தாயின் கருவிலிருந்து நம்முடைய சிரசு வெளிப்படும் நேரத்தில், பன்னிரண்டு ராசிகளுக்குள் ஒன்பது கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்தும், நம்முடைய பூர்வபுண்ணிய நிலைப்பாட்டை வைத்தும் நமக்குப் பலன்கள் உண்டாகின்றன. நவகிரகங்களின் ஆதிக்கம் நம் ஒவ்வொருவரிடமும் மேலோங்கியிருக்கும். அத்தகைய நிலையில் நம் ராசியாதிபதியைக்கொண்டு நம்முடைய பொதுப்பலன்களை அறியமுடியும். அந்த வகையில் சிம்ம ராசியில் பிறந்தவர்களின் பொதுப்பலன்களை இப்போது பார்ப்போம்.
ஒளிமிக்க சூரியனை ராசிநாதனாகக் கொண்டு, சிங்கம்போல் வாழ்கின்ற நிலையைப்பெற்று புகழ்மிக்கவர்களாக விளங்குபவர்கள் சிம்ம ராசியினர். ஜாதகத்தில் லக்னத்திற்கு முதல் பாவமாக விளங்குபவரான சூரியனே இவர்களுடைய ராசிநாதனா வார். சுயநிலை, சுய உயர்வு, செல்வாக்கு, கௌரவம், கர்வம், கம்பீரம், ஆற்றல், வீரம், பராக்கிரமம், சரீர சுகம், நன்னடத்தை, நேத்திரம், உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரகனாக விளங்குபவர் இவர்களுடைய ராசிநாதனான சூரியன். இவரே பிதுர்காரகனும் ஆவார். ஆன்மாவைப் பிரதிபலித்திடக் கூடியவரும் இவரே. ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்களுக்கும் இவரே அரசன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். ஆதித்ய ஹிருதய மந்திரத்தால் இராமன் இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயணத்திலிருந்து நாம் தெரிந்துகொண்டதாகும். வேத மந்திரங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரி. அந்த காயத்ரிக்குரியவர் சூரிய பகவானேயாவார்.
இத்தனை சிறப்புமிக்க சூரியனைத் தங்களுடைய ராசிநாதனாகக் கொண்டவர்கள் இவர்கள்.
எந்த நிலையிலும் எதற்காகவும் அச்சம் கொள்ளாமல், எது வந்தாலும் துணிந்து நிற்கக்கூடிய ஆற்றலும், விடாமுயற்சியால் வெற்றியை எட்டும் குணமும், மனதில் அச்சம் உண்டானாலும் அதை வெளியில் காட்டாமல் எப்போதும் கம்பீரமாக காட்சியளிப்பதுடன், எங்கும் எதிலும் தனித்துவத்துடன் விளங்கும் யோகமும் பெற்றவர்கள் இவர்கள்.
சூரியனுடைய ஒளியினால் இருள் ஓடி ஒளிவதுபோல், இவர்கள்முன் மற்றவர்கள் நிற்பதற்குக்கூட அச்சப்படுவார்கள். எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இவர்களே முதன்மையானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்கு இவர்களே பாதுகாவலர்போல் இருப்பார்கள். பகையாளியையும் பாவம், புண்ணியம் என்று நினைத்து அவர்களுக்காக இரக்கப்படவும் செய்வார்கள்.
பணம், பொருள் என்பனவற்றைக் காட்டிலும் புகழுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். எந்த எதிர்ப்புக்கும் அஞ்சமாட்டார்கள். பின்விளைவுகளை நினைத்து பயந்துவிடவும் மாட்டார்கள். நினைத்ததை சாதித்துவிடவேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாகவும், நோக்கமாகும் இருக்கும்.
