களத்திர பாவம் 7-ஆமிடம் என்பது நாம் அறிந்ததே. மங்கையருக்கு மாங்கல்ய ஸ்தானமென்பது 8-ஆமிடமாகும். இவற்றில் எந்தெந்த கிரகங்கள் இருந்தால் என்ன பரிகாரம் செய்யவேண்டுமென்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சூரியன்
கிரக சாம்ராஜ்ஜியத்தின் ராஜாவான சூரியன் களத்திர பாவத்திலிருந்தால் அதற்குப் பரிகாரமாய், இல்லத்தில் ஓர் இனிய கிரக ஹோமம் செய்வது சிறப்பாகும். அதில், சூரியனுக்குகந்த தாமிரப் பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். எருக்கம்பூ மாலையை சிவலிங்கத்திற்கு அணிவித்துப் பூஜிக்கவேண்டும். லிங்கேஸ்வரரை ஒன்பது முறை பிரதட்சிணம் செய்யவேண்டும்.
பெண்களுக்கு மாங்கல்ய பாவத்தில் சூரியன் இருந்தால், தினசரி சூரிய நமஸ்காரம் செய்தல் அவசியம்.
ஞாயிறுதோறும் சிவலிங்கத்திற்குப் பன்னீர் அபிஷேகம் செய்வித்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து ஆராதிக்கவேண்டும். நாள்தோறும் பன்னிருமுறை சூரிய காயத்திரி சொல்லி வரவேண்டும். "ஓம் ஸ்ரீ பாஸ்கராய வித்மஹே மஹத்யுநிகராய தீமஹி தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்' என்பது சூரிய காயத்ரி மந்திரமாகும்.
சூரிய பகவானுக்குரிய பரிகாரத் தலங்கள்: சூரியனார் கோவில், பருதியப்பர் கோவில், கண்டியூர், திருப்புறவார் பனங்காட்டூர்.
சந்திரன்
ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால், ஐந்து கன்னிப் பெண்களுக்கு, வெள்ளிக்கிழமையன்று பால் பாயசம் கொடுத்து, வஸ்திர தானம் செய்யவேண்டும். தடை நீங்க, பௌர்ணமி நாளன்று வீட்டில் சத்தியநாராயண பூஜை செய்து, சுமங்கலிப் பெண்கள் மூவருக்கு மஞ்சள், குங்குமத்து டன் தாம்பூலம் வழங்கி உபசரித்து, அவர்களின் நல்லாசி களைப் பெறவேண்டும். ஒருமுறை திருமலை சென்று ஏழுமலையான் கோவிலில் அங்கப் பிரதட்சிணம் செய்வது மேலும் சிறப்பான ஒன்று.
மங்கையர் ஜாதகத்தில் மாங்கல்ய பாவமான 8-ல் மதி இருந்தால் அயனத்திற்கு (ஆறு மாதங்களுக்கு) ஒரு முறை இல்லத்தில் சுமங்கலிப் பிரார்த்தனையை முறைப்படி நிகழ்த்தி ஆசிகளைப் பெறவேண்டும். அம் பாளுக்குப் பாலாபிஷேகம் செய்வித்து, பட்டுப் புடவை சாற்றி ஆராதித்து அனுக்கிரகம் பெறுதல் நன்று. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், விளக்குப்பூஜை செய்து, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வது சிறப்பு.
சந்திரனுக்கான பரிகாரத் தலங்கள்: திங்களூர், திருவாரூர், திருப்பதி.
செவ்வாய்
செவ்வாய் 7-ல் அமர்ந் திருந்தால், 41 செவ்வாய்க் கிழமைகளில் ஒரு பொழுதே உணவருந்தி, விரதமிருக்க வேண்டும். மதியம் பருப்பு சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். இரவுப் பொழு தில் மும்முறை ஸ்ரீசுப்ரமணிய புஜங்கத்தை பக்தி சிரத்தை யுடன் பாராயணம் செய்ய வேண்டும். மேலும், படுக்கை விரிக்காமல் வெறும் தரையில் உறங்கியெழுவது சிறப்பு. அமாவாசையன்று அங்காரகனுக்குரிய பரிகாரத் தலங்களான வைத்தீஸ்வரன் கோவில், சிறுகுடி ஆகிய புண்ணியத் தலங்களுக்குச் சென்று உரிய பரிகாரங் களைச் செய்வது நல்லது. இத்தலங்களில் விஸ்வரூப தரிசனம் காண்பது அவசிய மாகும்.
