17-6-2023 முதல் 4-11-2023 வரை
கிரகப் பெயர்ச்சிகள் என்று வருகின்றபோது அனைவரும் பெரிதும் எதிர்பார்ப்பது சனிப்பெயர்ச்சியை மட்டுமே. அதற்குக் காரணம் ஒரே ராசிக்குள் அதிகபட்ச காலம் சஞ்சரிப்பவர் சனிபகவான் மட்டும்தான்.
சனிபகவானைப் பற்றி கூறும்போது ஆயுள் காரகன் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியும் என்றாலும், நீதி, நியாயம், நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கெல்லாம் அடிப்படை யானவர் சனிபகவான் என்றும் சொல்ல வேண்டும். தொழில், மக்கள் செல்வாக்கு போன்றவற்றுக்கும் சனிபகவானே காரகனாக இருக் கிறார். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கடந்த ஜென்மத்தின் கர்ம வினைகளுக்கேற்ப அவர்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடிய பணியும் சனிபகவானுடையதுதான்.
ஒருவரை ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்ப வரும் சனிபகவான்தான். அவமானத்திற்கு ஆளாக்கி சிறை வாசத்தை அடைய வைப்பவ ரும் சனி பகவான்தான்.
ஒரு ராசிக்குள் இரண்டரை ஆண்டுகள் அவர் சஞ்சரிப்பதால் அந்த இரண்டரை ஆண்டுகளில் அதிகபட்சமான நன்மை களையோ அல்லது பாதகமான பலன் களையோ ஜாதகருக்கு வழங்கிடக் கூடியவராக இருக்கிறார் சனிபகவான். அதன் காரணமா கவே இரண்டரை ஆண்டுகளுக்குரிய அவருடைய சஞ்சார காலம் நம் அனைவரின் வாழ்க்கை யையும் தலைகீழாக புரட்டிப் போட்டுவிடுகிறது.
நேற்றுவரை உச்சத்தில் இருந்தவர் இன்று தாழ்ந்த நிலைக்கு வந்து சேர்வதும், தாழ்ந்த நிலையில் இருந்தவர் உச்ச நிலைக்கு உயர்வு பெறுவதற்கும் சனிபகவானே பெரும் காரணமாக இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 17-1-2023 அன்று திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியான சனி பகவான் 17-6-2023 அன்று கும்ப ராசியில் சதய நட்சத்திரத்தில் வக்ரகதிக்கு ஆளாகி, 4-11-2023 அன்று வக்ர நிவர்த்தியடைகிறார்.
சனிபகவான் கும்ப ராசிக்குள் ஆட்சியாக சஞ்சாரம் செய்த கடந்த காலத்தில், தேசத்தில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எதிர்பாராத சங்கடங்களும் ஒருசிலருக்கு உண்டாகியிருக்கும். அரசியலில் பதட்டம், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி, பெருமளவில் உயிர் சேதம் என்று ஏற்பட்டிருக்கும்.
இந்த நிலையில் சனிபகவான் வக்ரம் அடையும்போது நேற்று வரை நடந்தவற்றில் மாற்றம் உண்டாவதற்கு நூறு சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக கும்ப சனியால் பாதிக்கப்பட்டிருந்த அனைவருக்கும் அவரு டைய வக்ரகாலம் என்பது பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்க்கும் சக்தியை அடை வதாகவே இருக்கும்.
பொதுவாக சனிபகவான் கொடுப் பதை எவராலும் தடுத்துவிட முடியாது.
அவர் தடுப்பதையும் எவராலும் கொடுத்து விடமுடியாது. கிரகங்களில் அனைவரும் பயந்து வணங்கிடக்கூடியவர் சனிபகவான். அவருடைய பார்வைகள் பாதகத்தை உண்டாக்கும் என்றும். அவர் சஞ்சரிக்கும் பாவகம் நன்மை அடையும் என்றும் கூறப் படுகிறது. சனிபகவானின் பார்வைகளை மேலோட்டமாக நாம் கொடியதாக கணக் கிட்டு விட முடியாது. அதற்கு காரணம் பாப கிரகங்கள் 3, 6, 11-ஆம் இடங்களில் அமரும்போது நன்மைகள் செய்வார்கள் என்பதுபோல் ஒவ்வொரு ராசியினருக்கும் அவர்களுடைய 3, 6, 11-ஆம் இடங்களைப் பார்வையிடும்போது அந்த இடங்களுக்கும் நன்மையான பலன்களை வழங்குவார்கள் என்பதுதான்.
