சூரியன்
ஒருவருக்கு சமுதாய அங்கீகாரம் வழங்குவதில் சூரியன் முன்னிலை வகிக்கிறார். 3-ஆம் பாவகத்துடன் சூரியன் சுப சம்பந்தம் பெற்றால் தந்தைவழி உறவுகள்மூலம் திருமண ஒப்பந்தம், மாலையிடும் பாக்கியம் உரிய வயதில் கிடைக்கும். சூரியன் அசுப பலம் பெற்றால் தந்தை, தந்தைவழி உறவுகள் திருமண ஒப்பந்தமிட தடையாக இருப்பார்கள். மண மாலை கழுத்தில் ஏறுவதில் சிரமம் இருக்கும்.
பரிகாரம்: சூரியனை பலப்படுத்த ஒன்பது ஞாயிற்றுக்கிழமை நவகிரக சூரிய பகவானை செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.
சந்திரன்
3-ல் சந்திரன் சுப வலுப்பெற்றால் தாய்வழி உறவுகள்மூலம் மிக இளவயதில் திருமணம் நடக்கும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் திருமணத்தடை ஏற்படும். 3-ல் உள்ள அசுப சந்திரன் சிலருக்கு வயது முதிர்ந்த பிறகு மண மாலையை அணிவிக்கும். சந்திரன் அவசரத் தன்மை நிறைந்த கிரகம் என்பதால் 3-ஆமிடத்துடன் சந்திரன் சம்பந்தம்பெற்றால் அவசரத் திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் (ஒப்பந்தம்) செய்யாமல் உடனே திருமணம் போன்ற சம்பவங்கள் நடக்கும். எவ்வளவு துரிதமாக திருமணம் நடந்தததோலி அவ்வளவு வேகமாக திருமண பந்தம் முடிந்துவிடும். வெகுசிலருக்கு பலமுறை மண மாலை ஏறி- இறங்கும்.
பரிகாரம்: ஒன்பது திங்கட்கிழமை அல்லி மலர்களால் நவகிரக சந்திர பகவானை வழிபட, திருமண பந்தம் நிலைக்கும்.
செவ்வாய்
மூன்றாமிடத்துடன் செவ்வாய் சுப வலுப்பெற்றால் சுய முயற்சியால், உடன் பிறந்தவர்கள் ஆதரவால் திருமண ஒப்பந்தம் நடைபெறும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பழமொழி. செவ்வாய் விவேகமற்ற வேகம், கோபத்திற்கு காரக கிரகம்.
மூன்றாமிடத்துடன் செவ்வாய்
அசுப சம்பந்தம் பெற்றால் கோபத்தால் நல்ல வரனை தவறவிடுவார்கள் அல்லது விவேகமின்றி பொருந்ததாக வரனை தேர்வுசெய்து பின்நாளில் வருந்துவார்கள்.
பரிகாரம்: மூன்றாமிட செவ்வாயால் திருமண ஒப்பந்தம் தடைபடுபவர்கள் ஒன்பது செவ்வாய்க்கிழமை நவகிரக செவ்வாய் பகவானை செண்பக மலர்களால் அர்ச்சித்து வழிபட, சுபப் பலன் உண்டாகும்.
புதன்
சுய ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் புதன் சம்மந்தம்பெற்றால் தாய்மாமன்மூலம் இளம்வயதில் திருமணம் நடக்கும். புதன் காதல் கிரகம், இரட்டைத் தன்மை நிறைந்த கிரகம். மூன்றாமிடத்துடன் புதன் அசுப சம்பந்தம்பெற்றால் காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு இரண்டுமுறை திருமண ஒப்பந்தம் நடக்கும். அதாவது நிச்சயித்த திருமணம் தடைப்படும் அல்லது மறுவிவாகம் நடைபெறும்.
பரிகாரம்: மூன்றாமிட புதனால் திருமணம் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் ஒன்பது புதன்கிழமை தவன இலைகளால் அல்லது வெண்காந்தல் மலர்களால் நவகிரக புதனை வழிபடவேண்டும்.
குரு
சுய ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் குரு சுப பலம்பெற்றால் பெற்றோர்கள், பெரியோர்கள் ஆசிர்வாதத்தால் உரிய வயதில் திருமணம் நடைபெறும். குரு அசுப கிரக சம்பந்தம்பெற்றால் குலப்பெருமை பேசி நல்ல வரனை ஒதுக்குவார்கள். வயது முதிர்ந்தபிறகு வரனுக்கு ஏங்குவார்கள்.
பரிகாரம்: குருவை பலப்படுத்த ஒன்பது வாரம் வியாழக்கிழமை நவகிரக குரு பகவானை செண்பகம் அல்லது முல்லை மலர்களால் அர்ச்சனைசெய்து வழிபடவேண்டும்.
சுக்கிரன்
திருமணத்திற்கு களத்திரகாரக கிரகம் சுக்கிரன். சுய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த நிலையில் மூன்றாம் பாவத்துடன் சம்பந்தம் பெற்றாலும் உரிய வயதில் அத்தை, பெரியம்மா உதவியுடன் ஆடம்பரத் திருமணம் நடக்கும். சுக்கிரன் அழகு, ஆடம்பரத்திற்கு காரக கிரகம் என்பதால் சிலர் அழகு, ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வரன் தேடிக்கொண்டே இருப்பார்கள்.
