குரு

பொன்னவன் என போற்றப் படக்கூடிய குரு பகவான் நவகிரகங்களில் முதன்மையான சுபகிரகமாவார். சுபகிரகங்களில் தலைமை கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடியவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். இவர் தனம், புத்திரம், பொருளாதாரநிலை, கொடுக்கல்- வாங்கல், பொதுக் காரியம், உயர்ந்த பதவி, அந்தஸ்தான உத்தியோகம், தலைமைப் பதவி, தெய்வீக விஷயங்கள், பூர்வபுண்ணியம் போன்றவற்றிற்குக் காரகன். ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருந்தால் பொருளாதாரநிலை, பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும்.

gg

சனி

Advertisment

காலபுருஷ 10-ஆமிடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் தலைமைப் பதவியை நிர்ணயம் செய்கிறார். சனிக்கு கர்மகாரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப நன்மை- தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவருக்கு யோகப் பலன்கள் அனுபவிக்கவேண்டிய அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டுசெல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி- என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிடும்.

ஜனனகால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. ஒரு ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால் மட்டுமே பதவி, உத்தியோகம், தொழில் அனுகூலம் உண்டு. சனி நல்ல நிலையில் இருந்தால் அடித்தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் ஒருங்கே பயன்படுத்துவார்கள். முதலாளியாக இருந்தால்கூட தொழிலாளிபோல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த வருமானமும், அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் இருக்கும். சனி பலம் குறைந்தால் அடிமைத் தொழில், கௌரவம் இல்லாத, நீசத் தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மைகளையும், நோய் நொடிகளும், கஷ்ட ஜீவனமும் நிரம்பியிருக்கும்.

தர்மகர்மாதிபதி யோகம்

Advertisment

ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ முதல்தரமான யோகமாகக் கூறப் பட்டுள்ளது தர்மகர்மாதிபதி யோகம். ஜோதிடரீதியாக ஒருவரின் தலைமைப் பதவியை நிர்ணயம் செய்வதில் லக்னத் திற்கு ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும். ஒன்பதாமிடத்தை தர்ம ஸ்தானம் என்றும், பத்தாமிடத்தை கர்ம ஸ்தானம் என்றும் கூறலாம். அந்த இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம- கர்மாதிபதிகள். அவர்கள் இருவரின் சம்பந்தம் ஜாதகத்தில் எந்த விதத்தில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். அந்த யோகம் பெற்றவர்கள் அதீதமான பொருள் ஈட்டுவார்கள். அவர்கள் இட்ட கட்டளைக்கு, வழிநடத்தலுக்கு எந்த எதிர்ப்புமின்றி அவரைச் சார்ந்தவர்கள் கட்டுப்படுவார்கள்.

ஒரு குடும்பத்தை, ஒரு இயக்கத்தை, ஒரு அணியை, ஒரு அலுவலகத்தை, ஒரு ஊரை, மாநிலத்தை, நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து திறம்பட நிர்வகிப்பார்கள். அவர்களின் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக ஏராளமான தர்ம காரியங்களைச் செய்தவர்கள். கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உயர்ந்த நிர்வாகப் பதவி வகிப்பார்கள்.

காலபுருஷ தத்துவப்படி காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும். காலபுருஷ ஒன்பதாம் அதிபதி, தர்மாதிபதியான குருவிற்கும் கர்மாதிபதியான சனிக்கும் சம்பந்தம் எந்தவகையில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு+சனி சம்பந்தம் என்பது முன்ஜென்மத்தில் செய்த பாவ- புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.

தர்மம் என்றால் ஒருவர் தனது செய்கையால் தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ- புண்ணியங்கள். கர்மம் என்றால் தான் செய்த, செய்யும் தொழில்மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ- புண்ணியங்கள்.