சனிபகவான் சஞ்சரிக்கும் இடத்தை வைத்தும், அவருடைய பார்வைகளுக்கு ஆளாகும் இடங்களை வைத்தும் நாம் பலன்களை அறிந்துவருகிறோம்.
தொடர்ந்து இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் அவர் சஞ்சரித் தாலும் அந்த இரண்டரை ஆண்டுகளில் ஆண்டிற்கு 140 நாட்கள் அவர் வக்ரகதிக்கு ஆளாகிவிடுவார். அக்காலத்தில் அதுவரை அவர் வழங்கிவந்த பலன்களில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.
சனிபகவானின் வக்ரகாலம் என்பது சூரியனுக்கு 251 டிகிரியில் அவர் சஞ்சரிக்கும்போது தொடங்கி 109 டிகிரிக்கு வரும்போது முடிவிற்கு வரும். மேலும் கூற வேண்டுமென்றால் சூரியனுக்கு 9-ஆம் வீட்டிற்கு வரும்போது வக்ரகதியை அடைந்து 5-ஆம் வீட்டிற்கு வரும்போது வக்ரநிவர்த்தி அடைவார் சனிபகவான். இந்த இடைவெளி என்பது 140 நாட்கள் ஆகும்.
இதன்காரணமாகவே கும்ப சனியால் சங்கடப்பட்டு வந்த அனைவரும், அவர் வக்ரமடையும் காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்தும், நேற்றுவரை அனுபவித்த சங்கடங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையோடு காத்துள்ளனர்.
கும்ப ராசியில் சஞ்சரித்துவரும் சனிபகவான் வக்ரமடையும் காலத்தில் 12 ராசியினருக்கும் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதை இப்போது பார்ப்போம்...
மேஷம்
உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் உரியவர் சனிபகவான். லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் அவர் சஞ்சரித்தாலும் நீங்கள் நினைத்த காரியங்கள் எதிலும் வெற்றி இல்லை என்ற நிலையே உங்களுக்கு உண்டாகி இருக்கும். அதற்கு மாறாக, சங்கடங்கள், அலைச்சல் என்பதெல்லாம் அதிகரித்திருக்கும். அதற்கு காரணம் அவருடைய மூன்றாம் பார்வை உங்கள் ஜென்ம ராசியின்மீது பதிந்ததுதான். அதனால் உடலில் பாதிப்பு, மனதில் பாதிப்பு, காரியத்தில் தடைகள் என்று பல்வேறு சங்கடங்களை நீங்கள் அடைந்திருப்பீர்கள். சனிபகவானின் ஏழாம் பார்வை உங்களின் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தின்மீது பதிந்ததால் குடும்பத்தில் குழப்பம், பூர்வீக சொத்துகளில் பிரச்சினை, சண்டை, சச்சரவுகள், பிள்ளைகளால் சங்கடம், வேதனை, காதலில் கசப்பு, மனதில் இனம்புரியாத குழப்பம் என்று ஏற்பட்டு எந்தவொரு செயலிலும் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை உண்டாகி இருக்கும் என்றே சொல்லவேண்டும். சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்தின்மீது பதிந்ததால் உங்கள் உடல்நலனில் சங்கடங்கள் அதிகரித்திருக்கும். அலைச்சல் ஏற்பட்டிருக்கும். ஒரு சில இடங்களில் அவமானத் திற்கும் ஆளாக வேண்டியதாக இருந்திருக்கும். பல்வேறு இடர்பாடுகளால் மனநிலையும் சங்கடத்தில் சிக்கியிருக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்கு லாபாதிபதி என்பதால் உங்களுக்கு லாபத்தை வழங்க வேண்டியவர் அவரே ஆகிறார். ஆனால், லாபாதிபதி லாப ஸ்தானத்திலேயே அமர்ந்ததால் அவரால் இக்காலத்தில் நன்மைகள் உண்டாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த நிலையில் அவர் வக்ரமடையும் இக்காலம் உங்களுக்கு நற்காலம் என்றே சொல்லவேண்டும். மேலே கூறிய சங்கடமான பலன்கள் அனைத்திலும் இனி மாற்றம் உண்டாகும். கெடுபலன்கள் பெருமளவு குறைய ஆரம்பிக்கும். உங்கள் ஜென்ம, பூர்வபுண்ணிய, அஷ்டம ஸ்தானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி நீங்கள் நன்மைகளை அடையும் காலமாக இந்த வக்ர காலம் இருக்கப் போகிறது.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானமெனும் ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதி சனிபகவான். உங்களுக்கு தர்மகர்மாதிபதியும் இவரே. ஜீவன ஸ்தானத்தில் ஜீவன ஸ்தானாதிபதியே சஞ்சரித்த நிலையினால், வியாபாரத்தில் நெருக்கடி, தொழிலில் சங்கடம், உத்தியோகத்தில் நிம்மதியற்ற நிலை என்பதெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு 12-ஆம் இடமான அயன சயன விரைய ஸ்தானத்தின்மீது பதிந்ததால், வீண் அலைச்சல், காரியங்கள் கைகூடாமல் மன உளைச்சல், பொருள் இழப்பு, எதிரிகளால் இடையூறு, தொழிலில் நஷ்டம், உத்தியோகத்தில் சங்கடம், உறக்கமில்லாமல் குழப்பம், எதிர்பாராத செலவுகள் என்பதையெல்லாம் நீங்கள் சந்தித்திருக்க