நாம் பிறந்த ராசியின் அதிபதியைக்கொண்டு நம்முடைய வாழ்க்கையின், செயல்களின், உறவுகளின் பொதுப்பலன்களை அறியமுடியும். அந்தவகையில் மீன ராசியில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.
கிரகங்களின் ஆளுமையில் தனத்திற்கும், புத்திரர்களுக்கும், தொழிலுக்கும் காரகமானவர் வியாழன் எனப்படும் குரு பகவான் ஆவார். மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இவரே ராசிநாதன்.
தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும் மூலப்பொருளாக உள்ளவர் இவர். உலகில் சிறந்த மேதைகளையும் ஞானிகளையும் செல்வாக்கு மிக்கவர்களையும் குரு பகவானே உருவாக்குகிறார்.
இவருடைய அருள்தான் தலைமைப் பதவிக்கும் காரணமாகிறது. மாபெரும் சாதனைகளைச் செய்ய வைக்கிறது. நாட்டையாள வைக்கிறது. நல்லோருடன் சேர வைக்கிறது. புதுப்புது உத்திகளைக் கண்டு உச்சத்தையும் அடையவைக்கிறது. மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்கமுடியாத செயல்களையெல்லாம் செய்திடக்கூடிய அறிவாற்றல் இவரால் உண்டாகிறது. அதற்குக் காரணம் குரு பகவான்தான் நம்மையெல்லாம் வித்தைகளில் வல்லவராக மாற்றிடக்கூடியவர்.
ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலை எப்படி யிருந்தாலும் இவருடைய நிலை மட்டும் சிறப்பாக இருந்தால் போதுமானது- நாம் உயர்வதற்கு. அந்த அளவுக்கு சகல சக்திகளையும் அளிக்கும் வல்லமை படைத்தவர் குருபகவான்.
இத்தனை சிறப்புகளையும் கொண்ட குருபகவானை தங்களுடைய ராசிநாதனாகக் கொண்டவர்கள் மீன ராசியில் பிறந்தவர்கள். குருபகவானின் காரகத்துவம் என்னவோ அவற்றையெல்லாம் கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்களாக, செல்வாக்கு மிக்கவர்களாக, மற்றவர்களை வழிநடத்துபவர்களாக, தலைமை தாங்குபவர்களாக, நாளை வரப்போவதை இன்றே அறிந்து அதற்கேற்ப செயல்படக்கூடிய சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்.
யாரிடமும் கைகட்டி வாய்பொத்திப் பேசுவது இவர்களுக்கு அறவே பிடிக்காத ஒன்றாகும். இவர்கள் போடும் திட்டங்களையும் அதை செயல்படுத்தும் வழிகளையும் மிகமிக நெருங்கியவர்களிடம்கூட வெளியிட மாட்டார்கள். இவர்களுக்குள் எப்போதும் ஒரு ரகசியம் இருந்துகொண்டே இருக்கும். வாழ்க்கையின் பல கட்டங்களில் எதிர்பாலினரால் காதல், களவின்பம் என்னும் நிலையை அடைந்து, அதே நபரால் பிற்பொழுதில் துன்பத்தை அடைபவர்களாக இவர்களில் சிலர் இருப்பார்கள். அவர்களால் அவமானமும் அடைவார்கள். பிறர்மீது பச்சாதாபம், பாசம், அன்பு கொள்பவரான இவர்களிடம் பழகு வதற்கு இனிமையான குணமும் இருக்கும். குழந்தைப் பருவத்தில் பொருளாதார நிலையில் மேன்மையுள்ளவராக இல்லாமல் போனா லும், வாழ்வின் மத்திய காலத்தில் பெரிய செல்வாக்குடையவராக மாறிவிடுவார்கள்.
இவர்களுக்கு நண்பர்கள் பலர் இருப்ப தால் தக்கசமயத்தில் அவர்களைப் பயன்படுத்தி தங்கள் எண்ணங்களை எளிதில் செயலாக்கிக் கொள்வார்கள்.