அட்டமத்தில் அங்கார கன் ஆரணங்குகளின் ஜாதகத் தில் அமர்ந்தால், நவகிரக சாந்தி ஹோமம் செய்வது நல்லது. அங்காரகனுக்கு அதி தேவதையான அழகன் முருகனின் அழகிய ஆலயங் களில் ஒன்பது ஆலயங் களைத் தேர்ந்தெடுத்து, ஒன்பது வாரங்கள் அந்தக் கோவில்களில் முருகனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, ஆலயத்தை இருமுறை வலம்வந்து ஆறுமுகனின் அருளாசி பெறுதலே பரிகாரமாகும்.
செவ்வாய்க்கான பரிகாரத்தலங்கள்: பழனி, சுவாமிமலை, மற்றுமுள்ள முருகப் பெருமானின் படைவீடுகள், வைத்தீஸ்வரன் கோவில், எட்டுக்குடி மற்றும் சிறுகுடி ஆகிய தலங்களாகும்.
புதன்
களத்திர பாவத்தில் புதன் இருந்தால், கற்றறிந்த வேத பண்டிதர்மூலமாக "புருஷ சூக்தம்' பாராயணம் செய்வித்து ஹோமமும் செய்யவேண்டும். மதுரை அரசாளும் மீனாட்சிக்கு குங்குமார்ச்சனை செய்து வணங்கி, சொக்கநாதப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வ மாலை அணிவித்து, வில்வத்தால் அர்ச்சித்து வந்தால் விவாகத் தடை, தாமதங்கள் விலகும். புதன் கிழமையன்று நட்சத்திர ஹோமம் அவசியம் செய்தல்வேண்டும்.
ஜாதகத்தில் பெண்களுக்கு அட்டம பாவத்தில் புதன் அமர, வெண்மையான மலர்களால் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யவேண்டும். மேலும், கஷ்டத்தில் இருக்கும் ஐந்து ஏழைக் கன்னிபெண்களுக்கு திருப்தியாக உணவுப் பரிமாறி மகிழ, புதனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
புதனுக்கான பரிகாரத் தலங்கள்: மதுரை, திருவெண்காடு, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவில், ஒப்பிலியப்பன் கோவில் ஆகியவையாகும்.
குரு
தேவகுரு 7-ல் இருந்தால், தினமும் காலையில் தூய்மையுடன் ஆதித்ய ஹிருதயம் சுலோகத்தையும், குரு காயத்ரி, குரு அஷ்டோத் திரத்தையும் சொல்லிவருவது நல்லது. மேற்கண்ட சுலோகங்களைச் சொல்ல முடியாதவர்கள், "ஓம் சூரிய நாராயணாய நமஹ, ஓம் குருவே நமஹ' என்று தினமும் 108 முறை சொல்லிவருவது நல்லது. பொன்னிற ஆடையணிவது நல்லது. குரு எந்திரம் அல்லது சண்முகக் கவசம் செய்து இல்லத்தில் பூஜைசெய்வதும் சிறந்த பரிகாரமாகும்.
குமரிகளின் 8-ஆம் வீட்டில் குரு இருந்தால், சுக்கில பட்சம் எனும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று, சங்கடங்கள் தீர்க்கும் சங்கரனின் புதல்வன் கணேசருக்கு கணபதி ஹோமம் செய்து, மிருத்யுஞ்சய ஹோமத்தையும் சேர்த்துச் செய்யவேண்டும். சனிக்கிழமையன்று வீட்டில் சுந்தரகாண்ட பாராயணம் செய்துவிட்டு வேத விற்பனர்கள் எட்டு பேருக்கு அன்னமிட்டு, வஸ்திர தானமும் செய்யவேண்டும். கோளறு பதிகத்தை தினமும் காலையிலும், மாலை யிலும் சொல்லவேண்டும். இவற்றைச் செய்யமுடியாதவர்கள் வியாழக்கிழமை யன்று நவகிரகத்திலுள்ள குரு பகவானை 18 முறை சுற்றிவந்து, மஞ்சள் வண்ண ஆடை அணிவித்து மனதார வேண்டவேண்டும். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், எட்டுக் குடி, திருத்தணி ஆகிய தலங்களுக்குச் சென்று, குருவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
குருவுக்கான பரிகாரத் தலங்கள்: ஆலங்குடி, திட்டை, திருவலிதாயம், தேவூர், எட்டுக்குடி, குருவித்துறை, பட்டமங்கலம் மற்றும் திருச்செந்தூர்.