வேண்டும். சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் சுக ஸ்தானத் தின்மீது பதிந்ததால் வீண் அலைச்சல், அதிகபட்சமான உழைப்பு, செயலில் இடையூறுகள், அலைக்கழிப்புகள், குடும்பத்தில் வீண் விரோதம், தாயின் உடல்நிலையில் பாதிப்பு, தாய்வழி உறவுகளுடன் விரோதம், கல்வியில் தடை, நெருக்கடி, எதிர்பார்த்த சந்தோஷத்திற்கு இடையூறு, தடை, வாகனத்தால் சங்கடம், வீடு வகையில் பிரச்சினை, உற்றார்- உறவினர்களுடன் விரோதம், டென்ஷன், ஆரோக்கியத்தில் குறைபாடு என்ற நிலை ஏற்பட்டிருக்கும். சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தின்மீது பதிந்ததால், கணவன்- மனைவியரிடையே கருத்து வேறுபாடு, சண்டை, சச்சரவுகள், நண்பர்களுக்கிடையே சச்சரவு, குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலை, ஒருசிலருக்கு குடும்பத்தை விட்டே விலகி இருக்கவேண்டிய சூழ்நிலை, பிரச்சினை என்று ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில், சனிபகவான் வக்ரம் அடையும் இக்காலம் உங்களுக்கு நற்காலம் என்றே சொல்லவேண்டும். இதுவரை அவரால் உங்களுக்கு உண்டான சங்கடமான பலன்களில் இனி மாற்றம் உண்டாகும். சோதனைகள் விலகும். உங்கள் சுகஸ்தானம், களத்திர ஸ்தானம், விரைய ஸ்தானங்களுக்கும், தொழில் ஸ்தானத்திற்கும் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி நீங்கள் நன்மைகளை அடையும் காலமாக இந்த வக்ர காலம் இருக்கும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதி சனிபகவான் என்பதால் இரண்டுவிதமான பலன்களையும் வழங்கிட வேண்டிய நிலையில் அவரே உள்ளார். அதனால் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தபோது உங்களுக்கு சங்கடங்களை வழங்கிவந்தவர் அதற்கு மாறாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது நன்மைகளை வழங்கிட வேண்டியவராக உள்ளார். அதன்காரணமாக கும்ப சனி உங்களுக்கு யோக சனியாக, பாக்கிய சனியாக மாற்றம் பெற்று உங்கள் நிலையில் முன்னேற்றத்தை நீங்கள் அடைந்து வருகிறீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றியினை சந்தித்து வருகிறீர்கள். இந்த நேரத்தில், சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் பதிந்ததால், தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். வருமானம் அதிகரித்திருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு உண்டாகி இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட்டிருக்கும். தொழிலில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவை நிகழ்ந்திருக்கும். அவற்றில் நன்மையே ஏற்பட்டிருக்கும். பல வழிகளில் பணம் வரத் தொடங்கி இருக்கும். குடும்பத்தில் நன்மை ஏற்பட்டிருக்கும், புதிய நட்பினால் மகிழ்ச்சி அதிகரித்திருக்கும். சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் சகோதர, தைரிய, வீரிய ஸ்தானத்தில் பதிந்ததால் துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்திருப்பீர்கள். சகோதரர்கள் வகையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி இருக்கும். அந்நியர்கள் உதவி அதிகரித்திருக்கும். சனிபகவானின் பத்தாம் பார்வை உங்களின் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிந்ததால் உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி இருக்கும். எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் இருக்கும். மறைமுகமாக சதிசெய்து வந்தவர்கள் பலமிழந்து போயிருப்பார்கள். உங்கள் செல்வாக்கு அதிகரித்திருக்கும். நினைத்ததை முடித்திருப்பீர்கள். சனிபகவானின் ஒன்பதாம் இட சஞ்சாரம் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மையினையே ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் அவர் வக்ரம் அடையும் காலம் உங்களுக்கு இதுவரையில் நடந்துவந்த யோகமான பலன்களில் மாற்றம் உண்டாகும் காலம் என்றே சொல்லவேண்டும். இந்த வக்ர காலத்தில் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வு வேண்டும். புதிய முயற்சிகளில் அதிகபட்ச கவனத்தை செலுத்த வேண்டும். வரவுசெலவில் கூடுதல் கவனம் வேண்டும். இந்த நேரத்தில், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருந்தால், தசா புக்தி சாதகமாக இருந்தால் சனிபகவான் வழங்கி வந்த நற்பலன்களில் மட்டும் மாற்றம் உண்டாகும்.
