ஐந்தாம் பாவகம்
பணபர ஸ்தானத்தில் 2-ஆம் பாவகம் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். இந்த வாரம் அடுத்த பணபர ஸ்தானமான ஐந்தாமிடம் பற்றிப் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்களைப் பணக்காரர்கள் என்றார்கள். சொந்தமாக வீடு, கார் வைத்திருப்பவர்களை சமுதாய அந்தஸ்து நிறைந்த கோடீஸ்வரக் குடும்பம் என்றார்கள். இருபது வருடங்களுக்கு முன்புவரை சொந்தமாக வீடும் காரும் இருப்பது பேஷன் அல்ல. ஆனால் தற்போது ஒருவர் சொந்த வீடும், காரும் வைத்திருப்பது மாடர்ன் கலாச்சாரமாக மாறிவிட்டது.
தற்போதைய நிலவரப்படி சொந்த வீடும், காரும் உள்ளவர்களாக இருந்தால் அவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். கப்பல் போல் பங்களாவிற்கும், வெளிநாட்டுக் காருக்கும் உரிமையாளராக இருந்தால் அவர்கள் பணக்காரர்கள். தற்போது பலரும் சொந்த வீடு, காருக்கு உரிமையாளராக உள்ளார்கள் இது உலகப் பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறதா அல்லது பணப்புழக்கம் அதிகரித்து உலகம் சுபிட்ச நிலையை நோக்கி முன்னேறுவதைக் காட்டுகிறதா? அப்படி என்றால் உலகில் கடன் என்ற ஒரு அத்தியாயம் இருக்கக்கூடாது அல்லவா? திரும்புகிற திசையெல்லாம் கடனால் பாதிக்கப்பட்டவர்கள் சூழ்ந்திருக்கக் காரணம் என்ன? "அரசாங்கத்திற்கே கடன் இருக்கும்போது எனக்கு கடன் இருந்தால் தவறா' என்று எதார்த்தமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். கடனால் அவமானத்தை சந்திக்கமுடியாமல் வாழ்வைத் தொலைப்பவர்களும் இருக்கி றார்கள். இவையெல்லாம் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, தங்களை சமுதாயத்தில் நிலைநிறுத்திக்கொள்ள முயன்றதன் விளைவு; விதியை வெல்ல முற்பட்டதனால் ஏற்பட்ட பக்க விளைவு.
பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பதிவாகி யுள்ள நல்ல வினைகள் உரிய காலத்தில் ஜாதகரை வந்து சேரும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பதியாத செயலுக்கு ஆசைப்பட்டால் அது ஜாதகருக்கு எதிர்விளைவை ஏற்படுத்தும்.
பூர்வபுண்ணிய ஸ்தானம்
சுய ஜாதகரீதியாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நூறு சதவிகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை வாரிவழங்கும் அமைப்பாகக் கருதலாம். ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் எனில் பூர்வபுண்ணியம் வலிமைபெற்றிருக்கவேண்டும், நல்ல நினைவாற்றல், தன்னம் பிக்கை, உறவுகள் அல்லாத மற்றவர்களின் ஆதரவு, தெளிவான சிந்தனைத் திறன் மற்றும் செயல்பாடு கள், வருமுன் கணிக்கும் புத்திசாலித்தனம், தனது முன்னோர்களின் சொத்து சுகங்களைப் பெறும் யோகம், முன்னோர் களின் நல்ல குணங்களை அப்படியே பெற்றிருக்கும் அமைப்பு என்ற அனைத்து நன்மைகளையும் வாரிவழங்குவது பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையாகாது.
மனிதர்களாய்ப் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் பூர்வபுண்ணிய பலத்தின் வலிமைக்கேற்பவே அமையும். ஒரு ஜாதகத்தில் ஆண்டியையும் அரசனாக்குவது 5-ஆமிடம். இந்த இடத்தை பதவி ஸ்தானம், என்றும் கூறுவார்கள். ஒருவன் பெயரும் புகழுமாக இருந்தால், "புண்ணியவான்' என்று கூறுவார்கள். புண்ணியம் செய்திருந்தால், அதாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் இந்த ஜென்மத்தில் பாக்கியவானாக இருப்பான். கடந்து வந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் இந்த ஜென்மத்தில் யோகம் நிச்சயம். அதாவது வங்கியில் பணமிருந்தால் செக் பாஸ் ஆகும். ஒருவருக்கு வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்மவினையோ எதுவாக இருந்தாலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது.
