ரு தாயும் மகனும் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர்.

அந்தத் தாய், "எனக்கு இவன் ஒருவன்தான் பிள்ளை. இவனின் 30 வயதில் எனது உறவிலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தேன். ஆனால், திருமணம் முடிந்த இரண்டு வருடத்தில், இவனுடன் வாழமாட்டேன் என்று கூறி அவள் பிறந்த வீட்டிற்குச் சென்று விட்டாள். இரண்டு குடும்பத்தினரும் கலந்துபேசி, முறையாக இருவரையும் பிரித்துவிட்டோம். இப்போது அவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறாள்.

tt

என் மகனுக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்து, ஒரு குடும்ப வாழ்க்கை அமைத்துத்தர நிறைய பெண்களைப் பார்த்தேன். ஆனால், பெண்தர பலரும் முன்வரவில்லை. சிலர் பெண் தர சம்மதித்து, திருமணக் காரியங்களைத் தொடங்கிச் செய்யும் போது மனம்மாறி, பெண்தர மறுத்து விடுகிறார்கள். என் மகனின் திருமணத் தடைக்குக் காரணமும், அடுத்து ஒரு திருமணம் நடக்க வழியும் கேட்டு அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் ஓலையில் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார்.

"இந்த மகனின் முதல் மனைவி பிரிந்ததற்கும், இரண்டாம் தாரமாகப் பெண் தர மறுப்பதற்கும், திருமணத்தடைக்கும் விதியோ, கிரகங்களோ, கர்மவினைகளோ காரணமில்லை. இந்தத் தாயின் குணமும், செயலும்தான் காரணம்.

மகனின் 17 வயதிலேயே இவளது கணவன் இறந்துவிட்டான். இவள் மகனைப் படிக்க வைத்தாள். அவனும் நன்குபடித்து, நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து சம்பாதிக்கத் தொடங்கினான். தன் ஆயுள் இறுதிவரை மகன் தன் பேச்சைகக் கேட்டு, தன் கட்டுப்பாட்டில், தனக்கு மட்டுமே ஆதரவாக இருக்கவேண்டுமென்று நினைத்து செயல்பட்டாள்.

மகன் சம்பாத்தியத்தில் பணம் சேர்ந்தது. அத்துடன் இவளுக்குத் "தான்' என்ற அகங்காரம், ஆணவம், அலட்சிய குணமும் உண்டாகிவிட்டது. தன்னைச் சுற்றி வாழ்பவர்களையும், உறவுகளையும் மதிப்பதில்லை.

மகனுக்குத் திருமண வயது வந்தது. வசதியான குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்தால், மருமகள் தன்னை மதிக்கமாட்டாள் என்றெண்ணி, தனது உறவிலேயே வசதிக்குறைவான குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துவைத்தாள். மனைவி பேச்சைக்கேட்டு மகன்- மனம் மாறிவிடக்கூடாதென்று, மருமகள் எதைச் செய்தாலும், அதில் குற்றம், குறையைக் கூறித் திட்டுவாள். கணவனுடன் அதிகம் பேசவிடமாட்டாள். தாயின் இந்த செயலை மகனும் தடுக்கவில்லை. தாய்க்கு ஆதரவாகவே பேசினான்.

மருமகளின் பெற்றோர், உறவினர்கள் வந்தால் அவர்களை மதிக்கமாட்டாள். இந்த நிலை தொடர்ந்தது. அந்தப் பெண், மாமியாரிடம் தான் படும் கஷ்டத்தைத் தனது பெற்றோரிடம் கூறி, இனி கணவனுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று அழுதாள். அவள் பெற்றோர் கணவனை விட்டுப் பிரித்து, தங்கள் வீட்டிற்கு அழைத்துவந்து, வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

மகனின் மறுமணத்திற்குப் பெண் தேடியபோது, அருகில் வசிப்பவர்களிடம், பெண்ணைப் பெற்றவர்கள் விசாரித்தபோது, இவளின் ஆணவ, ஆதிக்க குணத்தையும், முதல் மருமகளையும், அவள் வீட்டாரையும் அவமானப்படுத்தியதையும் கூறினர். இவள் மகனுக்குப் பெண் கொடுத்தால், உங்கள் பெண் சிரமத்துடன்தான் வாழ்வாள் என்றும், இன்னும் பலவிதமாகக் கூறினார் கள். அதனால்தான் பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.

இவள் மகனுக்குத் திருமணம் நடந்து, வம்சம் வளர வாரிசு வேண்டுமென்றால், இவள் தன் சுயநலம், ஆசை, சுகத்தைத் துறந்துவிட வேண்டும். மகனுக்குத் திருமணம் செய்து, மகனையும் மருமகளையும் வேறிடத்தில் வாழவைக்க வேண்டும்.

அவர்களுடன் சேர்ந்து இவள் ஒரே வீட்டில் வசிக்கக்கூடாது. இந்தப் பிறவியில் இந்தத் தாய்க்கு கணவனாலும் நன்மை கிடையாது; பெற்ற மகனாலும் தொடர்ந்து நன்மையடைய முடியாது என்பது இவள் விதி'' என்று கூறி, ஓலையிலிருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியதைக்கேட்ட அந்தத் தாய், எந்த பதிலும் கூறாமல் விடைபெற்றுச் சென்றார்.

கணவன்- மனைவி பிரிவதற்கு, கர்ம வினைகள் மட்டுமே காரணமல்ல; பெற்றவர்கள், குடும்ப உறவுகளின் குணமும் செயலும்கூட காரணமாகும் என்பதை நானும் அறிந்துகொண்டேன்.

செல்: 99441 13267