கடகம்
உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்திற்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் சனிபகவான். உங்கள் ராசிநாதனான சந்திரனுக்கு அவர் பகையானவர். அதன்காரணமாக உங்களுக்கு அவர் வழங்கும் பலன்கள் ஏழாம் இடமாக இருந்தாலும், எட்டாம் இடமாக இருந்தாலும் அந்த இடங்களில் சஞ்சரிக்கும்போது பாதகமான பலன்களையே உங்களுக்கு வழங்குபவராக அவர் இருக்கிறார். எட்டாம் இடமான கும்ப ராசியில் சஞ்சரித்துவரும் சனிபகவான் பல்வேறு இடர்பாடுகளை உங்களுக்கு உண்டாக்கி வந்திருப்பார். குடும்பத்தில் சங்கடம், வம்பு, வழக்குகள், பிரச்சினைகள் என்று ஏற்பட்டிருக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடும் பிரிவும் உண்டாகி இருக்கும். மன உளைச்சலும் முயற்சிகளில் தடையும், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் எதிர்பாலினருடன் முறையற்ற நட்பும், உடல்நலனில் பாதிப்பும் ஏற்பட்டிருக்கும். சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் தொழில் ஸ்தானத்தில் பதிந்ததால் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போயிருக்கும். எதிர்பாராத நஷ்டமும், கஷ்டமும் ஏற்பட்டு உங்களை வாட்டி வதைத்திருக்கும். உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்கும். இயல்பான வாழ்க்கை முறையிலும் சங்கடங்களும், நெருக்கடியும் ஏற்பட்டிருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் அதிகரித்திருக்கும். அரசியலில் சரிவு ஏற்பட்டிருக்கும். அரசாங்கத்தால் கிடைத்து வந்த நன்மைகளில் பாதிப்பு உண்டாகி இருக்கும் முழங்காலில் வலி ஏற்பட்டிருக்கும். சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள், தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் பதிந்ததால், குடும்பத்தில் சங்கடம், தம்பதிகளுக்குள் பிரச்சினை, துன்பத்திற்குமேல் துன்பம், தொட்டதெல்லாம் தோல்வி, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவமானப்பட்ட நிலை, குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லவேண்டிய சூழல், ஒருசிலருக்கு பொருட்கள் களவு போகுதல், வலது கண் பார்வையில் குறை போன்ற நிலை ஏற்பட்டிருக்கும். சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் பதிந்ததால், புத்திர, புத்திரிகளால் ஏதேனும் ஒரு வகையில் வேதனையை அடைந்திருப்பீர்கள். உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தீய எண்ணங்களில் சிக்கி இருந்திருக்கும். குடும்பத்தில் கலகமும் சண்டையும் சச்சரவும் தோன்றியிருக்கும். வேதனை தரும் நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். கணவன்- மனைவிக்குள் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகி இருக்கும். இவை எல்லாம் எட்டாம் வீட்டில் சஞ்சரித்துவரும் சனிபகவானால் நீங்கள் அடைந்து கொண்டிருக்கும் பொதுப் பலன்களாகும். இந்த நிலையில் சனிபகவான் வக்ரம் அடையும் இக்காலத்தை உங்களுக்கு நற்காலம் என்றே சொல்ல வேண்டும். இதுவரை அவரால் உங்களுக்கு உண்டான சங்கடமான பலன்களில் இனி மாற்றம் உண்டாகும். சோதனைகள் விலகும். உங்கள் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை ஏற்படும், பண வரவு அதிகரிக்கும், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகளால் நன்மைகள் அதிகரிக்கும் என்பதால் இக்காலம் உங்களுக்கு நற்காலமாகும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு சத்ரு ஸ்தானத்திற்கும், சப்தம ஸ்தானத்திற்கும் அதிபதி சனி பகவானாவார். சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்தில் அவர் சஞ்சரிக்கும்போது வழங்குகின்ற பலன்களை நற்பலன்களாகவும், சப்தம ஸ்தானத்தில் அவர் சஞ்சரிக்கும்போது வழங்குகின்ற பலன்களை எதிர்மறையான பலன்களாகவும் வழங்கிடக்கூடியவராக இருக்கிறார். அதன்காரணமாக கும்ப சனியை உங்களுக்கு சங்கட சனியென்றே சொல்லவேண்டும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான கும்பத்தில் கண்டக சனியாக சனிபகவான் சஞ்சரித்து வருவதால், பல்வேறு பிரச்சினைகள், குடும்பத்தில் கருத்து வேறுபாடு, நண்பர்களிடம் விரோதம், அதனால் பிரிவு, வீண் அலைச்சல், தீயோர் சேர்க்கையால் அவப் பெயருக்கு ஆளாகுதல், மர்ம உறுப்புகளில் ரணம் அல்லது நோய், மனைவிக்கு ரோகம், மனைவியிடம் இருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் தனித்து வாழும் சூழ்நிலை, எதிர்பாலினர்மீது ஈர்ப்பு, அதனால் அலைச்சல் அவமானம், கண்டங்கள் உண்டாகுதல் என்பதையெல்லாம் சந்தித்திருப்பீர்கள். சனிபகவானின் 3-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிந்ததால் எதிலும் நிம்மதியற்ற நிலையும், எடுத்த வேலைகளில் இழுபறியும், தந்தையின் உடல்நிலையில் பாதிப்பும், தந்தைவழி உறவினர் கள்மூலமாக பிரச்சினைகளும், தொழிலில் மந்தமான நிலையும், அலைச்சல் திரிச்சலுடன் நஷ்டங்களும், ஆதாயமாக சென்று கொண்டிருந்தவற்றிலும் பாதகமான நிலையும், வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடியும், நினைத்தபடி எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியாமல் போனதுமாக எல்லாம் எதிர்மறையாகவே இருந்திருக்கும். சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிந்ததால், உங்கள் அந்தஸ்துக்கு பாதிப்பு, கௌரவத்திற்கு குந்தகம், உடல்நிலையில் சங்கடம், மன நிலையில் தடுமாற்றம், எதையோ இழந்ததுபோல் தவிப்பு, திடீரென்று பிணிக்கு ஆளாக வேண்டிய நிலை, விபத்து, ஆயுள் பற்றிய அச்சம், இருக்கும் இடத்தை விட்டு, மனைவி, மக்களை விட்டு வெளியில் செல்ல வேண்டிய சூழல், எதிர்பாலினரின் சகவாசத்தால் புத்தி மழுங்கி தவறான பாதையில் செல்ல வேண்டிய நிலை, நட்பு வட்டத்திலும் பலவிதமான சங்கடங்கள் என்று உண்டாகி இருக்கும். சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் பதிந்ததால், இதற்கு முன்பிருந்த நிம்மதி, கிடைத்து வந்த சுகம், இப்போது இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும். உடலில் அசதி, தாயின் உடல்நிலையில் பாதிப்பு, வாகனங்களால் செலவு, இழப்பு. ஒருசிலருக்கு பூமி மற்றும் வாகனங்களை விற்க வேண்டிய நிலை, இல்லை என்றால் திருட்டு போயிருக்கும். இவையெல்லாம் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவானால் நீங்கள் அடைந்து வரும் பலன்களாகும். இந்த நிலையில் சனிபகவான் வக்ரம் அடையும் இக்காலம் உங்களுக்கு நற்காலம் என்றே சொல்ல வேண்டும். இதுவரையில் நீங்கள் சந்தித்துவந்த சங்கடமான நிலை இனி விலக ஆரம்பிக்கும். குடும்பத்திற்குள் நிம்மதி உண்டாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் நிலை மேம்படும். வரவு அதிகரிக்கும். பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கின்ற நிலையை அடைவீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். மனநிலை சீராகும். சந்தோஷம் சௌபாக்கியம் என்பதையெல்லாம் இக்காலத்தில் நீங்கள் காண்பீர்கள்.