ஏனெனில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில்தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கவேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும். மிகச் சுருக்கமாக, ஜாதகர் கடந்த ஜென்மத்தில் செய்த புண்ணியப்பலன் அல்லது பாவத்தின் தொகுப்பாகும். ஒருவரின் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையை ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தைப் பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி பெற்ற நட்சத்திர சாரம் போன்றவற்றின்மூலம் அறியலாம்.
சுய ஜாதகத்தில் 5-ஆமிடம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால்- அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் சுபவலிமை பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்னாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால் அவர் பூர்வ ஜென்மத்தில் மிகுதியாகப் புண்ணிய காரியங்கள் செய்தவர் என்று கூறலாம். இவர்கள் பிறக்கும்போது குடும்பம் சாதாரண நிலையில் இருந்தாலும் இவர் பிறந்தபிறகு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இவர்கள் பூர்வீக இடத்தில் சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இது மிகப்பெரிய அதிர்ஷ்ட அமைப்பு. குலதெய்வக் கோவிலில் வாக்கு சொல்பவர்கள். குல தெய்வம் இவர்கள் நாவில் வந்து பேசும். வாக்கு பலிதம் உண்டு. பஞ்சாயத்திற்கு நியாயத் தீர்ப்பு வழங்குபவர்கள். அன்னதானம் வழங்கும், வழங்கிய கௌரவப் பரம்பரையில் பிறந்தவர்கள்.
முதல் குழந்தை பிறந்தபிறகு அதிர்ஷ்டம் பன்மடங்காகும். பிள்ளைகள்மூலம் வருமானம் உண்டு. காதல் திருமணத்திற்குப் பிறகு வாழ்வாதாரம் உயரும். உழைப்பில்லாத செல்வம், வெறும் வாய்ஜாலம், வார்த்தை ஜாலத்தால் பொருள் ஈட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம் ஜோதிடம், புரோகிதம் போன்ற துறைகளின்மூலம் வருமானம் உண்டு. சிலர் திட்டங்கள் தீட்டிக்கொடுத்து சம்பாதிப்பார்கள் அல்லது யோசனை சொல்லி செல்வம் திரட்டுவார்கள். பூர்வகத்திலேயே சுயதொழில், குலத்தொழில் நடத்துவார்கள். சிறிய உழைப்பில் பெரும் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து, தாத்தாவழி உயில் சொத்தை முழுமையாக அனுபவிப்பவர்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள்.
4-க்கு 2-ஆமிடம் என்பதால் விவசாயம், கால்நடை, ரியல் எஸ்டேட், வாடகை வருமானம் உண்டு. தற்போதைய நிலவரப்படி சொந்தமாக வீடு, கார், குடும்பத் தேவையை நிறைவுசெய்யத் தேவையான பேங்க் பேலன்ஸ் உண்டு. பெரிதாகக் கடன் இருக்காது. நிலையான- நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் அல்லது உத்தியோகம் உள்ளவர்கள்.
அதேபோல் 5-ஆமிடத்தில் அசுப கிரகங்கள் நிற்பது, பார்ப்பது அந்த வீட்டில் 6, 8, 12-க்குடையவன் அமர்ந்திருந்தால் பூர்வ ஜென்மத்தில் பாவ காரியங்கள் மிகுதியாகச் செய்தவர் என்பதை அறியலாம். அத்துடன் சுப, அசுப கிரகங்கள் கலந்து சம்பந்தம் பெற்றால் பாவம்- புண்ணியம் இரண்டிலும் சம்பந்தம் உள்ளவர் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.
ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் இடத்தைக் கொண்டு புத்திர பாக்கியம், குல தெய்வ அனுக்கிரகம், பூர்வீகம், பூர்வீகச் சொத்து, அதிர்ஷ்டம், புத்திக்கூர்மை, பதவி, புகழ், சமூக அந்தஸ்து, செயல்பாடு போன்றவற்றை அறியலாம். மிகச் சுருக்கமாக, ஒருவருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் பலம்பெற்றால் ஜாதகருக்கு கடன், வறுமை இருக்காது. நல்ல வீடு, வாகன யோகமுண்டு. பெற்றோர்களின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்பியிருக்கும்.