சிம்ம ராசியில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் அதிகாரம் செலுத்தும் பணியிலும், நிர்வாகத்திலும், அரசு வேலைகளிலும், அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங் களிலும் பணியில் இருப்பார்கள். அதற்குக் காரணம் இவர்களுடைய ராசிநாதனான சூரியன் ராஜகிரகம் என்பதுதான். இவர்கள் முயற்சியே செய்யாவிட்டாலும் அத்தகைய தொழில் அமைப்பு இயற்கையாகவே அமைந்துவிடும். அதேபோல் எந்தத் துறையில் இருந்தாலும் அங்கே உயர்ந்த இடத்தை அடைந்துவிடுவார்கள். இவர்களில் பெரும்பாலோருக்கு அரசியல் ஈடுபாடும், சமூக சேவையில் நாட்டமும் இருக்கும் என்பதால், இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
இவர்களுடைய ராசிநாதனான சூரியன் ஆட்சி, உச்சம், நட்பு என்ற நிலையில் ஜாதகத்தில் இருந்துவிட்டால் அதிகாரப் பதவிகளில் மட்டுமல்ல; அரசியலிலும் முதலிடம் வகிப்பார்கள். எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்று இவர்களுடைய வளர்ச்சி உயர்ந்து கொண்டே இருக்கும். செய்யும் தொழிலில் கூட இவர்கள்தான் முதலிடம் வகிப்பார்கள். இவர்களிடம் போட்டியிட்டு மற்றவர் களால் எதையும் சாதிக்கமுடியாது. அத்தகைய சுதந்திரமான தொழில்களையே தேர்வு செய்வார்கள். அதில் படிப்படியாக உயர்வு பெற்று வளர்ச்சியும் காண்பார்கள்.
இவர்களுடைய வாழ்க்கை என்பது இவர்களின் குடும்பத்தைச் சார்ந்ததாக இருப்பதைவிட பொதுநலத்தை முன் கொண்டதாகவே இருக்கும். ஊருக்காக உழைப்பதிலும் பொதுமக்களுக்காக சிந்திப்பதிலும் முதன்மையானவராக இருப்பார்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்த்துப் பேசாதவர்கள் என்பதால், இவர்களுடைய குரலில் வேகம், ஆவேசம், அதிகாரமெல்லாம் இருக்கும். பணிந்துபோவது இவர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே இருக்கும் என்பதால், மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசி மற்றவர்கள் வெறுப்புக்கும் ஆளாவார்கள். இதனால் இவர்களுடைய செல்வாக்கு உயர்வதுபோல் நாளுக்கு நாள் எதிரிகளும் அதிகரிப்பார்கள். குடும்பத்தினரும் இவருடைய பேச்சுகளால் வெறுப்படைவதுடன், கொஞ்சம் கொஞ்சமாக இவர்களைவிட்டு விலகவும் ஆரம்பித்துவிடுவார்கள்.
இவர்களைவிட்டு மற்றவர்கள் விலகிடக்கூடிய நிலை எப்படி உண்டாகிறதென்றால், ராசிநாதனான சூரியன் இவர்கள் ஜாதகத்தில் பாதகமான நிலையில் அமர்ந்தி ருந்தால் மட்டும்தான். சாதகமாக அமர்ந்திருந் தால் செல்வாக்குடன் திகழ்வார்கள். இவர் களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிரிகள்கூட இவர்களைக் கண்டு அஞ்சுவார்கள். இவர்களை எதிர்ப்பவர்கள் பலமிழந்து, இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
இவர்கள் ராசிக்கு பஞ்சமாதிபதியும், அஷ்ட மாதிபதியுமான குரு பகவான், ராசிநாதனான சூரியனுடன் இணைந்தோ, பார்த்தோ, சாரமோ பெற்றிருந்தால் இவர்களிடம் நிர்வாகத்திறமை நிறைந்திருக்கும். எந்தத் துறையில் இறங்கினாலும் அங்கே முதலிடத்திற்கு வந்துவிடுவார்கள். அரசியல் ஈடுபாடும், பிரபலமாகும் யோகமும் உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் இயற்கையாகவே அமைந் திருக்கும். ஊரிலும் அரசியலிலும் பிரமுகராக விளங்குவதுடன் தொழிலதிபராகவும் விளங்குவார்கள்.