அல்லது அத்தை, பெரியம்மா போன்ற குடும்பத்து முக்கியப் பெண் களால் திருமணம் தடைப்படும்.
பரிகாரம்: சுக்கிரனால் மண மாலை ஏந்துவதில் தடை இருப்பவர்கள் ஒன்பது வெள்ளிக்கிழமை நவகிரக சுக்கிரனை மல்லிகை, வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.
சனி
சனி மந்த கிரகம். எந்த செயலையும் காலம் தாழ்த்தியே நடத்துவார். லக்னம், மூன்று, ஒன்பதாமிடத்துடன் சம்பந்தம்பெறும் சனி திருமணத்தடையை ஏற்படுத்துவதில் வல்லவனுக்கு வல்லவன். "கொடுமை, கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை ஜிங்கு, ஜிங்குனு ஆடுச்சாம்' என்ற பழமொழிக்கு ஏற்ப பல ஜோதிடரிடம் ஜாதகம் காட்டியும் திருமணத்தடைக்கான காரணத்தை எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சம பிரச்சினை இருக்கும். சிலருக்கு இளம்வயதில் காதல் கலப்புத் திருமணம் நடந்து விவாகரத்து கிடைக்காமல், மறு விவாகத்திற்கும் செல்ல முடியாமல் இருப்பதற்கு மூன்றாமிட சனியே காரணம்.
பரிகாரம்: சனிபகவானால் திருமணத் தடை இருப்பவர்கள் ஒன்பது சனிக்கிழமை நீல மலர்களால் சனிபகவானை வழிபட வேண்டும்.
ராகு
ராகுபகவான் தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால்தான் நிற்கும் வீட்டை சொந்தவீடாக பாவித்து பலன்தருவார். ராகு தான் இணைந்த கிரகத்தின் காரகத்துவ பலனையும் இணைத்து பிரம்மாண்ட பலனைத் தருவார். ராகு தான் நின்ற வீட்டு பலனை பெரிதுபடுத்துவார். எனவே, 3-ஆம் பாவத்துடன் ராகு சம்பந்தம் பெற்றவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும். ஆனால் கழுத்தில் தாலி இருக்காது. மாடர்ன் மங்கையாக தாலியைக் கழட்டி வைத்து வாழும் பெண்களுக்கு மூன்றாமிடத்திற்கு ராகு சம்பந்தம் இருக்கும். அல்லது பேன்சியாக அடிக்கடி தாலிச் செயினை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
அல்லது தாலி மார்வாடி கடையில் அடமானத் தில் வாழும். இதுபோல் நவகிரகங்களின் லீலைகள் மனிதர்களை வியக்கவைக்கும். அதுவும் ராகுவின் செயல்பாடு திருமண வயதினரை திக்கு முக்காடச் செய்யும். வாலிப முறுக்கில் உல்லாசமாக இளம் பெண்களைத் திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றுபவர்களுக்கும் 3-ல் ராகு இருக்கும்.
பரிகாரம்: மூன்றாமிடத்துடன் ராகு சம்பந்தம் பெறுபவர்கள் அடிக்கடி மந்தாரை மலர்கள் சாற்றி நவகிரக ராகுபகவானை வழிபடுவது நல்லது.
கேது
சனிக்கும், ராகுவுக்கு சளைத்தவர் அல்ல கேது. சனிபகவான் காலம் தாழ்த்தியாவது பலன் தருவார். ராகுபகவான் இன்பமோ- துன்பமோ தாராளமாக வழங்குவார். கேது பகவான் கர்மவினைக்கு ஏற்றப் பலனை வழங்குபவர். கேது தான் நின்ற பாவகப் பலன்களை சுருக்குவார் என்பதால் காலம் தாழ்ந்து திருமணம் நடக்கும். சிலருக்கு கேதுவால் ஏற்படுத்தப்படும் அனைத்து திருமண ஒப்பந்தங்களும் சட்டச்சிக்கல் நிறைந்தவைகளாக இருக்கும். திருமணத்திற்கு பிறகு தாலியைக் கழற்றி வீசுபவர்கள் ஜாதகத்தில் 3-ல் சனி, ராகு, கேது சம்பந்தம் இருக்கும்.
பரிகாரம்: 3-ஆம்மிட கேதுவால் திருமணம் அமைவதில் சிரமம் இருப்பவர்கள் கதம்ப மாலை அணிவித்து நவகிரக கேதுபகவானை வழிபட வேண்டும். ஒரு ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி, மூன்றாம் இடத்தில் நின்ற கிரகம், பார்த்த கிரகத் தினைக்கொண்டு திருமண முயற்சியில் ஈடுபட வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமிடத்துடன் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் சம்பந்தம் இருப்பவர்களுக்கும் கழுத்தில் எளிதில் மண மாலை ஏறிவிடும். எனவே கழுத்தில் திருமண மாலை ஏறவும், திருமண பந்தத்தில் ஈடுபடவும் மூன்றாம் பாவக வலிமை அவசியம். எனவே திருமணம் தொடர்பான 1, 2, 7, 8-க்கு மட்டும் பரிகாரம் செய்யாமல் 3-ஆம் பாவகத்துடன் சம்பந்தம்பெறும் கிரகங்களுக்கும் பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துகள்.
செல்: 98652 20406