வீட்டில் அமைதியில்லை. செல்வம் இருந்தாலும் நிம்மதியில்லை. சிலருக்கு அமைதியும் இல்லை; செல்வமும் இல்லை. இப்படி பலருக்கு பலவிதமான பிரச்சினைகள். இவற்றுக்குத் தீர்வுகாண எளிமையான குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்துவகையான நல்ல விஷயங்கள் நிலைக்க இந்த ஆன்மிகக் குறிப்புகளைப் பின்பற்றினால் நல்ல பலன்கள் நடப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

ஒருவருக்குப் பணம் கொடுக்கவேண்டு மென்றால் வாசற்படியில் நின்றுகொண்டு கொடுக்கக்கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசற்படிக்கு உள்ளே இருந்து கொடுக்க- வாங்கவேண்டும்.

செல்வம் நிலைக்க, விருத்தியடைய, பணம் கொடுக்கல்- வாங்கல் செவ்வாய்க் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தைத் திரும்பக் கொடுக்க இயலும். திரும்பக் கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

Advertisment

dd

வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றில் உட்காரக்கூடாது.

இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் ஆகியவற்றை அடுத்தவர்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது. வெற்றிலை, வாழையிலையை வாடவிடக்கூடாது. வெற்றிலையைத் தரையில் வைக்கக்கூடாது.

எரியும் குத்துவிளக்கைத் தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

வீட்டில் யாரையும் "சனியனே' என்று திட்டக்கூடாது. "எழவு' என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக்கூடாது.

உப்பு தரையில் சிந்தக்கூடாது. அரிசியைக் கழுவும்போது தரையில் சிந்தக்கூடாது.

ராமநாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.

அங்கு அவனைக் கூப்பிடவேண்டிய அவசியம்கூட இல்லை. அதேபோல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படுமிடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்குமிடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும் காலை வேளைகளில் வேங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்து விடும்.

வீட்டில் நெல்லிமரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீயசக்திகளும் அணுகாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

சுமங்கலிகள், பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவையனைத்தும் லட்சுமிக்கு மிகவும் பிடித்தவை.

தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம்வரவேண்டும்.

பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடிவரும் எனும்போது, அவற்றுக்கு தீவனங்கள் வாங்கித் தந்து போஷித்தால் எத்தகைய நன்மை கிடைக்கும்! பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கி றான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளைப் புறாக்களை வளர்க்கலாம்.

சங்கு, நெல்லிக்காய், பசுஞ்சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் ஆகியவற்றைப் பார்க்கவேண்டும்.

தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம்கொண்ட விளக்கேற்று வது இன்னும் சிறப்பு.

விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்றுதான் சொல்லவேண்டும். "அணைப்பது' என்ற வார்த்தையை உபயோகிக்கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

விளக்கைத் தானாக மலையேற விடக்கூடாது. ஊதியும் அமர்த்தக்கூடாது. அப்போது எப்படிதான் மலையேற்றுவது என்றுதானே கேட்கிறீர்கள்? தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு அமர்த்தவேண்டும்.

வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக் கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது. மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிடவேண்டும். ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தைச் செய்யுங்கள்.

எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்கவேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

எந்தப் பொருளையும் "இல்லை, இல்லை' எனக் கூறக்கூடாது. "இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது' என்றே சொல்லவேண்டும்.

எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத- சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

தயிர், அறுகம்புல், பசு முதலியவற்றைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களை தரிசிப்பதும், கோவிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக்கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும்.

இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவிபுரியும். அன்புள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலைவணங்கும்.

அன்னம், உப்பு, நெய் ஆகியவற்றைக் கையால் பரிமாறக்கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் ஆகியவை கோ மாமிசத்துக்கு சமம்.

பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக்கூடாது.

அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.

வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக்கூடாது.

இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள்; உங்கள் இல்லத்தில் செல்வம், அமைதி, ஒற்றுமை எல்லாமும் நிலவும்.