இயற்கையாகவே இவர்களுக்கு அனைத்து வளங்களும் அமையக்கூடிய வாய்ப்புண்டு என்றாலும், புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்படுவர்களாக இருப்பார்கள்.
அதற்கான அத்தனை வழிமுறைகளையும் கைக் கொண்டு தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள்.
ராசி சக்கரத்தில் கடைசி ராசியாக இவர் களுடைய ராசி இருப்பதால் மனித உடலின் கடைசி உறுப்புகளாக உள்ள கால்கள் இந்த ராசியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. குருவின் அம்சம் கொண்டவர்களாக இருப்ப தால் இயற்கையாகவே கல்விஞானம் மிக்கவர்களாகவும், கல்வியில் உயர்ந்த தகுதியை அடைந்தவர்களாகவும், பட்டங்கள் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனா லும், எப்போதும் ஒருவித அச்ச உணர்வுட னேயே இருப்பார்கள். அதன் காரணத்தால் துணிச்சலாக எந்தச் செயலையும் செய்ய முற்படத் தயங்குவார்கள். பிறரிடம் நெருங்கிப் பழகாமல் ஒதுங்கியே இருப்பார்கள். சண்டை, சச்சரவுகளை முடிந்தமட்டும் தவிர்க்க விரும்புவார்கள். மற்றவர்கள் தம்மை அலட்சியம் அல்லது அவமானம் செய்தால்கூட எதிர்த்துப் போராடாமல் ஒதுங்கிவிடுவார்கள்.
இவர்களில் சிலருக்கு கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். அதனால் இலக்கியம், கவிதை, புதினம், நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு புகழ்பெறுபவர்களாக வும் இருப்பார்கள்.
பொதுவாக இவர் களுக்கு மற்றவர்களுடன் கூட்டுசேர்ந்து எந்த ஒன்றையும் செய்வதில் ஆர்வமிருக்காது. எதைச் செய்தாலும் தன்னையும் தன்னுடைய பலத்தை யும் மட்டுமே நம்பி செயல்படுபவர்களாக இருப்பார்கள். கடன் வாங்கி எந்தவொரு செயலையும் செய்வதில் விருப்பமிருக்காது. கையிருப்பில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதற்கேற்ப தங்கள் வேலைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால் பேசிப் பேசியே காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். இவர்களிடம் பேசுபவர்களின் பேச்சில் சின்னச்சின்ன விஷயத்தில்கூட குற்றம் கண்டுபிடிப்பார்கள். சிலர் சமயம் பார்த்து காலையும் வாரி விடுவார்கள்.
சுக வாழ்க்கையில் அதிக ஈடுபாடுகொண்டு அதை விரும்பும் இவர்கள், தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு மணவாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் கணவன்- மனைவிக்குள் கீரியும் பாம்பும் என்ற நிலையே கடைசிவரை பலருக்கும் இருக்கும். வாழ்க்கைத் துணையால், உற்றார்- உறவினர் களால் இவர்களுக்கு தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படும். ஒருசிலருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகளும் உருவாகும்.
இவை யாவும் இவர்களின் ஒருபக்கம்தான். மறுபக்கத்தில் வீண் குழப்பமடைவதும், அவசரத்தனமாக செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாவதும், விரும்பியதை உடனே அடைந்து விட வேண்டுமென்று அவசரப்படுவதும், சட்டத்திற்கு எதிராக செயல்படும் தீவிரப் போக்கும், பிறரை நம்பாத மனநிலையும், தீய பழக்கத்திற்கு அடிமையாவதும், ரகசிய அந்தரங்கங்களை நினைத்து தன்னிச்சையாக முடிவெடுப்பதும், அடிக்கடி தேவையற்ற மனமாற்றம் கொள்வதும், ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையும் இவர்களுக்கிருக்கும்.
இவர்கள் மனதின் அடியாழத்தில் தெய்வீக, ஆன்மிக சிந்தனைகள் பதிந்திருக்கும். நகரப் பகுதியில் இவர்கள் வசித்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் கிராம வாழ்க்கைமீது அளவில்லாத பிரியம் இருக்கும். இவர்களின் கடைசிக்காலம் இயற்கையுடன் இணைந்ததாகவே இருக்கும்.
