சொந்தமாகத் தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் எல்லாருக்கும் அமைந்துவிடுமா? தொழில் செய்வதற்கென்றே சில விதிமுறைகள் உள்ளன. ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் வீடும், 10-ஆம் அதிபதியும் பலமாக அமைந்திருந்தால் சொந்தத் தொழில் செய்யலாம். ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும், கிரகங்கள் வக்ரம் பெற்றிருந்தாலும் சொந்தத் தொழில் செய்யக்கூடாது. தொழில் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால் முதலில் அவர்களின் ஜாதகத்தைத் தெளிவாக ஆராய்ந்து, வேறு எந்த கிரகம் பலம் பெற்றிருக்கிறதோ, அந்த கிரகத்தின் காரகத்துவத்துக்கேற்ற நபரை உதவியாக வைத்துக்கொண்டு தொழில் செய்தால் ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும்.
உதாரணமாக, ஒரு ஆண் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீடும், சுக்கிரனும் பலமாக இருந்தால் மனைவியுடன் சேர்ந்து மனைவி பெயரில் தொழில் செய்வதும், ஜென்ம லக்னத்திற்கு 3, 11-ஆம் வீடுகள் பலம்பெற்று, செவ்வாயும் பலமாக இருந்தால் உடன்பிறப்புகளோடு சேர்ந்து தொழில் செய்வதும் நல்லது.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் பலமாக இருந்து தொழில் செய்தாலும், சில கிரகங்கள் சாதகமின்றி அமைந்துவிட்டால் தொழில்ரீதியாக பல இன்னல்களை சந்திக்க நேரிடும். உதாரணமாக ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருந்தாலோ, சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் சூரியனின் வீடான சிம்மத்தில் அமையப் பெற்றிருந்தாலோ அரசுவழியில் சிக்கல்கள், தொழில்ரீதியாக சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். பலமிழந்த கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும்போது தேவையற்ற சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், அக்காலங்களில் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பேச்சைக் குறைத்துக்கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம்.
ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் நீசம், வக்ரம், பாதக ஸ்தானத்தில் அமர்வு, பகை, அஸ்தங்கம் போன்ற நிலையில் அமையப்பெறுமேயானால், பண விஷயங்களைக் கையாளும்போது, தனித்து செயல்படாமல் நம்பிக்கைக்குரியவர்களை முன்வைத்து செயல்படுவதும், பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமுடன் நடப்பதும் நல்லது.
தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தொழிலுக்குக் காரகனாகவும், வேலையாட்களுக்குக் காரகனாகவும் விளங்கும் சனி பகவான் நீசம், வக்ரம் பெற்று அமைந்திருந்தால், அவருக்கு வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படாது. அவர்கள்மூலம் வீணான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நல்ல வேலையாட்கள் அமையாமல் தொழிலி−ல் முன்னேற்றத் தடைகள் உண்டாகும். இப்படி அமையப் பெற்றவர்கள் வேலையாட்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ஒருவருக்கு கிரக நிலைகள் பலமாக அமையப்பெற்று சாதகமான தசாபுக்திகள் நடைபெறுவது மட்டுமின்றி, கோட்சார ரீதியாகவும் சாதகமான கிரக நிலைகள் இருந்தால் தொழி−ல் நல்ல முன்னேற்றமும் லாபமும் அடையமுடியும். அப்படி கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகர் எதிலும் கவனமுடன் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குறிப்பாக அஷ்டமச்சனி, ஏழரைச்சனிக் காலங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை அபிவிருத்தி செய்வதையும் தவிர்ப்பது நல்லது.
தொழில் செய்யும் இடங்களில் அவரவரின் இஷ்ட தெய்வங்களின் படங்களை மாட்டி வைப்பது, தினந்தோறும் ஊதுபத்தி ஏற்றி பூமாலை போட்டு பூஜை செய்து கற்பூரம் ஏற்றுவது நல்லது. பசுவின் கோமியம் கிடைக்குமேயானால் அதை தொழில் செய்யும் இடங்களில் தெளித்தால் நல்ல லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.
வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி புகைபோட்டு பூஜை செய்வது மிகவும் உத்தமம். இதுமட்டுமின்றி புதிதாக எந்தவொரு முயற்சியை மேற்கொள்ளும்போதும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்குவதன்மூலம் வெற்றியும் லாபமும் பெருகும்.
சனி, சுக்கிரன் பலமாக இருந்தால் தொழில் விஷயங்களில் பல்வேறு ஏற்றங்களை அடையமுடியும். சுக்கிரனை வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைநிற வஸ்திரம் சாற்றி, வெள்ளைநிறப் பூக்களால் பூஜிப்பது, சனி பகவானை சனிக்கிழமைகளில் நீலநிற சங்குப்பூக்களால் அர்ச்சனை செய்வதன்மூலம் நவகிரகங்களின் அருளைப்பெற முடியும். தொழி−ல் நல்ல லாபம் ஈட்ட முடியவில்லையே என கவலைப்படுபவர்கள் சுதர்சன ஹோமம் செய்வது, சுதர்சன எந்திரத்தை வைத்து வழிபாடு செய்வது உத்தமம்.
செல்: 72001 63001