இந்த வார ராசிபலன்

25-2-2018 முதல் 3-3-2018 வரை

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

Advertisment

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

sivan

Advertisment

ஆரம்பம்- மிதுனம்.

26-2-2018- கடகம்.

28-2-2018- சிம்மம்.

2-3-2018- கன்னி.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 2, 3, 4.

செவ்வாய்: கேட்டை- 2, 3.

புதன்: பூரட்டாதி- 2, 3, 4, உத்திரட்டாதி- 1.

குரு: விசாகம்- 4.

சுக்கிரன்: பூரட்டாதி- 2, 3, 4.

சனி: மூலம்- 2, 3.

ராகு: ஆயில்யம்- 1.

கேது: திருவோணம்- 3.

கிரக மாற்றம்:

குரு அதிசாரம்.

27-2-2018- மீன புதன்.

3-3-2018- மீன சுக்கிரன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சியாக இருக்கிறார். அதனால் அட்டமாதிபத்திய தோஷமில்லை. அவருடன் குருவும் சேர்ந்து 12-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 9, 12-க்குடைய குரு 12-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எனவே சிலர் குலதெய்வ வழிபாடுகளில் செலவுசெய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். திருவிழா போன்ற வைபவங்களில் கலந்துகொள்ளலாம். 2-ஆம் இடத்தை குருவும் செவ்வாயும் பார்ப்பதால் பொருளாதாரத்தில் பற்றாக்குறை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 4-ல் ராகு நின்றாலும் குரு பார்ப்பதால் ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. தாயார் அல்லது தகப்பனாருக்கு கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்து விலகிவிடும். 10-க்குடையவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். வேலையிலும் சரி; சொந்தத் தொழில்துறையிலும் சரி- நன்மைகள் உண்டாகும். முன்னேற்றம் தெரியும். இரும்பு, மிஷனரி சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறவர்களுக்கும், ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்கிறவர்களுக்கும் இக்காலம் நற்காலம்- பொற்காலம். 27-ஆம் தேதி மீனத்தில் புதனும், மார்ச் 3-ல் மீனத்தில் சுக்கிரனும் மாறுகிறார்கள். கடன் பிரச்சினை குறையும். உடன்பிறப்புகள் வகையில் சுபச்செலவுகள் உருவாகும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

