வகிரகங்களின் ஆதிக்கம் நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாக மேலோங்கியிருக்கும். அத்தகைய நிலையில் நம் ராசியாதிபதியைக் கொண்டு அவரவர்களுடைய பொதுப்பலன்களை நம்மால் அறிய முடியும்.
அந்தவகையில் கடக ராசியில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.
கடக ராசியினரை நீர் ராசியினர் என்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் கடல்கடந்து சென்று வாழக்கூடிய யோகமுடையவர்கள் என்றும் சொல்லலாம்.
கடக ராசியின் அதிபதியானவர் மனதிற்கும் உடலுக்கும் காரகனான சந்திரன். பொதுவாக, சந்திரனுக்கு நிழல் கிரகங்களான ராகு- கேதுக்களைத் தவிர்த்து பகைவர்களே கிடையாது என்பார்கள். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்களை நேரடியாக எதிர்க்கும் தைரியம் எவருக்கும் இல்லையென்பதே உண்மை. அதனால் எல்லா இடங்களிலும் இவர்கள் செல்வாக்குடனும், தனித்துவத்துடனும் இருப்பார்கள்.
அழகையும், அறிவையும், ஆற்றலையும் வழங்கிடக்கூடிய சந்திரபகவானின் ஆதிக்கத்தில் பிறந்த வர்கள் என்பதால், நியாயத்தையும் நேர்மையையும் குறிக்கோளாகக்கொண்டு மனசாட்சியின்படியே செயல்பட விரும்புவார்கள். பலருக்கும் வழிகாட்டும் வகையில் வாழ்கிறவர்களாகவும் இருப்பார்கள். நாவண்மை கொண்டவர்கள் என்பதால் அரசியலிலும் இவர்கள் தனியிடம் பிடிப்பார்கள்.
வாக்குபலமும், சாதுரியமான பேச்சாற்றலும், எதையும் ஆராயக்கூடிய சக்தியும் இவர்களுக்குண்டு. நமக்கு மட்டுமே எல்லாமும் தெரியும் என்ற மனநிலையைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பிடிவாதகுணம் கொண்டவர்களான இவர்களுக்கு, பொன்னையும் பொருளையும்விட புகழின்மீதே அளவற்ற ஆசைகள் இருக்கும். அதனால் விஷயம் தெரிந்தவர்கள் இவர்களைப் புகழ்ந்து பேசியே தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு அதன்பிறகு இவர்களைக் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள்.
வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தைக் கொண்ட வர்களாக இருப்பார் கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்துமுடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அதை எப்படியாவது முடித்துத் தந்துவிட வேண்டுமென்ற எண்ணமும், அதற்கேற்ற செயல்பாடுகளும் இருக்கும். இவர்கள் மனதில் கடந்தகால, நிகழ்கால சிந்தனைகளைவிட எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். நடந்து முடிந்தவற்றைப் பற்றி எப்போதும் கவலைப் படாதவர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்கள். தங்களின் திறமை, தகுதி, பலம் போன்றவற்றை நம்பி செயல்பட்டு வெற்றி பெறுவதைவிட, எதிரியின் பலம், பலவீனம் பார்த்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றிபெறுவதே அதிகமாக இருக்கும்.
எல்லாரிடத்திலும் சகஜமாகப் பழகி, எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தி படைத்தவர்கள். அதேநேரத்தில் இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவயப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இருந்தாலும் எந்த ஒன்றையும் முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல்படுபவராகவும் இருப்பார்கள். இவர்களுடைய ராசிநாதன் வளர்வதும் தேய்வதுமாக இருப்பதுபோல், இவர்களுடைய வாழ்க்கையும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் கொண்டதாகவே இருக்கும். என்றாலும் இவர்களிடம் போட்டியிட்டோ மோதியோ யாராலும் வெல்ல முடியாது. தோல்வி என்றொரு நிலை வருமென்று தெரிந்தால் அதை எப்படி மாற்றுவது என்ற வழியையும் கண்டுபிடித்து விடுவார்கள்.
செயற்கரிய காரியங்கள் செய்து சாதனையாளராக விளங்கவேண்டும் என்று வாழ்ந்துவரும் இவர்களுக்கு, ஆற்றல் மிக்கவர்கள் எப்போதும் உறுதுணையாக இருந்து இவர்களை பலம் மிக்கவர்களாக மாற்றுவார்கள். எந்த ஒரு செயலையும் துணிச்சலுடன் செய்துமுடிக்கும் ஆற்றல் பெற்றவர்களான இவர்களுக்கு சமூகத்தில் தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
உணர்ச்சிவசப்படும்போது இவர்களை சமாதானப்படுத்துவது யாராலும் முடியாத காரியமாகவே இருக்கும். ஆக்ரோஷமாகப் பொங்கியெழும் கடல்போல் இவர்களுடைய கோபம் வெளிப்படும். இவர்களது கோபம் உறவுகள்மீது பாய்ந்தாலும் அவர்களுக்கும் அதே நிலைதான். அதேபோல் ஒரு உதவிக்காக இவர்கள் ஒருவரை நாடும்போது அவர் ஒத்துவராவிட்டால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவரை உதறித் தள்ளிவிட்டு வேறு வழியைநோக்கி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். பட்டங்களும், பதவிகளும், அரசியலும் இவர்களை நாடிவரும். முப்பது வயதிற்கு மேல்தான் இவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்ற நிலை உண்டாகும்.