எந்த நிலையில் இருந்தாலும் இவர்கள் கொண்ட கொள்கைகளை எதற்காகவும் யாருக்காகவும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சுதந்திரமாக இருப்பதென்பதே பிடித்தமானதாக இருக்குமென்பதால், உற்றார்-
உறவினர்களின் ஆதரவென்பது மற்றவர்களுக்கு இருப்பதுபோல் இவர்களுக்கு இல்லாமல் போகும். எதையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுத்திடக் கூடியவரான இவர்கள், அடுத்தவர் நலனுக்காக எடுத்த காரியங்களை உடனுக்குடன் முடித்துக் கொடுப்பார்கள். பதவிகளும் கௌரவமும் தேடிவரக்கூடிய அளவுக்கு இவர்களின் செயல்பாடுகள் இருக்கும். குறைந்தபட்சம் இவர்களுடைய பகுதியிலாவது பிரபலமாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவர்களின் பிறவிச் சொத்தாகவே இருக்கும். முரட்டுத்தனமும் வேகமும் உடன் பிறந்ததாக இருக்கும். அசாத்திய துணிச்சலுடன் எந்த ஒன்றாக இருந்தாலும், எந்த நிலையிலும் எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
திருமண வாழ்க்கை என்பது தாமரை இலையின்மேல் தண்ணீராகத்தான் இருக்கும். இவர்கள் கனவுகண்ட வாழ்க்கை ஒன்றாக இருக்கும். ஆனால் அமைந்த வாழ்க்கை அதற்கு எதிரானதாக இருக்கும். சிறந்த ரசனையாளரான இவர்கள் தங்கள் துணை தேவதைபோல் இருக்கவேண்டும்; அவருடன் இயற்கையையும், அழகையும் ரசிக்கவேண்டும்; இசையில் திளைக்கவேண்டுமென்று கனவு கள் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுடைய கனவுகளெல்லாம் நிறைவேறாமல் கனவாகவே மறைந்துவிடும். அதற்குக் காரணம் களத்திரக்காரகனான சுக்கிரன் இவர்களுடைய ராசிநாதனுக்கு சத்ரு என்பதுதான். அதுமட்டுமல்ல; இவர்களுடைய களத்திர ஸ்தானாதிபதியான சனியும் இவர்களின் ராசிநாதனுக்குப் பகைவர் என்பதுதான். அதனால் இவர்கள் நினைத்த படி துணை அமையாது.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எதிர்பாராமல் துணையை அடையவேண்டிய நிலை உருவாகிவிடும். பெரும்பாலும் அந்நியத்தில் மட்டுமே வாழ்க்கைத் துணை அமையும். ஒருசிலருக்கு விதவை அல்லது விவகாரத்துப் பெற்றவர்கள் மனைவியாக அமைவார்கள். திருமணத்திற்குப் பிறகும் இவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள். கூட்டுக் குடும்பமாக இருக்கவேண்டுமென்று உறவுகள் வற்புறுத்தினாலும், எலி வளையாக இருந்தாலும் அது தனி வளைதான் என்பதில் உறுதியாக இருப்பார்கள். குழந்தை பாக்கியத்திற்குக் குறைவில்லாதவர்களாகவும் இருப்பார்கள். பெண் குழந்தைகளைவிட ஆண் வாரிசுகளே அதிக அளவில் இருக்கும்.
மற்றவர்களின் வழிகாட்டுதலை எந்தக் காலத்திலும் இவர்கள் ஏற்கமாட்டார்கள்.
ஆனால், நண்பர்கள்போல் ஒருசிலர் இவர் களிடம் பழகி, இவர்களுடைய வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் நயவஞ்சமாக செயல் படுவார்கள். பிரகாசமான நெருப்பையும் தண்ணீரால் அணைத்துவிட முடியும் என்பதுபோல், தவறானவர்களின் அன்பிலும் சதியிலும் இவர்கள் விழுந்துபோகவும் வாய்ப்புண்டு. என்றாலும், மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் தோன்றி பிரகாசிப் பதுபோல் இவர்கள் வலம்வர ஆரம்பித்து விடுவார்கள்.
சேமிப்பு, சிக்கனம் என்பதில் எப்போதும் கவனமாக இருப்பார்கள். ஆடம்பரத்தைவிட அடிப்படைத் தேவையே போதுமானதாக இருக்கும். இருக்கும் இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக் கூடியவர் களாகவும் இருப்பார்கள். எந்த நிலையிலும் தம்மிடம் இருப்பதை வைத்துக்கொண்டு அதற் கேற்ப வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அடுத்த இதழில் கன்னி...
செல்: 94443 93717