவும்; புதன் அலி கிரகமாகவும் காணப்படுகிறார். பஞ்சபூதங்களில் நிலமும், நீரும் பெண்ணாகவும்; நெருப்பும், ஆகாயமும் ஆணாகவும்; காற்று தத்துவம் அலியாகவும் கருதப்படுகிறது.
சூரியன், சந்திரன் தவிர மற்ற ஐந்து கிரகங்களுக்கும், ஆண் வீடு, பெண் வீடு எனும் இரண்டு வீடுகள் ஜோதிடத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கு: மேஷம்- ஆண் வீடு; விருச்சிகம்- பெண் வீடு; சுக்கிரனுக்கு: துலாம்- ஆண் வீடு, ரிஷபம்- பெண் வீடு; குருவுக்கு: தனுசு- ஆண் வீடு, மீனம்- பெண் வீடு; புதனுக்கு: மிதுனம்- ஆண் வீடு, கன்னி- பெண் வீடு; சனிக்கு: கும்பம்- ஆண் வீடு, மகரம்- பெண் வீடு.
உடல் உறுப்புகளில் ஆண், பெண், அலி தன்மையை பற்றிய தொடு குறி சாஸ்திரமாகிய "அங்க வித்யாவில்' விளக்கப்பட்டுள்ளது. (பிரஹத் சம்ஹிதை- அத்தியாயம்- 50)
உடல் உறுப்புகளில் ஆண் தன்மை
1. தொடை, 2. உதடுகள், 3. கால்கள், 4. கைகள், 5. பற்கள், 6. கன்னங்கள், 7. முடி, 8. முன் கழுத்து, 9. நகங்கள், 10. கால், கை விரல்கள், 11. கக்கங்கள் 12. தோள்கள், 13. ஆண் குறி, 14. மல துவாரங்கள், 15. கால்- கை முட்டி.
உடல் உறுப்புகளில் பெண் தன்மை
1. புருவங்கள், 2. மூக்கு, 3. வயிற்றின் மடிப்பு, 4. பெண்குறி, 5. கை நடுவிலுள்ள கோடுகள், 6. விரல் நடுவிலுள்ள கோடுகள், 7. நாக்கு, 8. கழுத்து, 9. கால்முட்டியின் பின்பாகம், 10. நுனிக்கால்கள், 11. முழங்கால்கள், 12. உந்தி, 13. காதுகள், 14. பின்கழுத்து.
உடல் உறுப்புகளில் அலி தன்மை
1. முகம், 2. பின்பக்கம், 3. மார்புக்கும் கக்கத்துக்கும் நடுப்பகுதி, 4. முழங்கால்கள், 5. கண்கள், 6. மார்பு, 7. தலை, 8. நெற்றி, 9. இதய பாகம்.
பிரசன்ன ஜோதிடத்தில் பிரசன்னம் பார்க்கவருபவரின் "தொடுக்குறி' அறிந்து, அது, எந்த பாவத்தை, எந்த கிரகத்தைக் குறிக்கிறது என்பதை அறிந்து சொல்வதற்கு இந்த முறையை பயன்படுத்தலாம். இதுதவிர, ஒரு ஜாதகர் உடலின் அமைப்பைக்கொண்டு, ஆண் அல்லது பெண் தன்மையின் ஆளுமையை அறியலாம்.
உடல்நலம் பேணும் இரகசியம். உறங்கும்பொழுது இடதுகை பக்கமாக தான் படுக்கவேண்டும். உடலின் வலதுபாகம், கேது. இடதுபாகம் ராகு. உறக்கம், கனவு, கற்பனை, படுக்கை சுகத்திற்கு, காரகன் ராகு. தோரண மலை- சித்தர்- தேரையர் அருளிய வைத்திய காவியத்தில் "இடது கையிற் படுப்போம்' என்ற கருத்தை நவீன அலோபதி மருத்துவம் இப்போதுதான் புரிந்துகொண்டுள்ளது.
(தொடரும்)
செல்: 63819 58636