பிறப்பு முதல் வாழ்வியல் முழுவதுமாய் மனிதன் சில குணங்களுடனே பயணிப்பது இயல்பு. அவற்றில் நற்குணங்கள், தீய குணங்கள் என்று பகுக்கப்பட்ட நிலையில் பொறாமை, பேராசை, கோபம், காமம் என்ற எண்ணங்களோடு கலந்தே பயணிக்கின்றோம்.
ஆனால் இது எல்லா தரப்பினராலும் சுமூகமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அமைதி, பேரன்பு, காதல் போன்ற குணங்கள் நேர்மறையாகவும், மேற்கூறிய கோபம் சார்ந்த குணங்கள் எதிர்மறையாகவும் மனிதர்களிடையே கையாளப் படுகிறது.
இந்த நேர்மறை, எதிர்மறை, குணங்களின் அளவுகோலைப் பொருத்தே, ஒரு மனிதனின் தரத்தை இந்த சமூகம் தீர்மானிக்கிறது.
இதில் எந்த மாதிரியான பாவகத் தொடர்பும், கிரக அமைப்பும் மனிதனை இவ்வாறெல்லாம் இயங்கச் செய்கின்றது என்பதைக் காணலாம்.
பொறாமை
நம்மில் பலராலும் அடிக்கடி யோசிக்கக்கூடிய விஷயம் பொறாமை. நம் அளவிற்குத் தகுதியுடைய ஒருவர், தன்னைவிட சிறப்பாக இருந்தால் அவர்மீது குவிக்கப்படும் எண்ணம் பொறாமையாகும். இது திருஷ்டி என்கின்ற கெடுதலை உருவாக்கும் ஆற்றலுள்ள தன்மையாக மற்றவர்களிடம் செயல்படும்.
பொதுவாக சனி லக்னம், 5, 9 ஆகிய பாவங்களைத் தொடர்புகொள்ளும்பொழுது அவர்கள் இயற்கை யாகவே தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் நிலையைத் தன் நிலையோடு ஒப்பிட்டுப்பார்த்து, பெருமூச்சுவிட்டு பொறாமைப் படுபவர்களாக இருப்பார்கள். அதோடு சுக்கிரன் மற்றும் சந்திரன் லக்னத்தில் அமர்வுபெறும்பொழுதும், பிறர் நிலையைத் தன் நிலையோடு இணைத்து பொறாமைப் படும் தன்மையை உருவாக்கிவிடும்.
பொறாமைப்படுபவர் யாராக இருந்தாலும், அது எத்தகையவர்களை பாதிக்கும் என்றால்- யாருடைய லக்னம் ராகுவின் தொடர்பில் உள்ளதோ- அதாவது லக்னத்தில் ராகுவோ, லக்ன புள்ளி திருவாதிரை, சுவாதி, சதயம் என ஏதாவது ஒன்றில் இருப்பவர்களுக்கு ராஜதிருஷ்டி ஏற்படும். இவர்கள் பொறாமை எண்ணத்துடன் இருப்பவர்களால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு ஜாதகம் அமைந்தவர்கள் தங்களின் முயற்சியை எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் வெளிப்படுத்தக் கூடாது. மீறினால் சிரமத்தை அனுபவிக்க நேரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பேராசை
இதை நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடவே முடியாது. இது எல்லோரிடமும் சற்று தலைகாட்டியே செல்லும்.
மாணிக்கவாசகர் "மகத்தில் புக்கதொரு சனியது போல' என்றும், தாயுமானவர் "மகத்தில் புகுந்த சனி என்றானாய்' என்றும் கூறியுள்ளனர்.
கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில்- அதாவது ஆசை, மனது, காதல் ஆகியவற்றைக் குறிக்கக்கூடிய, காலபுருஷனுக்கு ஐந்தாம் வீடான ஆன்மகாரகன் வீட்டில் அமர்ந்துள்ள மக நட்சத்திரத்தில் சனி செல்லும் காலம் பேராசையைத் தூண்டி, அதன்விளைவாக பல பிரச்சினையை அனுபவிக்கும் சூழலை உருவாக்கிவிடும் என்பதை மகான்கள் கூறியுள்ளனர்.
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் இடம் என்பது ஆசை; 11 என்பது பேராசை. அதனால்தான் இரண்டாவது திருமணத்திற்குப் 11-ஆம் பாவகத்தோடு இணைத்துப் பலன் காணப்படுகிறது. 5, 11 தொடர்பு பேராசையை அளிக்கும் ஜாதக அமைப்பாகும்.