இதுவரை 6-ல் இருந்த குரு இப்போது 7-ஆம் இடத்தில் அதிசாரமாக மாறி உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் சுக்கிரனும் 10-ல் பலம் பெறுகிறார். இதுவரை பட்ட துன்பங்களும் துயரங்களும் இனி விலகிவிடும். அப்பாடா! பிரச்சினை தீர்ந்தது என்று ஆனந்தப் பெருமூச்சுவிடலாம். 9, 10-க்குடையவர் 8-ல் மறைவது ஒருவகையில் குற்றம்தான். 3-ஆவது அல்லது 4-ஆவது அட்டமத்துச்சனி நடப்பவர்களுக்கு செயல் தேக்கம், காரிய முடக்கம், நடமாட்டம் போன்றவற்றில் பிரச்சினை ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் தன்னிச்சையாக- சுதந்திரமாக செயல்படமுடியாது; இன்னொருவர் தயவு தேவைப்படும். பிப்ரவரி 27-ல் வாக்காதிபதி புதன் நீசமடைகிறார். பேச்சில் பிரச்சினைகள் வரலாம். பேச்சுப்பயிற்சி அல்லது வைத்தியச் சிகிச்சை தேவைப்படும். என்றாலும் குரு பார்வை இருப்பதால் செல்வாக்கு, மதிப்பு, மரியாதைக்குக் குறைவில்லை. 9-ல் கேது நிற்க, ராகு பார்ப்பதால் குலதெய்வ வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நிறைவேறும். குலதெய்வக் கோவிலுக்கு உங்களால் இயன்ற நற்காரியங்கள், திருப்பணிகள், அன்னதானம் போன்ற சுபகாரியங்களும் நடக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் தொடக்கத்தில் 9-ல் நிற்கிறார். பிப்ரவரி 27-ல் 10-ல் நீசமடைகிறார். அவருக்கு வீடு கொடுத்த குருவின் சாரம் பெற்று, குருவால் பார்க்கப்படுவதால் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் எற்படுகிறது. அடுத்து மார்ச் 3-ல் மீன ராசிக்கு மாறும் சுக்கிரன் உச்சபலமடைவதால் அவ்வகையிலும் நீசபங்க ராஜயோகம் பலமாகிறது. எண்ணங்களில் எழுச்சி ஏற்படும். மனதில் மகிழ்ச்சி உருவாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் மளமளவென நடக்கும். சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்படலாம். கல்வி பயிலும் மாணவ- மாணவியருக்கு புத்திக்கூர்மையும், திறமையும் பிரகாசமும் உண்டாகும். பெற்றோர்கள், பெரியவர்கள், தனவந்தார்களின் சகாயமும் நட்பும், ஆதரவும் பெருகும். உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியும். 2-ஆம் இடத்து ராகு சில நேரங்களில் விதாண்டாவாதங்களை ஏற்படுத்தினாலும், குரு பார்வையால் குறைகள் மறையும். சகிப்புத் தன்மையாலும் பொறுமையாலும் குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை சமாளிக்க வேண்டும். சிலர் மனைவியின் பெயரில் சொத்து சுகம், ஆபரண அணிகலன்களை வாங்கலாம்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் ராகு நிற்பது ஒருசில சங்கடங்களை உருவாக்கினாலும், பாக்கியாதிபதி குரு திரிகோணாதிபதி செவ்வாயோடு சேர்ந்து ராசியைப் பார்ப்பதால் சங்கடங்கள் எல்லாம் விலகிவிடும். சச்சரவுகள் எல்லாம் ஓய்ந்துவிடும். சிலருக்கு உத்தியோகத்தில் அலைச்சல் திரிச்சல் அதிகமாக இருந்தாலும் மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் ஏற்படும். சிலருக்கு பதவியில் இடமாற்றம் ஏற்பட்டாலும் தொடக்கத்தில் பிடித்தமில்லாத இலாகா அமையும். புதன், சுக்கிரன் பெயர்ச்சிக்குப் பிறகு விரும்பிய துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடையலாம். சுக்கிரன் மீனத்தில் உச்சமானதும், புதன் மீனத்தில் நீசபங்கமானதும் பலன் தருவார்கள். 7-ல் உள்ள கேதுவும், 7-க்குடைய சனியும் 6-ல் மறைவது மனைவி வகையில், மனைவியின் உறவினர், சுற்றத்தார் வகையில் சிலருக்கு அன்புத் தொல்லைகள் ஏற்படலாம். வம்புத் தொல்லை என்பது வேறு; அன்புத்தொல்லை என்பது வேறு. சனி, குரு வீட்டில் நிற்க, குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் வம்புத்தொல்லைக்கு இடம் இல்லை. வேலை பார்க்கும் மனைவிக்கு அல்லது கணவருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். இன்றில்லாவிட்டாலும் பிறகு அதற்கு நற்பலன், அனுகூலம் தெரியும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவரோடு இணைந்திருக்கும் புதனும் சுக்கிரனும் அடுத்து மீன ராசிக்கு மாறப்போகிறார்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புகள் கூடிவரும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சில சாதனைகளை சாதிக்கலாம். 8-க்குடையவர் 4-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். செவ்வாய் அங்கு ஆட்சி பெறுவதால், மருத்துவச் சோதனைகள் எல்லாவற்றிலும் "குறையில்லை- பிரச்சினையில்லை' என்று ரிப்போர்ட் வந்தாலும், உங்களுக்கு செயல்பட முடியாதளவு ஏதோ ஒரு தேக்கம், இயலாமை காணப்படலாம். 6-க்குடைய சனி 5-ல் இருப்பதால் அது மனக்குறையா அல்லது வேண்டாதவர்கள் யாராவது செய்த செய்வினைக் கோளாறா என்றெல்லாம் குழப்பம் நீடிக்கலாம். உண்மையில் செய்வினை என்பது இருக்கிறதா, இல்லையா என்பது பட்டிமன்ற விவாதத்திற்குச் சமம். மாசி மகத்தன்று (பௌர்ணமி) ஹோலிப் பண்டிகை. மன்மதனை சிவன் எரித்த நாள். எரிந்த கட்சி- எரியாத கட்சி என்று விவாதம் நடக்கும். மன்மதன் எரிந்தது உண்மை. ஆனால் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் என்பது சாபவிமோசனம். இப்படி, நடக்குமா நடக்காதா என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

