வேதஜோதிட பாரம்பரியத்தின்படி யுவன், யுவதிகளின் ஜாதகங்களில், காலபுருஷனுக்கு 7 மற்றும் 5-ஆம் அதிபதிகள்தான் விருப்பத் திருமணத்திற்குக் காரணிகள். 7-ஆம் அதிபதி சுக்கிரனும், 5-ஆம் பாவாதிபதி சிம்மத்து சூரியனும் சம்பந்தம்பெற, சமூக மரபுகளை மீறிய- விலக்கிய மணமாலைதான் விதி. இதில் புத்திகாரகன் புதன் மற்றும் சூடான ரத்தகாரகன் செவ்வாய் கிரகங்களை 7-ஆம் பாவம், 5-ஆம் பாவாதிபதிகளாகப் பெற்றவர்களே இனம், மதம், மொழிக்கலப்பில் மணவாழ்வை அமைத்துக் கொள்கின்றனர்.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ மேஷ லக்னம் அல்லது மேஷ ராசியாகி (செவ்வாய்), சுக்கில சுரோனிதகாரகன் சுக்கிரனும், தைரிய ஆர்வக்காரகன் சூரியனும் மேஷத்தில் கூடிநின்றால், அனேகர் வளர்த்த வீட்டைக் கடந்தே- ஓடிச்சென்று இஷ்ட திருமணம் செய்து கொள்கின்றனர். தனுசு ராசி மற்றும் ரிஷப ராசிப் பெண்களுக்கு மனமும் உடலும் துணிந்தே தீயவழியில் தடுமாறச் செய்வதில் (குடும்பப் பெரியவர்களின் அபிப்ராயம், பாரம்பரியங்களை எடுத்தெறிய வைப்பதில்) இவர்களின் புதனும், செவ்வாயும் கில்லாடிகள். புதன், செவ்வாய் வேதகன்கள் (Anti Claimax) வலுப்பெறாமல் ஜாதகத்தில் இருப்பதே நல்லது.
அப்போதுதான் பெற்றோர்கள் நிச்சயித்த- பார்த்த வரன்களை ஓதுவார் வேதங்கள் முழங்க, கரம் பிடித்து மணமேடை ஏறுவார்கள்.
பேணி வளர்த்த குடும்பத்தாரை வெறுத்து ஓடிச்சென்று (Elop) ரகசியமாய் திருமணம் செய்து, பல பிரச்சினைகளை வாழ்வில் சந்தித்து (கேட்டால் நமக்கே நெஞ்சம் விம்மும்) போராட்டத்திற்கு இடையேயும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி, மறுவருடமே விவாகரத்துக் கொடி பிடிப்பவர்கள் யார் எனக்கேட்டால், கடகப்பெண்களும் மிதுன மாதுக்களும்தான். ஏனென்றால் இவர்களுக்குதான் செவ்வாய், சனி மற்றும் சுக்கிரன் முறையே 5, 7-ஆம் அதிபதிகளாக அமைவர். இரு பிரிவினை கிரகங்களும் இரு பகை கிரகங்களும் பூர்வ புண்ணிய களத்திர பாவங்களுக்குத் தொடர்பு பெறும்போது பெற்றோர் கண்களில் செந்நீர் வடிக்க நேரிடுகிறது, பெரிய குடும்பங்களுக்குக்கூட தலைக்குனிவை இக்கிரக அமைப்பு தருவது அனுபவ ஜோதிடம்.
பெரும்பாலும் தனுசு ஆடவருக்கும், ரிஷப எழில் மங்கையருக்கும் செவ்வாய், புதன் 5, 7-ஆம் வீட்டில் ஆட்சி பலமாகி நின்று, ராகுவும் 7, 5-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தப்பட்ட நிலையில் அதீதக் காதல் வலையில் சிக்கி, மதம், இனக் கலப்புக் கல்யாணம் நடக்கும்.