அதோடு மட்டுமல்லாமல், கிரகங்களில் போகக்காரகன் ராகு பேராசை என்னும் புயலை நிச்சயமாகத் தொடங்கி வைப்பார். ராகு ஏற்றுள்ள பாவகரீதியான நிறைவேறாத ஆசையை நிறைவேற்றவே இப்பிறப்பு என்கின்றது ஜோதிட நூல்கள்.
லக்னத்தோடு அமர்ந்த ராகு, தன்னைப்பற்றிய சிந்தனை மேலோங்கி தனக்கான ஆசையை நிறைவேற்றிக்கொள்ள துடிப்பவர்களைப் பிரதிபலிக்கின்றது. இவர்கள் முற்பிறவியில் தன்னை கவனிக்காமல் பல பிரச்சினைகளைக் கையாண்டவர்கள் என்கின்றது ஜோதிட சிந்தாமணி.
கோபமும், காமமும்
கோபம் என்றதும் நம் நினைவுக்கு வருவது செவ்வாயும், ஆறாம் பாவகமும்தான். ஆனால் செவ்வாய் நேரடியான கோபத்தை வெளிப்படுத்தும். சனி தனது கோபத்தை தாழ்வு மனப் பான்மையுடன் வெளிப்படுத்தும். ராகு வஞ்சகமாக நிறைவேற்றும். இதனுடன் சுக்கிரன் சேரும்பொழுது சிரித்துக்கொண்டே தனது காரியத்தை நடத்திச் சென்றுவிடும்.
ஜாதகரீதியாக லக்னம், 6-ஆம் பாவகம் தொடர்பு, 6, 2 தொடர்பு அதீத கோபத்தை வெளிப்படுத்தும். இதனுடன் 8-ஆம் பாவகம் தொடர்பு பெறும்பொழுது அமைதியான, தீர்மானிக்கமுடியாத முடிவுகளை, விளைவுகளை ஏற்படுத்திக்கூடிய கோபத்தைத் தந்துவிடும்.
மேலும் லக்னத்தில் சூரியன் அமரும்போது நேர்மையான, ஆளுமைத் தன்மை வாய்ந்த கோபத்தைப் பிரதிபலிக்கும். பெரும்பாலும் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசி, லக்னத்தைச் சார்ந்தவர்களுக்கு இந்த கோபத்தின் தன்மை சற்று அதிகமாகக் காணப்படும். ஏனென்றால் இவை மூன்றும் பஞ்சபூதத் தத்துவத்தில் நெருப்பு தத்துவத்தைக் கொண்டவை.
இவர்கள் தன்னைப் பற்றியும், தனது பரம்பரை, மூதாதையர், தனக்கான தகுதி ஆகியவற்றையும் அதிகமாக வெளிப்படுத்துவார்கள். இதில் ஏதேனும் இடர்ப்பாடு ஏற்பட்டால் இவர்கள் வெளிப்படுத்தும் கோபத்திற்கு அளவே இருக்காது.
ராகு, சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் காமத்ரிகோணத்தில்- அதாவது 3, 7, 11 பாவங்களோடு தொடர்புகொள்ளும்பொழுது, அந்த ஜாதகர்கள் அதீத காம இச்சைக்கு ஆட்படுகிறார்கள். 4-ஆம் பாவகம் ஒரு ஜாதகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பாவகத்தில் சுக்கிரன், ராகு, செவ்வாய் ஆகியவை எந்த விதத்திலாவது கூடி அமர்வது காமத்தின் தன்மையினை சற்று மிகுதியாகக் காண்பிக்கும்.
மேற்கூறிய கிரகங்கள் ஆளுமை பெறும்பொழுது நிச்சயமாக அந்த ஜாதகத்தில் குருவின் தன்மை சற்று குறைந்தே காணப்படும். எனவே சிந்தனைத் திறன் இவர்களை செயல்பட முடியாத அளவிற்கு சென்று நிறுத்தும்.
எனவேதான் பெண்களின் ஜாதகத்தில் இந்த மூன்று கிரகங்களுக்கும், காமத் திரிகோணங்களுக்கும் தொடர்புபடுத்தி பலன் அறியப்படுகிறது.
சிந்தனைகள் எவ்வாறு இருப்பினும் அந்த ஜாதகத்தின் கர்ணநாதன், நட்சத்திர வழிபாட்டுக்குரிய பொருட்கள், திதி தேவதைகள் ஆகியவற்றை சரணடையும் பொழுது இந்த குணங்கள் எங்கு வெளிப்பட வேண்டுமோ அங்கு மட்டும் வெளிப்பட்டு வாழ்வில் சுபிட்சத்தை அளிக்கும்.