thisweekrasiகன்னி ராசிநாதன் புதன் தொடக்கத்தில் 6-ல் இருக்கிறார். பிப்ரவரி 27-ல் மீனத்தில் நீசமடைவார். அதனால் எதிரி, போட்டி, பொறாமை, கடன் போன்ற 6-ஆமிடத்துக் கெடுதல்கள் எல்லாம் மறைந்துவிடும். அவருக்கு அனுகூலமாக 11-ஆமிடத்து ராகுவும் வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியம், வழக்குகளில் வெற்றியை ஏற்படுத்தித் தருவார். மார்ச் 3-ஆம் தேதி 2, 9-க்குடைய சுக்கிரனும் 7-ல் உச்சபலம் பெறுவார். அப்போது புதனுக்கு நீசபங்க ராஜயோகம். அவர்களை குருவும் பார்க்கிறார். எனவே தாயார் பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ, பெண்கள் ஜாதகமாக இருந்தால் கணவர் பெயரிலோ வீடு, வாகனம், மனை போன்ற பாக்கியங்கள் உண்டாகும். சிலர் அமைப்புக்கு தொழில் யோகமும் அமையும். அல்லது வேலை வாய்ப்பும் உண்டாகும். படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் உயர்வும் முன்னேற்றமும் தெரியும். திருமணமாகி வாரிசு தடைப்பட்டவர்களுக்கும் தாமதப்பட்டவர்களுக்கும் இக்காலம் வம்சவிருத்தி ஏற்படும். பெண்களுக்கு (5-ல் கேது இருப்பதால்) கர்ப்பப்பை சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் கருவளர்சேரி சென்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். கும்பகோணம்- வலங்கைமான் சாலையில் மருதாநல்லூர் அருகில் உள்ளது.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் தொடக்கத்தில் 5-ல் திரிகோணத்தில் இருக்கிறார். மார்ச் 3-ல் 6-ஆம் இடம் மீனத்துக்கு மாறுவார். அங்கு உச்சமடைவார். அதேபோல வாரத்தொடக்கத்தில் 5-ல் இருக்கும் புதன் பிப்ரவரி 27-ல் மீன ராசிக்கு மாறுவார். அங்கு நீசமடைவார். என்றாலும் நீசபங்க ராஜயோகம் அடைவார். 6-க்குடைய குரு 2-ல் இருப்பதால் அன்னியர் தனம் உங்கள் கைகளில் தாராளமாகப் புரளும்- அதாவது கடன் வாங்குவீர்கள். அதேபோல 6-க்குடைய குரு 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடன் வளரும்; போட்டி பொறாமைகளும், எதிர்ப்பு இடையூறுகளும் வளரும். அதாவது குரு சுபகிரகம். அவர் எதைப் பார்க்கிறாரோ அதை அதிகமாக்குவார். பாவகிரகம் எதைப் பார்க்கிறதோ அந்த பாவப்பலன் அழியும்; குறையும். அந்த விதிப்படி சுபகிரகம் குரு பார்ப்பதோடு, அந்த வீட்டுக்குடையவரும் அந்த வீட்டைப் பார்ப்பதால் 6-ஆம் பாவப் பலன் அதிகரிக்கும். இந்த இடத்தில் குரு பார்க்க கோடி தோஷம் விலகும் என்பது செல்லாது. ஆனாலும் குரு பார்வையினால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. உதாரணமாக தினகரன் எவ்வளவு இடையூறு செய்தாலும் ஈ.பி.எஸ்.+ஒ.பி.எஸ். கூட்டணியை தோல்வியடையச் செய்ய முடியாது என்பது போல! சுக்கிரன் உச்சம் பெறுவதால் கணவன்- மனைவிக்குள் நிலவிய மோதல்கள் விலகும். ஊடல் நீங்கி கூடல் ஏற்படும். வள்ளுவரே சொல்லுவார்- "ஊடுதல் காமத்துக்கு இன்பம்- அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின்' என்று! பெரும்பாலான குடும்பங்களில் கணவன்- மனைவிக்குள் அன்பு ஊடுருவ சில விடுமுறைகளும் ஏற்படவேண்டும். இதை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவே சொல்லியிருக்கிறார். மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என்று பேரறிஞர் பெர்னாட்ஷாவிடம் சொன்னபோது, "எல்லாருக்கும் நல்லவராக இருக்க முடியாது' என்றார். உண்மைதான். கோட்சேவுக்கு மகாத்மா கெட்டவராகிவிட்டார் அல்லவா! உங்கள்மீது சிலர் வீண்பழி சுமத்தலாம். அதை சாதுரியமாக சமாளிக்கவேண்டும். அதாவது கம்பும் உடையக்கூடாது; பாம்பும் சாகவேண்டும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 2, 5-க்குடைய குருவும் சம்பந்தம். குரு 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்க்க, செவ்வாய் 4, 7, 8-ஆம் இடங்களைப் பார்க்கிறார். கணவன்- மனைவி இருவருக்கும் அன்பும் ஒற்றுமையும் உண்டாகும். இருவர்பேரிலும் ஏதாவது இடம், மனை, வீடு அமையும் பாக்கியமும் உண்டாகும். அதற்காக வெளியில் கடன் வாங்கும் யோகமும் உண்டாகும். உங்கள் யோகத்துக்கு சிலர் கைமாற்றுக்கடனாக வட்டியில்லாமல் கொடுப்பார்கள். சிலர் குறைந்த வட்டிக்கு மூன்று அல்லது இரண்டு வட்டிக்குத் தருவார்கள். 