"அடைந்தால் மகாதேவி, மகாதேவன்; இல்லையேல்... என்று, பெற்றோரும் உறவினரும் மனம் வெதும்பும்படி போராடும் நெஞ்சங்கள், மேஷ ராசி, மேஷ லக்ன ஜாதகர்களே. குறிப்பாக 5, 7-க்குடைய சூரிய, சுக்கிரர்கள் கூடி 6, 8-ஆம் வீட்டில் நின்ற இளமைப் பருவத்தினர் இருவீட்டாருடன் போராடி கடிமணம் ஏற்பர். அச்சமின்றி கடத்தல், போலீஸ் ஸ்டேஷன் புகுதல் இவர்களுக்கு எளிதான கலையாகும்.
இதற்கு மாறாக கும்ப லக்னப் பெண்களின் சூரியனும் (7-ஆம் அதிபதி) புதனும் (5-ஆம் அதிபதி) இணைந்து விருச்சிகம், மேஷ வீடுகளைத் தவிர்த்து எங்கு நின்றாலுமே நண்பர்கள், மாமன்வழி, தூரத்து உறவினர்களின் ஆதரவோடு ரிஜிஸ்டர் ஆபிசில் திருமணம் ஏற்பர். விட்டுக்கொடுத்து வாழும் தீராக் காதல் நெஞ்சம் இது. இவர்களின் புதன் தசை அல்லது சுக்கிர புக்தி காலங்களில், முதல் குழந்தை பெற்ற பின்பு மீண்டும் பெற்றோருடன் இணைந்துவிடுவது அனுபவ ஜோதிடம்.
கன்னி ராசி, லக்ன ஜாதகர்களில் பெரும்பாலானவர்களுக்கு, சனியும் குருவும் கூடி 3, 6, 8-ல் நின்றுவிட்டால், இடம் பெயர்ந்து திடீர்க் கல்யாணம் (ஓடிச்சென்று) செய்து கொள்வார்கள். இவர்களுக்கு சூரிய தசையோ, ராகு புக்தியோ அடுத்து வந்தால், துணைவரால் வெகு துன்பமடைந்து (சிகரெட் நெருப்பால் சுடுவது, போதை ஊசி குத்தல்) பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஜோதிட நியதிப்படி லக்னம், லக்னாதிபதி மற்றும் சூரிய சந்திரர்களுக்கு ராகு- கேதுக்களின் தொடர்பிருந்து, வாலிலிபப்பருவத்தில் பாதகாதிபதி மற்றும் சர்ப்ப கிரகங்களின் தசா புக்தியும் நடக்கும் கோட்சாரங்களில், அசிங்கம், அவமானம் தந்து, தவறான தொடர்புகளால் பிறந்த வீட்டைவிட்டுப் பறந்து திருமணம் ஏற்க நேரிடுகிறது. இதில் வீண்பழி சேர்ப்பதிலும் குடும்ப உறவுகளைப் பிரிப்பதிலும் ராகு கை தேர்ந்தவர்.
பெற்றோர்களே, உங்களின் பிள்ளைகள் ஜாதகங்களில் 2, 8, 1, 7-ல் தனித்த ராகுவோ கேதுவோ நின்றால், மணவாழ்வில் பெரும் பிரச்சினைகளைத் தரமாட்டார்கள். ஓரளவு சுமுகமான மணவாழ்வை அனுபவிப்பார்கள். ஆனால் இந்த 2, 8, 1, 7-ஆம் வீடுகளில் நின்ற ராகுவுடனோ கேதுவுடனோ சூரியன், செவ்வாய், சனி, சந்திரன், சுக்கிரன் எவராவது கூடி நின்றால் மட்டுமே... பருவக் கன்னியர்- காளைகளை சுதந்திரப் பிரியர்களாக்கி, தனித்து (ஓடிச் சென்று) வாழும் நிலைக்கு ஆளாக்கும். எத்தனைப் பொருத்தம் பார்த்தும், வேதியர் மறை ஓதி திருமணம் முடித்தபோதும், ஆண்களின் சுக்கிரனோடு சனி சேர்ந்தால், வாய்த்தவள் சிடுசிடுக்கும் சிங்காரிதான்; குறைபாடும் குயில்தான்.
செல்: 94431 33565