ஒருவருக்கு வளமான வாழ்க்கை அமைவதற்கு அவரின் ஜனனகால ஜாதக மானது பலமாக இருப்பது அவசியம். ஒருவர் எந்த சூழ்நிலையில் பிறந்திருந் தாலும், அவரது வாழ்க்கைத் தரமானது, அவர் வளர வளர வளர்ச்சிக்கேற்ப தானாகவே வளர்ந்துவரும். வாழ்வில் பல சாதனைகள் செய்யக்கூடிய வாய்ப்பு களும், சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தையும் உண்டாக்கும். ஒருவரது பெயரை அனைவரும் தெரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு உன்னதமான உயர்வுகளைக் கொடுக்கும் புகழ்பெற்ற பலரது ஜனன ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் பலமான கிரக நிலைகள் அமைந்திருப்பதை அறியமுடியும்.
நவகிரகங்களுக்கிடையே ஏற்படக்கூடிய தொடர்பு கள்மூலம் யோகங்களானது உண்டாகிறது. இந்த கிரகத் தொடர்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை கிரகங்கள் இணைவது, ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது, ஒருவருக்கொருவர் இடம்மாறி அமையப் பெறுவது. இவற்றில் இரு கிரகங்கள் இடம்மாறி அமைவதைத்தான் பரிவர்த்தனை யோகம் என்கிறோம்.
இதுபற்றி இங்கு பார்ப்போம்.
நவகிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது வைத் தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உண்டு. நவகிரகங்களில் முதன்மை கிரகமான சூரியனுக்கு சிம்மமும், சந்திரனுக்கு கடகமும், செவ்வாய்க்கு மேஷம், விருச்சிகமும், புதனுக்கு மிதுனம், கன்னியும், குருவுக்கு தனுசு, மீனமும், சுக்கிரனுக்கு ரிஷபம், துலாமும், சனிக்கு மகரம், கும்பமும் ஆட்சிவீடாகும்.
ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் இடம்மாறி அமைவது பரிவர்த்தனை யோகமாகும். உதாரணமாக, சிம்மத்திற்கு அதிபதியான சூரியன் தனுசு ராசியில் அமையப்பெற்று, தனுசுவிற்கு அதிபதியான குரு சிம்மத்தில் அமையப்பெற்றால் பரிவர்த்தனை யோகமா னது உண்டாகிறது. பரிவர்த்தனை பெறக் கூடிய இரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாக இருப்பது நல்லது. நவகிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்றவை நட்பு கிரகங்களாகும்.
அதுபோல புதன், சுக்கிரன், சனி போன்ற கிரகங்களும் ஒருவருக்கொருவர் நட்பு கிரகங்களாகும்.
ராசி மண்டலத்தில் ஜென்ம லக்னத் திற்கு நற்பலனை ஏற்படுத்தக்கூடிய ஸ்தானங் களாகக் கருதப்படுபவை. 1, 2, 3, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய பாவங்களாகும். இந்த ஸ்தானாதி பதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெறுவது உன்னதமான அமைப்பாகும். அதிலும் குறிப்பாக கேந்திர ஸ்தானாதி பதிகளான 1, 4, 7, 10-க்கு அதிபதிகளும், திரிகோண ஸ்தானாதிபதிகளான 1, 5, 9-க்கு அதிபதிகளும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெறுவது அதிர்ஷ்டத்தையும் யோகத்தினையும் ஏற்படுத்தக்கூடிய அமைப் பாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 3, 6, 8, 12-ஆம் வீடுகளை துர்ஸ்தானம், மறைவு ஸ்தானமென்று குறிப்பிடுவார்கள். இந்த ஸ்தானாதிபதிகள் நற்பலனை ஏற்படுத்துவதில்லை என்றாலும், இவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெறுவது உன்னதமான அமைப்பாகும். அதன்மூலம் கெடுபலனுக்கு பதில் எதிர்பாராதவகையில் ராஜயோகத் தினை அடைவார்கள். இது விபரீத ராஜயோகத்தில் ஒருவகையாகும்.
பரிவர்த்தனை யோகத்தின்மூலமாக பரிவர்த்தனைபெற்ற இரு கிரகங்களும், தன் சொந்த வீட்டில் ஆட்சிபெற்றிருந்தால் என்ன பலனை உண்டாக்குமோ அதுபோன்ற நற்பலன்களைக் கொடுக்கும். உதாரணமாக, மேஷ லக்னத்திற்கு 4-ஆமதிபதி சந்திரன், 9-ஆம் வீடான தனுசில் அமையப்பெற்று, 9-ஆமதிபதியான குரு 4-ஆமதிபதி சந்திரனின் வீட்டில் அமைந்து பரிவர்த்தனை யோகம் உண்டாகியிருந்தால், குருவும் சந்திரனும் தன் சொந்த வீடுகளில் ஆட்சிபெற்றிருந்தால் என்ன நற்பலன்களைத் தருவார்களோ அது போன்ற பலனைப் பரிவர்த்தனை யோகத் தால் உண்டாக்குவார்கள்.
சில தோஷங்களுக்குக்கூட பரிவர்த்தனை யோகம் உண்டாகுமாயின், நீச தோஷமானது விலகி அந்த கிரகம் ஆட்சிபெற்றதைப் போன்ற பலனைத் தருகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும் செவ்வாயானவர் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷமானது விலகி நற்பலனைக் கொடுக்கிறது.
நவகிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடானது இருந்தாலும், அதிக பட்சமாக ஆறு கிரகங்கள் மட்டுமே பரிவர்த்தனை பெறமுடியும். ஒருவரது ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தால், அதனால் உண்டாகக்கூடிய அதிர்ஷ்டத்திற்கும் யோகத்திற்கும் எல்லையே இருக்காது. நம்முடைய முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அம்மை யாரின் ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருக்கும். இப்படி ஆறு கிரகங்களின் பரிவர்த்தனையால் அம்மையார் பாரத நாட்டையே ஆண்டு உலக அளவில் பெயர், புகழ் அனைத்தையும் பெற்றார்.
பரிவர்த்தனை யோகமானது இரு கிரகங்கள் அவரவரின் வீடுகளில் மாறி அமைவதாகும். இந்த பரிவர்த்தனை யோகத்தைப்போல சாரப் பரிவர்த்தனை யோகமென்ற ஒன்றுமுண்டு. அதாவது கிரகங்கள் நட்சத்திர சாரப்படி ஒருவருக் கொருவர் மாறியிருந்தால் சாரப் பரிவர்த் தனை யோகமாகும். உதாரணமாக, சனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பூர நட்சத்திரத்தில் அமைந்து, சுக்கிரன் சனியின் நட்சத்திரமான அனுஷத்தில் அமைந்திருப் பது சாரப் பரிவர்த்தனை யோகமாகும்.
பரிவர்த்தனை யோகமானது ஒருவர் ஜாதகத்தில் ஏற்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்றிருந்தால் அந்த ஜாதகர் பிறந்ததற்குப் பிறகு தாய்- தந்தையர் வாழ்ந்த இடத்தை விட்டு இடம்மாறி வேறொரு இடத்தில் வாழும் நிலை உண்டாகிறது. அதுபோல ஒருவர் ஜாதகத்தில் நான்காமதிபதி பரிவர்த் தனை பெற்றிருந்தால் படிப்புக்காக வெளியூர், வெளியிடங்களுக்குச் சென்று படிக்கும்நிலை உண்டாகிறது.
கூர்ந்து கவனித்தால், எந்தவொரு ஜாதகத் தில் ஐந்தாமதிபதி பரிவர்த்தனை பெறுகி றதோ அந்த ஜாதகருக்கு உயர்படிப்புக்காக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகிறது. ஐந்தாமதிபதி பரிவர்த்தனை பெறுகின்றபொழுது, ஐந்தாமதிபதி 9, 12-ஆம் அதிபதியுடன் தொடர்புபெற்றாலோ, ராகு, சந்திரனுடன் தொடர்புபெற்றாலோ அந்த ஜாதகருக்கு வெளிநாடு சென்று படிக்கக்கூடிய அமைப்புண்டாகிறது.
ஐந்தாம் வீடென்பது பூர்வபுண்ணிய ஸ்தானமாகும், ஐந்தாமதிபதி பரிவர்த்தனபெற்ற ஜாதகருக்கு பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டு வேறிடங்களில் சொத்துகள் வாங்கும் அமைப்பு, வேறிடங்களில் முதலீடு செய்யக்கூடிய அமைப்பு உண்டாகிறது. அதுபோல ஒருவர் ஜாதகத்தில் சூரியன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் இந்த ஜாதகர் பிறந்ததற்குப்பிறகு தந்தைக்கு வாழ்வில் ஒரு மாற்றம் உண்டாகிறது. அதுபோல ஒருவர் ஜாதகத்தில் பத்தாமதிபதி பரிவர்த்தனை பெற்றிருந்தால் அந்த ஜாதகர் முதலில் ஒரு பணி செய்துவிட்டு குறிப்பிட்ட காலத் திற்குப்பிறகு வேறொரு துறைக்குச் செல்லக் கூடிய நிலை உண்டாகிறது.
பரிவர்த்தனை பெறுகின்றபொழுது முதலில் ஒரு நிலையும், அதன்பிறகு வாழ்வில் ஒரு முழுமையான மாற்றமும் உண்டாகிறது. பத்தாமதிபதி 9, 12-ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு, அதன்மூலம் வாழ்வில் வளர்ச்சி உண்டாகிறது.
ஏழாமதிபதி பரிவர்த்தனை பெறுகின்ற ஜாதகங்கள் பலவற்றைப் பார்க்கின்றபொழுது, முதலில் திருமணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் முடிந்து அல்லது ஏதாவதொரு இடையூறை சந்தித்து அதன்பிறகு வேறொரு இடத்தில் திருமணம் நடக்கும் நிலை உண்டாகிறது. பரிவர்த்தனைபெற்ற ஜாதகங்களை ஆராய்ந்து பார்கின்றபோது அவர்கள் வாழ்வில் பல்வேறு எதிர்பாராத மாற்றங் களைக் காணமுடிகிறது. ஒருவரது வாழ்வில் எதிர்பாராத மாற்றத்தையும் திருப்பங் களையும் ஏற்படுத்தும் யோகமாக பர்வர்த் தனை யோகம் விளங்குகிறது.