கன்னி
உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியாகவும், ஆறாம் அதிபதியாகவும் ஸ்தான பலம் பெறுகிறார் சனிபகவான். ஐந்தாம் பாவகம் என்பது பூர்வபுண்ணிய ஸ்தானம். ஆறாம் பாவகம் என்பது ருண, ரோக சத்ரு ஸ்தானமாகும். சத்ரு ஸ்தானாதிபதி சத்ரு ஸ்தானத்திலேயே சஞ்சரித்து வருவதால் உங்களை எதிர்த்தவர்கள் எல்லாம் காணாமல் போயிருப்பார்கள், உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகி இருக்கும். பல்வேறு நன்மைகளையும் நீங்கள் அடைந்திருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும், எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்பட்டிருக்கும், உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் உண்டாகி இருக்கும். இந்த நேரத்தில், சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ஆயுள் ஸ்தானத்தில் பதிந்ததால் உடல்நிலையில் இருந்த பாதிப்புகளும், பெரிய அளவில் காணப்பட்ட நோய்களும், மருந்து மாத்திரைகளில் குணமாகி இருக்கும். உங்கள் கௌரவம் சிறப்படைந்திருக்கும். திடீர் அணுகூலமும், ஆதாயமும் ஏற்பட்டிருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிகளை அடைந்திருப்பீர்கள். எட்டிச் சென்றவர்கள்கூட உங்களைத்தேடி வந்திருப் பார்கள். சட்ட விவகாரங்களிலும் எதிர்பார்த்த வெற்றி யைக் கண்டிருப்பீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் தக்கசமயத்தில் உதவிகள் கிடைத்திருக்கும். சனி பகவானின் ஏழாம் பார்வை உங்கள் விரைய ஸ்தானத் தில் பதிந்ததால், செலவுகள் அதிகரித்திருக்கும். பொது சேவையில் ஈடுபட்டிருப்பீர்கள். அதன்வழியே ஆதாயத்தையும் அடைந்திருப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான வசதிகளை உருவாக்கிக் கொண்டிருப்பீர்கள். அதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரித்திருக்கும். வாழ்க்கைத் துணையினுடைய அக்கறை உங்கள்மீது அதிகரித்திருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்பட்டிருக்கும். சனிபகவானின் பத்தாம் பார்வை, உங்கள் சகோதர, தைரிய, வீரிய, கீர்த்தி ஸ்தானத்தில் பதிந்ததால் சகோதர- சகோதரிகள் வகையில் ஒத்துழைப்பு அதிகரித்திருக்கும். உங்கள் தைரியம் பெருகி இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டிருப்பீர்கள். வாக்கில் தெளிவு உண்டாகி இருக்கும். மற்றவர்கள் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் அதிகரித்திருக்கும். பூமி வகையில் இருந்த பிரச்சினைகள் விலகி இருக்கும். அறிவாற்றல் எழுத்தாற்ற யாவும் அதிகரித்தி ருக்கும். இந்த நிலையில் சனிபகவான் வக்ரம் அடையும் இக்காலத்தில், இதுவரையில் நீங்கள் சந்தித்து வந்த பலன்களில் மாற்றத்தைக் காண்பீர்கள். அதனால் எந்த ஒரு முயற்சியிலும் அதிகபட்ச கவனம் வேண்டும். புதிய நபர்களை நம்பி எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையாகும். உங்கள் மனம் தெளிவான முடிவினை எடுக்கமுடியாத அளவிற்கு சூழல்கள் அமையக்கூடும் என்பதால் எந்த ஒன்றாக இருந்தாலும் இக்காலத்தில் ஒருமுறைக்கு நூறுமுறை நிதானமாக யோசித்து அதன்பிறகே அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் பொருளாதாரரீதியாக சங்கடங்களும், எதிர்பாராத நெருக்கடிகளும், அவமானங் களும் இந்த வக்ர காலத்தில் ஏற்பட வாய்ப்புண்டு.
மற்ற ராசிகள் அடுத்த இதழில்...
செல்: 94443 93717