தர்மகர்மாதிபதி யோகத்தால் உண்டாகும் நன்மைகள்

ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணியப் பலன்கள் கிடைக்க ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் சுபவலிமை பெறவேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகமல் இருப்பதோடு அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவிகிதம் சுபத்தன்மையுடன் வரமாக செயல்படும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள் குடும்பமே கஷ்டப்பட்டாலும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்துவிடுவார். இந்த குரு, சனி சம்பந்தம் பலருக்கு பெரிய திருப்புமுனையைத் தந்திருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரைக்கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

ஒவ்வொரு 20 வருடத்திற்கு ஒரு முறை குருவும் சனியும் ஒரே ராசிக் கட்டத்தில் இணையும். பத்து வருடங்களுக்கு ஒருமுறை சம சப்தமமாக பார்ப்பர்கள் இதில் குரு, சனி சேர்க்கை மற்றும் சம சப்தம பார்வை நூறு சதவிகிதம் நற்பலன் தரும். சனி மட்டும் குருவைப் பார்ப்பதும் குரு மட்டும் சனியைப் பார்ப்பதும் ஐம்பது சதவிகிதம் பலன் தரும். சனி குருவை நோக்கிச் சென்றாலும் வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள்.

சனி லட்சக்கணக்கான பணத்தைக் குறிப்பவர். குரு கோடிக்கணக்கான பணத்தைக் குறிக்கும். இந்த கிரக இணைவு, மிக சாதாரண குடுப்பத்தில் பிறந்தாலும் உழைப்பால் உயர்வார்கள் அல்லது தந்தைவழி முன்னோர்கள் தன் வம்சாவளியினருக்குத் தேவையான பொருளை சம்பாதித்து வைத்திருப்பார்கள்.

தர்மகர்மாதிபதி யோகத்தால் ஏற்படும் தீமைகள்

ஜனனகால ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும் நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றாலும் இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக, பிரம்மஹத்தி தோஷமாக செயல்படும். இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாது. குரு, சனி சேர்க்கையை செவ்வாய் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் அந்த நபர் எவ்வளவு சம்பாதித்தாலும் தங்காது அல்லது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்காது. வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும். மன உளைச்சல் அதிகமாகிக்கொண்டே இருக்கும். ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அசுபத் தன்மையோடு செயல்பட்டால் புகழ், அந்தஸ்து கவுரவம் பங்கப்படும். வாழ்க்கைத் தரம் உயராது. குடும்ப உறுப்பினர்கள் மதிக்க மாட்டார்கள். தலைமைப் பதவிகள் கிடைக்காது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இடர்கள் இருந்துகொண்டே இருக்கும். கட்சியின் அடிமட்ட தொண்டராகவே வாழ்வார்கள். சிறிய பொருளுக்கு அதிகம் உழைக்க நேரும்.

குழந்தைக்கு காரக கிரகமான குருவை சனி பகவான் பார்ப்பதால் தாமதமாக குழந்தை பிறக்கும் அல்லது புத்திர பிராப்தம் இருக்காது. அல்லது பெற்ற பிள்ளைகளின் நடத்தையால் மன உளைச்சல் அதிகமாகும். பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காது. அல்லது பேரன்- பேத்தி யோகம் கிடைக்காது.

பரிகாரம்

ஜனனகால ஜாதகரீதியாக குரு, சனி சம்பந்தம் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு இணைந்து தலைமைப் பதவியில் சங்கடங்களை அனுபவிப்பவர்கள் வியாழக்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணி வரையான சனி ஓரையில் 11 முதியவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கவும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை வழிபட தலைமைப் பதவி கிடைக்கும். ஜனனகால ஜாதகரீதியாக குரு, சனி சம்பந்தம் இல்லாதவர்கள் வியாழக்கிழமை இரவு 7.00 மணிமுதல் 8.00 மணிவரையான சனி ஓரையில் காலபைரவ அஷ்டகம் படித்து வர தலைமைப் பதவி தேடிவரும்.

ஆழ்மன எண்ணங்களைக் குறிக்கும் ஐந்தாமிடத்தில் பொதிந்திருக்கும் கர்மாக்கள் எதுவானாலும் மனதின் வழியாகத் தான் வெளியில் வந்தாக வேண்டும். மனதின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனத்தைப் பயன்படுத்தும் நுட்பத் தைத் தெரிந்துகொண்டால் கர்ம வினை களைச் சர்வசாதாரணமாய் வெல்லலாம்.

தொடரும்...

செல்: 98652 20406