குலதெய்வமே குழந்தையாகப் பிறக்கும். குலதெய்வ அருள் கடாட்சம், தெய்வ அனுக்கிரகம் நிரம்பப் பெற்றவர்கள். கௌரவப் பதவி, பூர்வீகச் சொத்தால் ஆதாயம், நிச்சயம் உண்டு. ஜாதகர் புத்திசாதுர்யம் நிரம்பியவராக இருப்பார். எத்தகைய சூழ்நிலையிலும் பிறரை எதிர்பாராமல் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் தேவையை நிறைவுசெய்யும் வலிமை பெற்றவர்கள். தொட்டது துலங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகரைத் தேடி வந்துகொண்டே இருக்கும்.
மேலே கூறிய இவற்றில் சில குறைபாடு வரும்போது வாழ்க்கைப் பாதையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதிர்ஷ்டம் மற்றும் புண்ணிய பலம் குறைந்து பணபர ஸ்தான்ம் செயலிழக்கிறது. பணமில்லாத மனிதனின் சொல் சபையில் அரங்கேறாது. ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்யும் வலிமை பணத்திற்கு மட்டுமே உள்ளது.
பரிகாரம்
சுய ஜாதகரீதியான 5-ஆம் அதிபதியின் காயத்திரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிக்க பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெற்று புண்ணியப் பலன்கள் அதிகரிக்கும். பணவரவு கூடும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டம் அதிகரிக்க சுய ஜாதகரீதியான அதிர்ஷ்ட ரத்தினக் கல்லைத் தேர்வுசெய்து அணியலாம். அவரவரின் ஜாதகரீதியான 5, 9-ஆம் அதிபதியின் ஆதிக்கத்தில் பெயரை வைத்துக்கொண்டால் விசேஷ வாய்ப்புகள் உருவாகும்.
புத்திர பாக்கியமின்மையால் மன சஞ்சலம் அனுபவிப்பவர்கள் காரியம் சித்தியடையும்வரை தொடர்ந்து சஷ்டி திதியில் விரதம் கடைப்பிடித்து, சர்ப்பத்துடன் கூடிய முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவேண்டும். அல்லது வியாழக்கிழமை மாவிளக்கிட்டு குலதெய்வத்தை ஆத்மார்த்த மாக வழிபடவேண்டும்.
பெற்ற பிள்ளைகளால் மன வேதனையை சந்திப்பவர்கள் வியாழக்கிழமை சர்ப்பத்துடன்கூடிய விநாயகருக்கு பாலா பிஷேகம் செய்து வழிபடவேண்டும்.
திடமான முடிவெடுக்கத் தெரியாதவர்கள், மன சஞ்சலம் அதிகம் உள்ளவர்கள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தேவையறிந்து உதவி செய்யவேண்டும்.
குலதெய்வ அனுக்கிரகம் பெற, ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசைக் காலங்களில் முறையாக குலதெய்வத்தை வழிபட வேண்டும். பெண் தெய்வமாக இருந்தாலும், ஆணும் பெண்ணும் சேர்ந்த தெய்வமாக இருந்தாலும் பௌர்ணமி காலங்களில். வழிபடவேண்டும்.
குலதெய்வம் தெரியாதவர்கள் பௌர்ணமி காலங்களில் வீட்டில் மண் அகலில் ஜோடி தீபமேற்ற வேண்டும். தித்திப்பான நெய் கலந்த சர்க்கரைப் பொங்கல், பால், வெற்றிலைப் பாக்கு படைக்கவேண்டும். நெய்தீபத்தை குலதெய்வமாக பாவித்து வழிபட வழிபட பிறவி தோஷம் தீரும். பொருள் குற்றம் அகன்று நிம்மதி நிலைக்கும்.
பொதுவாக வீடுகளில், தொழில் நிறுவனங்களில் உரிய மந்திரப் பிரயோகம் செய்யப்பட்ட, சக்தியூட்டப்பட்ட ஸ்ரீசக்ரம் வைத்து வழிபட பணவரவு இரட்டிப்பாகும்.
தொடரும்....
செல்: 98652 20406