6-க்குடைய செவ்வாய் ராசியில் ஆட்சி பெற்ற பலன் இதுதான்! அதுமட்டுமல்ல; இன்னும் இரண்டு வருடம் ஏழரைச்சனி வேறு (கடைசி பாகம்) நடக்கிறதல்லவா! காரியம் கைகூடும் என்றாலும், மாதாமாதம் வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற வட்டியைக் கொடுக்க வேண்டுமல்லவா! கடன் கொடுத்தவர்களிடம் நல்ல பேர் எடுக்கவும் கௌரவத்தையும் மதிப்பையும் காப்பாற்றவும் குரு பகவான் அருளுவார்! 9-ல் உள்ள ராகு தகப்பனார் வகையில் அல்லது பங்காளி வகையில் சில பிரச்சினைகளை உருவாக்கினாலும், குரு பார்ப்பதால் பாதிப்பு வராமல் சமாளிக்கலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தாலும், ஏழரைச்சனி நடக்கும் இக்காலம் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தாலும் விபரீத விளைவுகளைச் சந்திக்கநேரும். விபத்து, பொருட்சேதம் போன்றவற்றைச் சந்திக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் ருத்ரஹோமம் நடத்தி சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். இந்த ருத்ரஹோமத்தை பொன்னமராவதி அருகில் செவலூர் பூமிநாத சுவாமி கோவிலில் ராஜப்பா குருக்கள் 108 சங்கு வைத்து சிறப்பாகச் செய்வார். அது வாஸ்துக் கோவில். இடம், பூமி பிரச்சினை எதுவானாலும் அங்கு போய் வந்தாலே சிக்கல் விலகி சீராகிவிடும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் 12-க்குடைய செவ்வாயோடு கூடியிருக்கிறார். 12 விரய ஸ்தானம் என்றாலும், சுபவிரயம் எனலாம். சிலர் வாடகை வீட்டிலிருந்து ஒத்திவீட்டுக்குப் போகலாம். சிலர் கிரயத்துக்கு வீடு முடிக்கலாம். இதற்காக நண்பர்களிடமும் அல்லது வங்கி மூலமாகவும் கடன் வாங்கலாம். செவ்வாயும் குருவும் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால், கடன் வாங்கும் அவசியம் உண்டாகும். இப்படி முதலீடு மூலதனமாக செலவு செய்யாவிட்டால் தேவையற்ற வைத்தியச்செலவு, வீண் விரயம் உண்டாகும். அதற்கு கடன்உடன்பட்டாவது சுபச்செலவு (வீடு கிரயம்) செய்வது நல்லது. எனக்குத் தெரிந்த ஒருவர் அனுபவம்- அவசரத் தேவையென்று ஒருவர் கடன் கேட்டார். சுவாமி உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொடுத்தார்; அவ்வளவுதான். கடன் வாங்கியவர் கடன் கொடுத்தவரைப் பார்க்க வருவதேயில்லை. தினசரி வருகிறவர் வாரக்கணக்கில்- ஏன் மாதக்கணக்கில் வருவதில்லை; சந்திப்பதில்லை. நாட்டில் இப்படிச் சில பேர் இருப்பார்கள். கடன் வாங்கும்வரை ஐஸ்வைத்து கூலாகப் பேசுவார்கள். வாங்கியபிறகு ஆளே கண்ணில் தென்படமாட்டார்கள். இதை கம்பரே அழகாக, "கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று வர்ணிக்கிறார். கடன் வாங்கியவருக்கும் கலக்கம்தான். கடன் கொடுத்தவருக்கும் கலக்கம்தான். இருதரப்புக்கும் கம்பரின் வார்த்தைகள் பொருந்தும். தனுசு ராசிக்கு 6-க்குடைய சுக்கிரன் வாரக்கடைசியில் மீனத்தில் உச்சமடைவார். முன்னதாகவே அந்தப் பலன் உங்களை வந்தடையும். வாங்கிய கடனை நாணயமாகத் திருப்பிக்கொடுக்க சொர்ணாகர்ஷன பைரவ மந்திரத்தைப் படிக்கவும். வரவேண்டிய கடன் வசூலாக கார்த்தவீர்யார்ஜுன மந்திரத்தைப் படிக்கவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி ராசிக்கு 12-ல் மறைகிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு அவருக்கு 12-ல் மறைகிறார். அவருடன் 12-க்குடைய செவ்வாய் சம்பந்தம்! ஏழரைச்சனியில் விரயச்சனி. ஜென்ம கேது- சப்தம ராகு! ஆக கோட்சாரம் ஏடாகூடமாக- எதிர்மறையாக இருப்பதால் எதைச்செய்தாலும் எதிர்மறைப்பலனாக அமையும். இந்த மாதிரி கோட்சாரம் விபரீதமாக இருக்கும் காலம்- தசாபுக்திகளும் விபரீதமாக இருந்தால் விளைவுகளும் விபரீதப்பலனாக அமையும். ஒரு அன்பர் அடகு வட்டிக்கு கொடுப்பவரிடம் தன் நண்பருக்காக ஒரு நகையை அடகுவைத்துப் பணம் வாங்கிக்கொடுத்தார். ஒரு மாதத்திற்குள் அந்த நண்பர் வீட்டுக்குத் தெரியாமல் அந்த நகையைக் கொண்டு வந்து கொடுத்துப்பணம் வாங்கிவிட்டார் என்ற உண்மை தெரிந்துவிட்டது. அவர் வீட்டு நகைதான் என்றாலும் சொல்லாமல் ரகசியமாக அடகுவைத்துவிட்டார். சிறிது நாளில் அதைத் திருப்பி வைத்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார். அதற்குள் விஷயம் வெளியாகிவிட்டது. இதனால் நண்பர்களுக்குள் வருத்தம் வந்துவிட்டது. இப்படி சில தர்மசங்கடங்களும் சத்திய சோதனைகளும் உண்டாகலாம். புதிய யோசனைகளும் யுக்திகளும் தோன்றும். அது சிலசமயம் வெற்றி பெறலாம். சிலசமயம் எதிர்மறைப் பலனாக மாறலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்லது நடக்கத் தாமதம் ஆகலாம். பஸ் பயணத்தின்போதும் கவனமாக இருக்கவேண்டும். ஒரு முக்கியமான பஸ் நிலையத்தில் பொதுவாக காபி, டீ சாப்பிட 10 நிமிடம் (பிரேக்) பஸ் நிற்பது வழக்கம். ஒருவர் தன் பொருள்களையெல்லாம் பக்கத்து சீட்டுக்காரரிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு இறங்கிப் போய்விட்டார். அவர் திரும்பி வருவதற்குள் வழக்கத்துக்கு மாறாக மூன்றே நிமிடத்தில் பஸ்ஸை எடுத்துப் போய்விட்டார்கள். பயணியின் நிலை தர்மசங்கடமாகிவிட்டது. நேரம் சரியில்லையென்றால் இப்படிப்பட்ட தர்மங்கடசங்களை சந்தித்தாக வேண்டும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி தன் ராசிக்கு 11-ல் பலம் பெறுகிறார். பொதுவாக குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களும், சனிக்கு 3, 6, 11-ஆம் இடங்களும் யோகமான இடங்கள்தாம். 2-க்குடைய குரு 10-ல் 10-க்குடைய செவ்வாயோடு சேர்ந்து 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது. தாராளமான வரவு- செலவு இருக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். கொடுக்கல்- வாங்கல் தடையின்றி செயல்படும். குடும்பத்திலும் அமைதி, ஆனந்தம் நிலவும். பொதுவாக கும்ப ராசிக்காரர்களும் கும்ப லக்னத்தார்களும் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்பது ஒரு கணிப்பு! ஒருவருக்கு ஒரு முக்கியப்புள்ளி வேலைக்கு சிபாரிசுக் கடிதம் கொடுக்கும்போது, Who deseve our sympathy என்று எழுதியிருந்தார். அதுபோல கும்பராசி அல்லது கும்பலக்னம் அனுதாபத்துக்குரிய நிலை! அந்த அனுதாப அலை சமயத்தில் வெற்றியை ஏற்படுத்தித்தரும். அதனால் இன்றைய கோட்சாரம் உங்களுக்கு எல்லா வகையிலும் சீரும்சிறப்புமாக அமையும். வாரக்கடைசியில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடையும்போது அவரை குரு பார்க்கக்கூடும். கும்பச் சுக்கிரனை 10-க்குடைய செவ்வாய் பார்க்கக்கூடும். இது தர்மகர்மாதிபதி யோகம். இதனால் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாகவும், கும்பிடப்போன தெய்வம் எதிரில் வந்த மாதிரியாகவும் உங்களுக்கு எல்லாம் சாதகமாகவும் அனுகூலமாகவும் வெற்றியாகவும் அதிர்ஷ்டமாகவும் அமையும். ஆகவே உங்கள் நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேறும். எண்ணங்கள் எளியமுறையில் ஈடேறும். விருப்பங்கள் விரைவாக செயல்படும். மொத்தத்தில் இந்த வாரம் கும்ப ராசிக்காரர்களுக்குத்தான் அதிர்ஷ்டமான வாரம்!