சுக்கிரன்
களத்திர காரகனான சுக்கிரன் களத்திர பாவம் ஏறினாலும், கன்னியரின் 8-ஆம் வீட்டில் அமர்ந்தாலும் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதருக்கும், தாயாருக்கும் பரிகார பூஜை செய்யவேண்டும். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சுக்கிர பரிகாரத் தலமான கஞ்சனூர், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில், பண்ருட்டி அருகிலுள்ள திரு நாவலூர் ஆகிய தலங்களிலுள்ள அய்யனுக் கும், அம்பாளுக்கும் மற்றும் அசுர குருவான சுக்கிரனுக்கும் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். சென்னை அடையாறு அஷட் லட்சுமி கோவிலிலும் பரிகாரம் செய்யலாம்.
சனி
சனி பகவான் 7 ஆம் வீட்டில் இருக்க, தேனி அருகேயுள்ள குச்சனூர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று பரிகாரப் பூஜைகள் செய்துவர திருமணத் தடை, தாமதங்கள் விலகும். மங்கையருக்கு 8-ஆம் வீட்டில் மந்தன் இருக்க, காலையிலும் மாலையிலும் ஆஞ்சனேயரை வலம்வந்து பிரார்த்தனை செய்யவேண்டும். எட்டுமுக விளக்கேற்றி சனி பகவான் அஷ்டோத்திரத்தை மூன்றுமுறையும், சனி பகவான் மூலமந்திரத்தை 48 முறையும் சொல்லிப் பிரார்த்திக்கவேண்டும். திருநள்ளாறு சென்று நள தீர்த்தமாடி பரிகாரம் செய்வது சிறப்பு. அங்கு காக்கைக்கும், எட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும் நல்லது. நவகிரக மங்கள ஸ்லோகத்தை தினசரி ஒன்பது முறையும், சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் மிகவும் நல்லது. திருக்கொள்ளிக்காடு மற்றும் திருக்குவளை ஆகிய தலங்களிலும் பரிகாரம் செய்யலாம்.
ராகு
ராகு களத்திர பாவத்தில் இருக்க, நவகிரக சாந்தி செய்வது நல்லது. நல்ல வேதமறிந்த பண்டிதர்களைக்கொண்டு கணபதி ஹோமம், துர்க்கா ஸப்தஸதி பாராயணமும், மகாசண்டி ஹோமமும் கண்டிப்பாய் வீட்டில் நடத்தப்படவேண்டும். ஸ்ரீசக்கர எந்திரம் வைத்து தினசரி பூஜிக்கலாம். கர்நாடக மாநிலத்திலுள்ள சுப்ரமண்யா எனும் புண்ணித்தலம் சென்று சுப்பிரமணியருக்குப் பரிகாரபூஜை செய்வது அவசியமாகும். பெண்களுக்கு 8-ல் ராகு இருக்க, சுதர்சன சுலோகத்தை எட்டுமுறை தினமும் பாராயணம் செய்யவேண்டும். மந்திராலயம் சென்று ஸ்ரீராகவேந்திர மகானை தரிசித்து, அதனருகிலுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயரை வணங்கி வரவேண்டும். துர்க்கையன்னைக்கு அகண்ட விளக்கேற்றி, செவ்வாடை சாற்றிப் பிரார்த்தனை செய்வது உத்தமம்.
ராகுவுக்கான பரிகாரத் தலங்கள்: காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருமணஞ்சேரி, திருப்பாம்புரம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்..
கேது
கேது களத்திர பாவத்தில் இருந்தாலும், பெண்கள் ஜாதகத்தில் 8-ல் இருந்தாலும் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கீழ்ப்பெரும் பள்ளம் எனும் கேதுத் தலம் சென்று பரிகாரபூஜை செய்யவேண்டும். கேதுவுக்கு அதிதேவதையான சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்திலுள்ள ஆலயத்தில் பரிகாரம் செய்வது சிறப்பு. கோயம்புத்தூருக்கு அருகில் திருமுருகன் பூண்டியிலுள்ள ஆலயத்தில் கேது பகவானுக்குத் தனியாக சந்நிதி உள்ளது. அங்கும் பரிகாரம் செய்யலாம். திருச்சி நாகநாதர் கோவிலிலும் பரிகாரம் செய்யலாம்.
இவ்வாறு, உரிய கிரகங்களுக்கான உன்னத பரிகாரங்களை உணர்வுப்பூர்வமாக, உரிய ஆலயங்களுக்குச் சென்று வேண்டிவிரும்பிச் செய்தால் திருமணத் தடைகளும், தாமதங் களும் தவிடுபொடியாகுமன்றோ?
செல்: 63836 25384