Karanam

வணிசை கரணம்!

னித ஜீவிதத்தில் உயர்வுக்கு வழிவகுக்கும் சாஸ்திரமான ஜோதிடவியலில் ஒரு முக்கிய அங்கமான கரணம் நிகழ்த்தும் அற்புதங்கள் எண்ணில் அடங்காதவை யாகும். ஆகச்சிறந்த மானுடத்தின் வளர்ச்சியிலும், உயர்விலும் இந்த ஜோதிடம் பின்னிப் பிணைந்துள்ளது. அதில் அமைந்துள்ள உறுப்புகளான வாரம், நட்சத்திரம், யோகம், திதி, கரணம் ஆகியவற்றுள், காற்றின் தத்துவமான கரணம் ஒரு மனிதனின் உயர்விற்குப் பெரும் பங்காற்றுகின்றது என்பதை கண்கூடாக உணர முடிகின்றது.

Advertisment

கரணங்களின் வரிசையில் ஆறாவது கரணமான வணிசை பற்றிப் பார்க்கலாம்.

வணிகர் என்பதைக் குறிக்கும் சொல்லிலிருந்து மருவி வந்ததுதான் இந்த வணிசை என்கின்ற சொல்லாகும். இந்த கரணத்தை வணிஜை என்றும் குறிப்பிடுவார்கள். ஆதிநாயகன் அருட்கடல் ஈசனை நாயன்மார்கள் விடையேறும் எங்கள் ஈசன் என்று அழகு தமிழில் ஆர்ப்பரித்துப் பாடியுள்ளனர். அந்த மகா சக்தியின் இருப்பைத் தன்மேல் ஏற்றிய விடை என்னும் காளைமாடுதான் வணிசை கரணத்தின் விலங்கும்.

இந்தக் காளைமாடு அனேக ஆலயங்களில் நந்தீஸ்வரராக அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். வணிசை கரணத்தில் பிறந்தவர்கள் எதிர் பாலின ஈர்ப்பும், நேசமும் மிக்கவர்களாக இருப்பார்கள். மற்ற உயிர்களையும், அதன் ஆற்றலையும் ரசித்துப் போற்றுகின்ற தன்மை இவர்களிடையே இயல்பாகவே இருக்கும். தங்களின் பணி சார்ந்தவர்களிடம் அதீதமான ஈர்ப்பினைக் கொண்டவர்களாகவும், அவர்கள்மீது பற்றும்அன்பும் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

Advertisment

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் வியாபார நுட்பமும், சூட்சுமமும் அறிந்தவர்கள். இவர்களை மிஞ்சும் தன்மையை யாருக்கும் வியாபார விஷயத்தில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசும் தன்மை உடையவர்கள். பேச்சின்மூலம்தனக்கான விஷயத்தை சாதித்துக் கொள்வார்கள். நிதர்சன உலகத்தோடு ஒத்துவராத சிந்தனை ஓட்டத்தின்வசம் இவர்கள் பயணிப்பார்கள். உணவு விஷயத்தில் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறி மீண்டும் அசைவத்திற்கு மாறிவிடும் நிலை இவர்களுக்கு இருக்கும்.

இவர்களின் வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதீதமான தகவல் சேமிப்பாளர்கள். நிறைய புத்தகங்கள் வாங்கி சேமிக்கும் தன்மை இவர்களிடம் இருக்கும். எதையும் நிறைவாகக் கொடுத்தால் மட்டுமே பெற்றுக் கொள்வார்கள். நேர்மையை விட்டுக்கொடுக்கும் சூழல் வந்தால் நோயின் தாக்கம் மேலோங்கும்.

மருமகன்- மருமகள் விஷயத்தில் சிறிய தொந்தரவுகள் இருக்கும்.இவர்களின் வம்சாவளியில் போலீஸ், இராணுவம் சார்ந்தவர்கள் இருப்பார்கள்.

அதிதேவதை- லட்சுமி

மிருகம்- காளை மாடு, எருது

மலர்- நீலோற்பவ மலர்; நீல சங்குப் பூவையும் பயன்படுத்தலாம்.

நைவேத்தியம்- தயிர்

தூபம்- சங்குப்பொடி

பாத்திரம்-பஞ்சலோகம்

தெய்வம்- திருமழபாடி வைத்தீஸ்வரன் சிவன் கோவில்

கிரகம்- சூரியன்

இந்த கரணத்தில் பிறந்தவர்கள் பிரதோஷ வழிபாட்டினை மேற்கொண்டால் சிறப்பை அடையமுடியும். வெண்மை நிற ஆடை அதிர்ஷ்டத்தை அளிக்கும். வணிசை கரணம் நடப்பில் உள்ள நேரம் செல்வம் சம்பந்தமான விஷயத்திற்குஏற்றது. டிரேடிங் பிசினஸ், புதியதாக ஒன்றைத் துவங்குவது, அக்ரீமென்ட் போடுவது, வங்கியில் கணக்கு ஆரம்பிப்பது, போன்றவை சிறப்பினைத் தரும்.

அடிமட்ட கூலிவேலை ஆட்களைத் தேர்வு செய்யும்பொழுது வணிசைகரணத்தில் தேர்வு செய்தால் அவர்கள் அதிகமாக உழைத்து லாபத்தை ஈட்டித்தருவார்கள். இந்த கரணம் ஆரம்பிக்கும் நேரத்தில் கோட்சாரத்திலுள்ள லக்னாதிபதியை வணங்கித் தொடரும் செயல் நிச்சயமாக வெற்றிபெறும். அதிர்ஷ்டக் கல் வியாபாரம் செய்வதற்கு வணிசை கரணம் மிகவும் ஏற்றது. இந்த கரணத்தின் நாதனாக சூரியன் வருவதால், சூரிய உதய நேரத்தில் சூரிய காயத்ரிஜெபம் செய்வது மிகவும் சிறப்பினைத் தரும்.

திருநீறு அணிந்து செல்வது நன்மை யளிக்கும். இவர்களின் ஜாதகத்தில் சூரியன் எந்த ராசியில் அமர்ந்துள்ளதோ, அந்த ராசி சுட்டிக்காட்டும் மாதம் எதுவோ, அந்த மாதத்தில் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருவது எல்லாவற்றையும் நன்மையாக்கித் தரும். இவர்களின் கைபேசியில் ஒரு காளை மாட்டின் உருவப்படத்தை ஸ்கிரீன் சேவராகவைத்துக்கொள்வதும், அதோடு காளை மாட்டின் பொம்மை போட்டு கீ செயின் உபயோகிப்பதும் சிறப்பினை அளிக்கும்.

பிரதோஷம்தோறும் நந்தி வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.வீட்டில் வழிபாட்டுக்குரிய தெய்வங்களுக்கு சங்குப்பொடி தூபம் காட்டி, மஞ்சள் பூசி, நீல சங்குப் பூவினை மாலையாகக் தொடுத்து, பஞ்சலோக பாத்திரத்தில் தயிர் நைய்வேத்தியம் வைக்க, வாழ்வில் அனைத்து சிறப்புகளையும் அடையமுடியும். அரியலூர் அருகிலுள்ள திருமழ பாடி வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று சென்று அர்ச்சனை செய்து, ஒரு பாக்கு மட்டை தட்டில் 11 கமலா ஆரஞ்சுப் பழம், 11 வெற்றிலை, 11 பார்க்குகளுடன் சிறிதளவு தட்சனையை வைத்து அர்ச்சகரிடம் கொடுத்து வழிபட்டு வீடு திரும்ப, எல்லா வளங்களும் உங்களுடனேயே வந்தடையும்.

செல்: 80563 79988