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் இருந்து ராசியைப் பார்க்கிறார். குரு 10-க்குடையவர் 9-ல் இருப்பதும், 9-க்குடையவரோடு சேர்ந்திருப்பதும் தர்மகர்மாதிபதி யோகம்! அதனால் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக்கதவை வந்து தட்டும்! அதற்குத் துணையாக உங்கள் குலதெய்வ வழிபாடும் பிரார்த்தனைகளும் பக்கபலமாக அமையும். எந்த ஒரு செயலும் சிறப்பாக செயல்படவும் வெற்றிகரமாக அமையவும் குருவருளும் திருவருளும் பெரிதும் வேண்டும். இப்படிப்பட்ட கோட்சார நிலையில் உங்களுக்கு அது பரிபூரணமாக இருக்கிறது. ஆகவே கண்ணை மூடிக்கொண்டு எதையும் செய்யலாம். சாதிக்கலாம். கண்ணைக் கட்டிக்கொண்டு (வழுக்குமரம்) படித்திருவிழாவில் கலந்துகொண்டால் பரிசை நிச்சயமாகத் தட்டிப் பறிக்கலாம். அதேபோல ஏலச்சீட்டில் குலுக்கல் முறையில் உங்களுக்கே வெற்றி வாய்ப்பும் தொகையும் கிடைக்கும். இதேபோல அதிர்ஷ்டவசமாக நடக்கவேண்டிய எல்லாக் காரியங்களும் அது இஷ்டமாக நடக்கும். நிறைவேறும். அதன்மூலமாக உங்கள் கனவுகளும் திட்டங்களும் 100 சதவிகிதம் நடக்கும். தொழிதுல்றையில் உங்களுடன் பணிபுரிகிறவர்களும் உங்கள் விருப்பத்தை உணர்ந்து செயல்பட்டு உங்களுக்கு மனநிறைவைத் தருவார்கள். சொக்கநாத வெண்பாவில் ஒருபாடல்- "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர். அவரவர் வினை வழி அவரவர் அனுபவம்- எவரவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்- தவரவர் நினைவது தமை உணர்வதுவே'. வாரியார் சுவாமிகள் சொன்னார்- "வருவது - தானேவரும்- வருவதுதானே- வரும்.' இப்போது உங்களுக்கு எல்லாம் இனிமையாக எண்ணம்போல ஈடேறும் காலம். அனுபவிக்கும் காலம். அதையே "ஆகும் காலம் மெய்வருந்த வேண்டாம்- போகும் காலம் கதவை அடைக்கவேண்டாம்' என்பார்கள்.