இவர்களில் பெரும்பாலோருக்கு கண்கள் கவர்ச்சியாக இருக்கும். சிலர் தங்கள் சக்திக்கு மிஞ்சிய வேலைகளில் ஈடுபடு வார்கள். அல்லது தங்கள் சக்திக்கு மிஞ்சிய விஷயங்களைக் கற்பனை செய்தும், நினைத் துப் பார்த்தும் அதன்படி வாழ முயற்சிப்பார் கள்.
நடைமுறை வாழ்க்கையில்கூட இவர்களால் எது முடியுமோ- இவர்களுக்கு எது சாதகமாக அமையுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். சூழலுக்கேற்ப வாழவேண்டிய வழிமுறைகளை உரு வாக்கிக்கொள்வார்கள். இவர்களின் போக்கு பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். வாழ்க்கையின் மேடு- பள்ளங்களையும் வெற்றி- தோல்விகளையும் பெரும்பாலும் சந்திப்பவர்கள் இவர்கள் என்றே சொல்லவேண்டும்.
சில நேரங்களில் எரிமலைபோல் வெடித் தாலும் அடுத்த நிமிடமே ஆழ்கடல்போல் அமைதியாகி விடுவார்கள். சிறிய விஷயத் தையும் பெரியதாக நினைத்து மகிழ்வார்கள். பெரிய விஷயத்தை மிகவும் சாதாரணமாக நினைத்து விடுவார்கள். இவர்களை யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. வம்பென்று வந்துவிட்டால் எந்த ஒரு நிலைக்குப் போகவும் தயங்கமாட்டார்கள்.
இனிய வார்த்தைகளால் வசீகரிக்கும் ஆற்றல் இவர்களுக்கு இயல்பாகவே உண்டென்பதால் பலரையும் தங்கள் நட்பில், உறவில் கட்டிப்போட்டுவிடுவார்கள். மற்றவர்களைக் கவரும் ஆற்றல் இயல்பாகவே இவர்களிடம் நிறைந்திருக்கும்.
உண்மையை விரும்பும் மனிதர்போல் இவர்களை உலகம் கொண்டாடும். "எல்லாம் விதிதான். தெய்வம் நமக்கு வேண்டியதைக் கொடுக்கும். நாம் போகவேண்டிய வழியில் நம்மை அழைத்துச் செல்லும்' என்னும் நம்பிக்கை இவர்களுக்குள் இருக்கும். அதே நேரத்தில் உணர்ச்சிவயப்படுவதும் தொட்டால் துவண்டுவிடும் மனமும் உடைய இவர்களுக்கு முன்கோபம் என்பது எக்காலத்திலும் நீடிக்கும்.
இவர்களில் சிலர் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக் கூடியவர்களாகவும், நம்பக் கூடாதவர்களை நம்பி மோசம் போகக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர் களில் சிலர் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு ஆளாகி கடைசிவரை அதை விடவும் முடியாமல் வாழ்ந்துவருவார்கள். சிலர் ஞானிகளாகவும் தீர்க்கதரிசிகளாகவும் மாறிவிடுவார்கள். சிலர் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், எந்த வேலையிலும் அக்கறை செலுத்த விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.
சிலர் புதையல் கண்டெடுத்து அதிர்ஷ்டம் காண்பவர்களாகவும், திடீர் அதிர்ஷ்டத்தை அடையக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களைப் பாராட்டிப் புகழ்வோரையும், இவர்கள் விருப்பப்படி நடப்பவர்களையும் பெரிதும் மதிப்பார்கள். இவர்களுடைய சொந்த விஷயங்களில் அக்கறையாக செயல் பட்டால்தான் முன்னேற்றத்தை அடைய முடியும். எந்தவொரு செயலையும் திட்ட மிட்டு செய்தால் அதில் கண்டிப்பாக வெற்றி பெறமுடியும்.
இவையெல்லாம் மீன ராசியில் பிறந்தவர்களுக்கான பொதுப் பலன்களாகும்.
செல்: 94443 93717