இவர்களில் சிலருக்குப் போலீஸ், இராணுவம், சட்டம் போன்றவற்றிலும், ஒருசிலருக்கு அரசுவழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். சிலர் ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சிலர் கடல்கடந்து செல்பவர்களாகவும், ஏற்றுமதி- இறக்குமதி தொழில் புரிபவர்களாகவும் இருப்பார்கள்.
தன்னைத்தேடி வருபவர்களுக்கு உதவிசெய்வதை தங்களுடைய லட்சியமாகவே வைத்திருப்பார்கள்.
அதேசமயம் இவர்களிடம் உதவிகேட்டு வருபவர்களின், பழகுபவர்களின் சுயரூபம் தெரியாமல் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து ஏமாந்து போவதும் உண்டு.
நட்புகளிடத்தில் எச்சரிக்கையாக இல்லையென்றால் இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் சங்கடங்களே நிறைந் திருக்கும்.
சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த வர்களான இவர்களை, சலனத்திற்கு ஆட்பட்டவர்கள் என்றே சொல்லவேண்டும். அறிவும் ஆற்றலும்கொண்டு புகழின்மீது ஆர்வம் கொண்டவர்களாக இருந்தாலும், ஆனந்தம், சுகபோகத்தின்மீதும் மிகுந்த நாட்டம் இருக்கும். அதனால் ரசனைமிக்க இவர்கள் ஏதேனும் ஒருவகையில் எதிர்பாராமல் காதலிலும் விழுவார்கள்.
களத்திரகாரகன் சுக்கிரனும், களத்திர ஸ்தானாதிபதி சனி பகவானும் இவர்களுடைய ராசிநாதனுக்குப் பகைபெற்றவர்கள் என்பதால் காதல் இவர்களுக்குப் பாதகமாகும். அதனால் இவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் சங்கடத்திற்குரியதாக மாறிவிடும்.
திருமண விஷயத்தில் இவர்கள் மிகமிக யோசித்து கவனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில் எல்லா நிலையிலும், வாழ்க்கைத்துணை இருந்தும் இல்லையென்ற நிலையையே அடையவேண்டியதாக இருக்கும்.
இவர்கள் கடனாகக் கொடுக்கும் பணம் திரும்ப வராது என்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். லாட்டரி, ரேஸ், போட்டி பந்தயங்கள் வெற்றியைத் தராது என்பதால், அதில் கவனத்தையும் பணத்தையும் செலுத்தி னால் நேரத்தையும் பொருளையும் இழக்கவேண்டியதாகி விடும். இவர்களுடைய ராசியின் நாயகன் சந்திரன் கலைகளுக்கும், கற்பனைகளுக்கும் உரியவன் என்பதால், கலைத் துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பும் உண்டு. இவர்களின் மதிநுட்பமான காரியங்களால் எல்லாரது நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெறுவார்கள்.
தனித்த அடையாளத்துடன் மற்றவர்கள் முன்பாக வாழக் கூடியவர் களாக இருப்பார்கள். எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமல் தங்களுடைய நாவண்மையாலேயே வேண்டியதை சாதித்துக்கொள்வார்கள். நினைவுத்திறன் அதிகம் பெற்றவர்கள் என்பதால், எந்த ஒரு விஷயத்தையும் தங்கள் வாதத் திறமையாலேயே வெற்றி காண்பார்கள். வார்த்தைகளால் மற்றவர்களைத் தம்பக்கம் ஈர்க்கும் ஆற்றல்கொண்ட இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
திறமை, செல்வாக்கு, புகழ் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான இவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்களையும் பணிய வைக்கக்கூடிய சக்தி படைத்தவர்களாக இருப் பார்கள். குடும்பத்தைவிட பொது சேவை புரிவதிலேயே இவர்களுடைய நாட்டம் மேலோங்கியிருக்கும். பொதுவாகவே இவர்கள் வசிக்கும் பகுதியில் இவர்களுடைய புகழ், பெயர், செல்வாக்கு மேலோங்கியிருக்கும். பணிபுரியும் இடங்களில் இவர்களின் சிறப்பு தெரிந்து தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். வாகன யோகம், மனை யோகம், குறைவான அளவிலேயே குழந்தை யோகம் அமையும்.
அடுத்த இதழில் சிம்மம்...
செல்: 94443 93717